Friday, December 10, 2010

நான் வசந்தசீலன். உங்களைப் போலவே இந்த உலகத்தினுள் சொல்லாமல் கொள்ளாமல் தள்ளிவிடப்பட்டவன். சாதாரண மனிதப் பிராணி. ஆனால் நான் வாழும் இந்த உலகைப் பற்றியும் என்னைச் சூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களைப் பற்றியும் மிக முக்கியமாக 'வசந்தசீலன்' என்று பெயரிடப்பட்டு எனக்கு தரப்பட்டிருக்கும் இந்த உடலை அல்லது உயிரைப் பற்றியும் நிறைய யோசித்துக் கொண்டிருப்பவன். சொல்லாமலே தரப்பட்டு சொல்லாமலே பறிக்கப்படப் போகும் இந்த வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விடத் துடிக்கும் ஒரு சுயநலவாதி.

முகம் ஒன்று. உதய தினம்...


சற்றுப் பின்தங்கிய ஒரு கிராமம். அத்தியாவசியத் தேவையான வைத்தியத்திற்கும் சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அரசினர் வைத்திய சாலைக்கு செல்லும் மக்கள். இற்றைக்கு சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பு மார்கழி மாதக் குளிரில் அந்த வைத்தியசாலையில் ஒரு பிரசவம். தந்தை, தாய், பிறப்புப் போட்டியில் முந்திவிட்ட நான்கு சகோதரர்கள், உற்றார் உறவினர் சற்றுப் படபடப்புடன் எதிர்பார்த்திருக்க ஐந்தாவதாக ஓர் ஆண் குழந்தை இப்பூமியின் மிச்சமிருக்கும் வளங்களிலும் பங்கு போட வந்து ஜெனிக்கிறது. எல்லோர் வாயிலும் உச்...ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசிக்கும் கலாச்சாரத்தில் பிறந்தும் ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு யோகம் என்றொரு இன்னொரு நம்பிக்கை அதனைக் குழப்ப இதுவும் ஆண் குழந்தைதானா என்ற ஒரு சலிப்பு மேலிட அனைவரும் வீடு திரும்புகின்றனர். பல மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து வந்த அதன் பெரியப்பா அந்தக் குழந்தையைப் பார்க்காமலே தன் ஊருக்கு போய் விடுகிறார். அது பிறந்த அன்று கொண்டாடப்படும் ஒரு கிறிஸ்தவத் தெய்வமான 'லூசி' என்ற ஒரு பெண் பெயர் கூட ஏற்கனவே தயாராய் வைத்திருந்தார்கள். ஆனால் அதனை வைக்க முடியாமல் போய்விடுகிறது. அந்தக் குழந்தையின் அப்பா மற்றும் அண்ணாமார்களின் பெயர்கள் எல்லாம் 'சீலன்' என்ற பெயரில் முடிவடையும். எனவே இக்குழந்தைக்கும் 'சீலன்' என்று முடிப்பதற்கு அமைவாக பெயர் தேடப்பட்டு இறுதியில் 'வசந்தசீலன்' என்று திரு நாமம் வழங்கப்படுகிறது.


என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தர். மாதாமாதம் நிச்சயமாக சம்பளம் வந்துவிடும்; அதனால் சாப்பாட்டுக்காவது பஞ்சமிருக்காது என்ற உத்தரவாதமளிக்கப்பட்ட அரசு பதவி. அரசு இயந்திரத்தின் ஆயிரமாயிரம் கைகளில் ஒன்றான ஓர் இயந்திரன். மும்மொழிகளில் எழுத வாசிக்க பேச முடிந்த அதிதிறமைச் சித்தியாளராய் இருந்தாலும் 'காக்கா பிடித்தல்' எனும் அரச தேசிய மொழியில் ஆனா, ஆவன்னா கூடத் தெரியாதவர்.


என் அம்மா ஒரு இல்லத்தரசி. உண்மையிலேயே எங்கள் வீட்டின் ஆட்சியாளர். அப்பாவின் மதிப்பான பதவியின் மிகக் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்திய ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பிரமாதமான பொருளியல்வாதி. அப்பா எட்டு மணி நேரம் வீட்டுக்காக உழைக்க அம்மா இருபத்து நான்கு மணி நேரம் உழைத்தார். மேலதிகமாக தையல் மெசினை வேலை வாங்கி கொஞ்சம் சம்பாதித்தவர். அதன் புண்ணியத்தில் எங்கள் ஆடைகளின் தையல் கூலி இல்லாமல் போனது.


நான் பிறந்து நான்கு வருடங்களின் பின் எனக்கு சுய உணர்வு வந்தபோது என் மூத்த அண்ணா திருச்சபையில் சேர்ந்து பாவிகளை மீட்பதற்காக குருவானவராகும் முயற்சியில் யாழ்பாணத்தில் படித்துக் கொண்டிருந்தார். இரண்டாவது அண்ணன் மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் படிப்பதற்காக அங்கிருக்கும் விடுதியில் சேர்ந்திருந்தார். அப்பா, அம்மா, எனக்கு நேர் மூத்த இரு அண்ணாக்கள் இவர்களுடன் விடத்தல் தீவு எனும் சற்று அழகிய கிராமத்திலே எனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என் வாழ்க்கை இனிதே ஆரம்பித்தது...


முதலில் என் கிராமம். அழகிய பூஞ்சோலைகள் நிறைந்த பச்சைப் பசேலென விரிந்த வயல் வெளிகள் நிறைந்த....இப்படி வர்ணிக்க முடியாவிட்டாலும் அது ஒரு வித்தியாசமான கிராமம். இலங்கை நாட்டின் மன்னார் மாவட்டத்தில் நகரிலிருந்து சுமார் பதினைந்து மைல்கள் தள்ளி கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. 'நாயாறு' என்றழைக்கப்படும் ஒரு 'நதி' கிராமத்தின் அருகே கடலில் கலக்கிறது. கிராமத்திலிருந்து ஒரு மைல் தள்ளி மக்களின் ஒற்றுமைச் சின்னமாக ஒரு குளம். இப்படி ஒரு கிராமத்திலேயே ஆறு, குளம், கடல் என்பன இருப்பது மட்டும் ஆச்சரியமல்ல. ஊரவர்களின் பிரதான தொழில்களாக மீன் பிடி, விவசாயம் என் இரண்டுமே காணப்பட்டன. இங்கே பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாலோ அல்லது அவர்களின் ஒற்றுமையை காட்டும் விதமாகவோ மாதா மற்றும் யாகப்பர் என இரு தேவாலயங்கள் காணப்படுகின்றன. இன்னும் இந்துக்களுக்கு ஒரு கோவிலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு மசூதியும் காணப்படுகின்றன. அடுத்த தலைமுறை புத்திசாலிகளை உருவாக்குவதற்கு ஒரு கிறிஸ்தவ பாடசாலையும் ஒரு முஸ்லீம் பாடசாலையும் காணப்படுகின்றன. என் வீடு ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது.

எனக்கு இந்த வாழ்க்கையின் மிக மிக ஆரம்ப நினைவாக ஒரு சம்பவம் ஞாபகமிருக்கிறது. நான் என் வீட்டின் உள் அறையிலிருந்து வெளியே வந்து வெளி வாசற் படியில் அமர்கின்றேன். அப்போது உள்ளேயிருந்து அம்மாவின் குரல் ஒரு உடுப்பும் அணியாமல் வெளியே இருக்காதே என்று கண்டிக்கிறது. அப்போதுதான் நான் ஆதாமை போல நிர்வாணம் என்றால் என்பதை முதன்முதலாக உணர்ந்து சென்று காற்சட்டையை போட்டுக் கொள்கிறேன்.


எங்கள் வீடு சிறு மொட்டை மாடியைக் கொண்டது. ஆனால் நான் பிறக்கும் போதே அந்த வீட்டிற்கு நாற்பது வயதாகிவிட்டிருந்தது. பழங்காலத் தூண்கள், கோலங்களைக் கொண்டது. என் வீட்டுக் கண்ணாடியினால் வெளியே பார்த்தால் அக்கண்ணாடியின் அமைப்பினால் வெளியே வரும் நபர் நான்கைந்து பேராகத் தெரிவார். அதனை பார்த்துக் கொண்டிருப்பதும் முற்றத்துக் கேற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டே அங்குமிங்குமாக ஆடுவதும் மொட்டை மாடியில் நின்று கொண்டு வீதியில் போய் வருவோரை வேடிக்கை பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்காக இருந்தது. சில நேரங்களில் வீட்டுக் கதிரைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவிட்டு பக்கத்து சிறுவர்களுடன் 'பஸ் விளையாட்டு' விளையாடுவோம்.


எனது இரண்டாவது தெளிவான நினைவுச் சம்பவம் நான் நேசரிக்குச் சென்றது. ஆனால் அந்நேசரிக்குப் போவதற்கு முன்பே எங்கள் ஊர்ப் பிள்ளைகள் என் வீட்டிற்கு அருகில் ஒரு மண் வீட்டில் வசித்த ஒரு பெண்மணியிடம் ஆரம்ப எழுத்துக்கள் படிக்க போனது ஞாபகமிருக்கிறது. ஆனால் நானும் போனதாய் இல்லை. நான் நேசரிக்குச் செல்ல ஆரம்பித்த பின் ஒருநாள் நாங்களும் ஆசிரியரும் ஆலயத்திற்கு சென்று செபம் செய்தபின் வெளியே வந்தோம். "சரி, எல்லோரும் வீட்டுக்குப் போங்க.." என்று டீச்சர் சொன்னதுதான் தாமதம் எல்லோரும் 'ஓ' என்று கூச்சலிட்டபடியே ஓடினார்கள். (எங்கள் வீடுகள் அருகிலேயே இருந்தமையால் எங்களைக் கூட்டிப் போக பெரியவர்கள் யாரும் வருவதில்லை) . ஆனால் நான் கூச்சலிடவுமில்லை. ஓடவுமில்லை. நான் பிறப்பிலேயே அமைதியான கூச்ச சுபாவமுள்ளவனாகத்தான் இருந்திருக்கிறேன். என் நண்பன் மைக்கேல் தன் சேர்ட்டைக் கழற்றி காற்றில் சுழற்றியபடி ஓடினான். நான் வீட்டுக்கு வந்தவுடன் இதை என் அம்மாவிடம் சொன்னேன். "அதெல்லாம் கெட்ட பழக்கம். அப்படியெல்லாம் செய்யக்கூடாது, சரியா?" என்று அம்மா எனக்கு அறிவுறுத்தினார். நான் முதன் முதலாக நல்ல பிள்ளையாக இருப்பதற்கான ஒரு விதியை அறிந்து கொண்டவனாக தலையாட்டினேன்.

நாங்கள் எங்கள் அப்பாவின் பெரியய்யா வீட்டிலேயே இருந்தோம். எங்கள் வீட்டில் பெரிய வீடு, சிறிய வீடு என் இரு பகுதிகள் இருக்கின்றன. சிறிய வீடு இரு அறைகளையும் ஒரு சமையலறையையும் கொண்டது. அதில் பெரியய்யாவும் பெரியம்மாவும் வசித்தார்கள். பெரிய வீடு அளவில் பெரிய இரு அறைகளையும் வரவேற்பறையையும் கொண்டது. அதில் நாங்கள் வசித்தோம். பெரியய்யாவுக்கு பிள்ளைகள் இல்லை. அவர் தன் வீட்டின் முன் பகுதியை ஒரு பல சரக்கு கடையாக நடத்தி வந்தார்.


நான் அப்போது கடைசிப் பிள்ளையாக இருந்ததனால் எல்லோரும் என்னைக் 'கடைக் குட்டி' என்று அழைத்தார்கள். ஆனால் அப்பதவியும் வெகு விரைவில் பறி போனது. என் ஐந்தாவது வயதில் அம்மாவின் வயிற்றில் உண்மையான கடைக்குட்டி தோன்றிவிட்டது. ஒரு நாள் நான் நேசரி முடிந்து வந்தபோது அம்மாவைச் சுற்றி அண்ணாக்கள் நின்றிருந்தார்கள்.


அம்மா " தம்பி வயிற்றில் உதைக்கிறான், தொட்டுப்பார்..."என்றார்.


நான் தொட்டுப் பார்த்தேன். அப்படி ஏதும் உதைக்கவில்லை.


"இல்லையே!" என்று மறுத்தேன். எல்லோரும் சிரித்தார்கள்.


எனக்கு ஆறு வயதாகியபோது எல்லோரும் பெண் பிள்ளையை எதிர்பார்த்து சலித்து ஓய்ந்திருந்தபோது ஆறாவது பிள்ளையாக என் தங்கை பிறந்தாள். அவளின் குழந்தை பிராய நினைவுகள் இன்னும் என் மனதினின்றும் அகலவில்லை. பெரியய்யாவும் பெரியம்மாவும் அவள் மீது பாச மழையே பொழிந்தார்கள். ஒரேயொரு தங்கச்சி, ஒரேயொரு மகள், கடைக்குட்டி, ஐந்து அண்ணன்மாருக்கு ஒரே தங்கச்சி என்ற பல பட்டங்களை அவள் தன் தலையில் சுமந்தாள். சிறுவயதில் அவள் அடம்பிடித்து அழும் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. வாயை தன் பெரியம்மா போல உம்மென்று கோணலாக வைத்துக்கொண்டு மண்ணில் விழுந்து புரண்டு அழுவாள். அதில் வேடிக்கை என்னவென்றால் வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே முற்றத்திற்கு ஓடி வந்து மண்ணில் 'தொபீரென' விழுவாள். அவள் அழுவதை பார்த்து நாங்கள் சிரிப்போம்.

பெரியய்யா அவள் மீது உயிரையே வைத்திருந்தார். அவர் அவளை தன் மடியில் வைத்துக் கொண்டு "தங்கம்...தங்கம்...என்ட தங்கம்...தங்கம்..."என்று தாலாட்டுப் பாடுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவர் சரியா கஞ்சன்  என்பார்கள். ஆனால் நான்சிக்கு நிறைய செலவழிப்பார். ஒருதடவை சின்ன சைக்கிள் வாங்கிவந்தார். பின்னால் குசன் கதிரை போலிருந்த சேரில் அவளை அமர்த்திவிட்டு முன்னாள் சைக்கிளை செலுத்த டிரைவராக என்னை தூக்கி அமர்த்தினார். ஆனால் என் உருவம் அப்போதே அதற்குபொருத்தம் இல்லாமலிருக்க என் பதவி உடன் பறி போய் என் தம்பி ஞானராஜ் நியமிக்கப்பட்டான்.


ஒரு முறை பக்கத்து வீட்டு சுமத்ரா எனும் இளம்பெண் எங்கள் வீட்டிற்கு வந்து என் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் செல்லமாக தங்கையைப் பார்த்து " அடிக் கள்ளி!" என்றாள். அதைக் கேட்டதுதான் தாமதம் பெரியய்யா " என் தங்கத்தையா கள்ளி என்று சொல்கிறாய்?" என்று அவளை கண்டபடி ஏச ஆரம்பித்து விட்டார். அவள் அழ அழ விடாமல் பெரியய்யா தொடர்ந்து ஏசிக் கொண்டேயிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அம்மா ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் "அவள் என் மகளைதானே சொன்னாள். பரவாயில்லை. நீங்கள் அதுக் கொன்றும் சொல்லத் தேவையில்லை!" என்று முகத்திற்கு நேரே சொல்லிவிட அவர் அதிர்ந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்.


என் அம்மா அப்படி பெரியவர்களை மதிக்காமல் பேசுபவரல்ல. (வழமையாக அவர் பெரியய்யாவுடன் பேசவேமாட்டார்.) ஆனால் சில நேரங்களில் தன் மனதில் அநியாயம் என்று பட்டால் யாரென்றும் பாராமல் பொங்கிவிடுவார். என் தங்கை மீது வைத்திருந்த அளவற்ற பாசத்தால் அந்த நேரத்தில் பெரியய்யா ஒரு குழந்தையாக மாறிவிட்டிருந்தார்.


ஆனால் இந்த சம்பவம் பெரியய்யாவை வெகுவாக பாதித்துவிட்டது. அவர் இறந்த பிறகு அவரது டைரியில் அவர் இதனைக் குறிப்பிட்டு 'இன்று என் தங்கத்தை ஏசியவளை நான் ஏசினேன். ஆனால் அதன் அம்மாவோ என்னை ஏசி விட்டார் ' என்று எழுதியிருந்ததை வாசித்தோம்.


இந்த இடத்தில் பெரியய்யாவைப் பற்றி சில விடயங்கள்...பெரியய்யா பழைய படங்களில் வரும் அப்பாக்களைப் போலலல்லாமல் உடல் திடகாத்திரமும் உயரமும் கொண்டவர். வயது அப்போது எண்பத்தி நான்கு. கொஞ்சம் கர்வம் பிடித்தவர் என்றும் சொல்லலாம். அக்காலத்திற்கே உரிய சாதி வெறியும் அவரிடம் குடி கொண்டிருந்தது. இதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். எங்கள் வீட்டு முற்றத்து மதிலில் வீட்டுக்குள் நுழைவதற்கு பிரதான வாயிலை விட மூலையில் இன்னொரு சிறு வாயிலும் இருந்தது. அக்காலத்தில் கிராமங்களில் மலசலகூடத்தில் வாளி வைத்து எடுக்கும் முறை இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனை மாற்றுவதற்கு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த 'கோணாமலை' என்றொருவர் எங்கள் வீட்டிற்கு வருவார்.(நிச்சயமாக அது சொந்தப் பெயராக இருக்காது என்று நினைக்கிறேன்!) அவர் வந்து செல்வதற்காகத்தான் விசேடமாக தனியே சிறு வாயில் அமைக்கப் பட்டிருந்தது. அது சுத்தத்தை மட்டும் அல்லாது பெரியய்யாவின் சாதி உணர்வையும் காட்டி நின்றது.

என் தங்கையினால் முரண்பட்ட இன்னொரு உறவும் இருக்கிறது. அவர் அப்பாவின் தங்கை. எங்கள் மாமி. அவர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்து என் தங்கையின் நீளமான கூந்தலைக் கண்டவர் தான் இவளுக்கு 'பொப் கட்' செய்கிறேன் என்று சொல்லி அதனை வெட்டி விட்டார். இதைக் கேள்விபட்ட அம்மா வந்து "என்ன இப்படி செய்து விட்டீர்கள்?" என்று ஆதங்கப்பட்டதுதான் தாமதம் "நான் என் அண்ணாவின் மகளுக்கு என்னவும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்?" என்று மாமி பொரிந்து தாள்ளத் தொடங்கினார். அம்மா திகைத்துப் போய் அழுது கொண்டு நின்றதும் மாமி பெரியய்யா வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு ஏசிக் கொண்டிருந்ததும் அப்படியே என் மனத்திரையில் நிற்கின்றது. ஒரு தாயினைப் பார்த்து இப்படிக் கேட்ட மாமியின் சிறு பிள்ளைத்தனத்தை இப்போது நான் யோசித்துப் பார்க்கின்றேன். சிலவேளைகளில் மாமியின் வார்த்தைகளுக்கு வேறு மறைமுக அர்த்தங்களும் இருந்திருக்கலாம். அது இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியாக உருவெடுத்திருக்கலாம். ஆனாலும் என் அம்மா அழுது நான் பார்த்த முதல் நிகழ்ச்சி இது.


இந்த இடத்தில் ஒரு விடயத்தை உங்களுக்கு உறுதியாகாக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இங்கே நான் விபரிக்கின்ற மற்றும் விபரிக்கப் போகின்ற சம்பவங்களில் சம்பந்தப்படும் நபர்களின் நடத்தைகளைப் பற்றிய என் எண்ணக்கருக்களை மட்டுமே நான் கூறுகிறேன். ஒரே சம்பவத்தை வேறு வேறு நபர்கள் வேறு வேறு விதமாக பார்ப்பார்கள். நான் எப்போதுமே யாரையுமே நல்லவர்கள், கெட்டவர்கள் என வரையறுத்துவிடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்கிறார் என்றும் அந்த இடத்தில் அவரது நடத்தை சரியா பிழையா என்பதை மட்டும் என கண்ணோட்டத்தில் விதந்துரைக்கின்றேன். மாமி, அம்மா,நீங்கள் மற்றும் நான் உட்பட எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே என்பதை மனதிற் கொள்க.நிற்க. என் தங்கையின் புராணத்தை தற்காலிகமாக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அப்பா ஒரு விவசாய போதனாசிரியர் என்பதனால் அப்போது அவர் ஒரு கோழிப்பண்ணை வீட்டில் ஆரம்பித்தார்.  அதற்காக ஒரு கொட்டிலும் கட்டினார். சும்மார் ஐம்பது அறுபது கோழிகள் தான் இருக்கும். அதற்கு தண்ணீர் வைப்பதும் அதன் தரையில் உமி போட்டதும் ஞாபகம் இருக்கிறது.  மற்றும் அவற்றின் சத்தங்களும் விடியற்காலையில் மாமரத்தின் அடியில் மாங்காய் பொறுக்குவதுபோல கோழி முட்டைகள் சேகரிப்பதும் இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னாள் நாங்கள் வளர்த்து நான்சிக்கு பயமுறுத்தல்  காட்டின கழுத்து வெட்டி கோழியின் வாசம் இன்னும் இருக்கிறது.  


அடுத்து எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத சம்பவமாக அமைவதுதான் என் வாழ்விலும் மறக்க முடியாத சம்பவமாக நடந்தது. அது நான் முறைசார் கல்விக்குள் காலடி எடுத்து வைத்த நாள். அதுதான் நான் பாடசாலைக்கு சென்ற முதல் நாள். எங்கள் கிராமத்து பாடசாலைதான். பெயர் விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை. அப்பாதான் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். நான் எந்த அடமும் பிடிக்கவில்லை.அதிபரின் அறைக்கு சென்றோம். அப்பா என் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அதிபருடன் நீண்ட நேரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்க நான் அந்த அறையிலிருந்த ஜேசுநாதரின் கலண்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரக்கமான கண்கள். அருள் வழங்கும் கைகள். இதே மாதிரியான ஜேசுவின் படம் நான் ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் அன்றைக்கு நெடுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின் முதலாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்னை அழைத்துச் சென்றார். நான் அப்பா எங்கே போனார் என்று கூட கவனிக்காமல் அவர் பின்னாலேயே சென்றேன். வகுப்பில் எப்படித்தான் வந்தவுடனேயே என்னைபற்றி கணித்து விட்டார்களோ தெரியவில்லை; கடைசி வரிசையில் இருத்தப்பட்டேன். பாடங்கள் நடந்தன. ஒரே ஊரானபடியாலும் வகுப்பில் இருந்த மாணவர்களில் அநேகம்பேரைத் தெரிந்திருந்தமையாலும் பயம் ஏதும் ஏற்படவில்லை.


என் பக்கத்தில் ரஜினி அமர்ந்திருந்தான். அவன் என் பக்கத்து வீட்டுக்காரன்தான். அவன்தான் என் முதலாவது தோழன். ஆனால் என் முதல் நாளை மறக்கமுடியாமல் ஆக்கியவனும் அவன்தான். தன் பென்சில் கூர் முறிந்து விட்டது என்று என்னுடையதைக் கேட்டான். கொடுத்தேன். அடுத்த நிமிடம் என் பென்சிலேயே இரண்டாக முறித்துவிட்டான். அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப் படாமல் இருந்தேன். பின் ஆசிரியர் வந்து "முதல் நாளே பென்சிலை முறித்துவிட்டாயா?"என்று 'செல்லமாக' கேட்டபோதுதான் அதனைப் பற்றிக் கவலைப் படவேண்டும் என்று புரிந்தது. எனக்கு முதன் முதலாக கவலை என்ற எண்ணக்கருவைக் கற்பித்தவர் அவர்தான்.


நான் முதன் முதலாக ஆனா ஆவன்னா எழுதியது ஞாபகம் இல்லை என்றாலும் முதன்முதலாக என் பெயரை ஆங்கிலத்தில் எழுதியது இருக்கிறது. ஏனெனில் அதை சொல்லித் தந்தது என் அப்பா. வீட்டு முற்றத்தில் நான் கேட்டதற்காக அப்பா அதனை மண்ணில் எழுதிக் காட்டினார். VASANTHASEELAN


அடுத்து நான் முதன் முதலாக காயப்பட்ட ஞாபகம் நெஞ்சில் இனிக்கின்றது...! எனக்கும் விளையாட்டிற்கும் போன ஜென்ம விரோதம். கடும் பகை. இது வரைக்கும் எங்குமே ஸ்போர்ட்ஸ் பக்கம் தலை வைத்து படுத்ததில்லை. என் உடலுக்கும் முக்கியமாக என் மனத்திலும் விளையாட்டு ஒரு ஒவ்வாமையாக இருந்தது. அதனால் முதலாம் ஆண்டில் பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடந்தபோது அதனைப் வேடிக்கை பார்க்கக் கூட போகாமல் வகுப்பில் இருந்தேன். பின் யாரோ ஒருவன் வற்புறுத்தினான் என்று புறப்பட்டேன். மைதானம் பாடசாலைக்கு பின்னால் இருந்தது. விதி நேர் வழியால் போனால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று அறுந்து கிடந்த முட்கம்பி வேலியால் போவோம் என்றது. என்னோடு வந்தவன் வெகு லாவகமாக நுழைந்து அப்பக்கம் சென்றுவிட்டான். நான் நுழைந்தபோது இவ்வளவு நல்ல சிறுவன் இப்படி குறுக்கு வழியெல்லாம் பாவிக்க அனுமதித்தால் கேட்டுப் போய்விடுவான் என்று எண்ணிய முட்கம்பி உடனடியாக தண்டனை கொடுக்க எண்ணி என் தலையில் ஆழமாக ஒரு கீறு போட்டது. வெளியே வந்து விட்ட எனக்கு முதலில் அது உறைக்கவில்லை. சற்று நேரத்தில் என்ன இது தலையில் ஏதோ திரவமாக கசகசக்கிறது என்று தலையில் கை வைத்துப் பார்த்த எனக்கு திக்கென்றது. அப்படியே 'கொழகொழவென' ரத்தம் கொட்டியது. முதலில் அதற்கு என்ன செய்யவேண்டும் என்றே புரியாமல் நின்றேன். அப்போது அருகில் நின்ற அருமை நண்பன் அதைப் பார்த்து விட்டு " ஆஹா, தலையில காயம்பட்டு விட்டாயா... உன் வீட்டில் நல்லா அடி வாங்கப் போகிறாய்!" என்று கை கொட்டி சிரித்தான். எனக்கு அப்போதுதான் காயம் வலிக்க ஆரம்பித்தது. ஆனால் அதை விட இக்காயத்தை யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மேலோங்கியது. பாடசாலையில் யாரிடமும் சொல்லாமலே வீட்டை நோக்கி ஓடினேன். ஆனால் வீட்டில் இத்தனை சாதரணமாக எடுத்துக் கொண்டார்கள். நடந்த சம்பவத்தைக் கேட்டார்கள். நான் முழு உண்மையும் சொன்னேன். அருகிலுருந்த ஒரு நாட்டு வைத்தியரிடம் கொண்டு போய் தலையில் வட்டமாக கட்டுப் போட்டு விட்டார்கள். அம்மா "பார்த்துப் போறதில்லையா?" என்று ஒரு வரிதான் கண்டித்தார். ஆனால் மருந்து போட்டு விட்ட அவ்வைத்தியர் நான்தான் ஏதோ இந்த ஊரிலேயே தலை சிறந்த குழப்படிகாரன் என்று முடிவு செய்து சிகிச்சை முடியும் வரை அட்வைஸ் என்ற பெயரில் திட்டி கொண்டே இருந்தார்.

ஆனால் இச் சம்பவத்தில் ஒரு உண்மையைக் கற்றுக் கொண்டேன். என்ன சம்பவம் நடந்தாலும் உண்மையை எல்லோரிடமும் முக்கியமாக வீட்டில் சொல்லி விடுவது நல்லது. விளைவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இத்தீர்மானத்தின் மூலம் நான் சில பக்க விளைவுகளையும் பிற்காலத்தில் சந்தித்தேன்.


அடுத்து முதன் முதலாக ஏமாற்றமடைந்த சம்பவம். என் அப்பா ஒரு யமஹா பைக் வைத்திருந்தார். ஆனால் சத்தியமாக அதில் நான் பிரயாணித்ததாக இதுவரைக்கும் எனக்கு ஞாபகம் இல்லை.சிலவேளை மிகச் சிறு வயதில் சென்றிருக்கலாம்.


ஒரு நாள் அப்பா என் அண்ணாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு எங்கோ செல்லப் போவதை கண்ட நான் என்னையும் கொண்டு செல்லும்படி அடம்பிடித்தேன். முடியாது என்று மறுத்த என் பெற்றோர் கடைசியில் பின்னேரம் வந்து அப்பா என்னைக் கூட்டிச் செல்வார் என்று வாக்குறுதி தந்தார்கள். அதிசயமாக நானும் சமாதானமாகிவிட்டேன். எவர் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடும் 'அப்பாவிக்' குணம் எனக்கு பிறப்பிலேயே இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அன்று முழுவதும் மாலை எப்போது வரும் எங்கள் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தபடியே காத்திருந்தேன். ஆனால் அன்று இரவாகியும் அப்பா வரவேயில்லை. எங்கேயோ தங்கிவிட்டார். அது அம்மாவிற்கும் தெரியும். என்னைச் சமாளிப்பதற்காக வருவார் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். பின் நான் அம்மாவிடம் கேட்டபோது அம்மா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு " ஐயோ, அப்பா இன்னும் வரவில்லையே...பிள்ளையை பைக்கில ஏத்திக் கொண்டு போறதெண்டு சொல்லிப் போட்டு ஏமாத்திப் போட்டார்தானே...!" என்றார். பின் தையல் வேலையாக வீட்டுக்கு வந்திருந்த வதனா என்ற பக்கத்து வீட்டுப் பெண்ணிடமும் விஷயத்தை அம்மா சொல்ல அவரும் 'உச்' கொட்டினார். இருவரும் உண்மையாகக் கவலைப்படவில்லை. நடிக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.


நான் அப்பாவுடன் பைக்கில் போகாமல் விட்டதைவிட அப்பாவும் அம்மாவும் என்னிடம் பொய் கூட சொல்வார்களா என்பதே எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. பிற்காலத்தில் நான் மிக உறுதியாக சிலவற்றை எதிர்பார்க்கும்போதே அடிமனதில் நான் ஏமாந்தும் போகலாம் என்ற ஒரு எண்ணம் ஓடுவதை இச்சம்பவத்தின் தாக்கத்தால் தவிர்க்கமுடியாமல் போனது.


சிறுவயதில் 'போளை' என்று எங்களூரில் அழைக்கப்பட்ட கோலிக்குண்டு விளையாட்டு, கடற் சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒரு வகை ஆட்டம் மற்றும் கிளித்தட்டு போன்றவற்றை நானும் அயல் சிறுவர்களுடன் எங்கள் வீட்டின் முன்னாள் இருக்கும் வீதியில் ஆடியிருக்கிறேன். ஆனால் 'அழாப்பாமல்'( கள்ள ஆட்டம் ஆடாமல்) தோற்றுப் போகிறவனும் நான்தான். நல்லவன் என்பதால் அல்ல. அப்படி ஆடும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை என்பதே உண்மை.


கடற்கரை அருகே அமைந்த ஊர் என்றதும் நீண்ட வெள்ளை மணல்கள் பரந்திருக்க அலைகள் ஓவென ஓடிவந்து கால் நனைத்துவிட்டுப் போகும் கடல் என்று எண்ணிவிடாதீர்கள். எங்கள் ஊர்க் கரை ஓரம் முழுவதும் கடலில் கண்டால் காடுகள் சூழ்ந்திருப்பதால் ஊருடன் தொட்டுக் கொண்டிருக்கும் கடலில் அலைகளைக் காண முடியாது. அமைதியான கடலில் தோணிகளும் இயந்திரப் படகுகளும் வரிசை கட்டிக் கொண்டு நிற்பதை மட்டுமே காணலாம்.

என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் கடலுக்கும் எனக்கும் வெகு தூரம். ஊரில் கட்டிளம் பருவத்தினருக்கு பகுதி நேர வேலையே தங்கள் அப்பாக்களின் கடற்தொழிலுக்கு உதவுவதுதான். முக்கால்வாசி வீட்டுகளில் விதம்விதமான வலைகளும் 'பறி' எனப்படும் றால் போன்றவற்றை பிடிக்கப் பயன்படும் பெட்டிகளும் காணப்படும். ஆனால் ஒரு மீனவக் கிராமத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோருக்கு அதில் சம்பந்தமோ ஆர்வமோ இல்லாத காரணத்தினால் எனக்கு கடல் தொழிலைப் பற்றியோ குறைந்தது மீன்களின் வகைகளைப் பற்றியோ தெரியாமற் போய்விட்டது.


எங்கள் ஊரின் இரு ஆலயங்களுக்கும் பொறுப்பாக ஒரு பாதிரியார் இருந்தார். அவர் பெயர் பீற்றர். அவர் ஞானப்பிரகாசியார் பீடப் பணியாளர் சபையை நடத்தினார். அதில் சிறுவர்கள் நாங்கள் இணைந்திருந்தோம். மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறும். எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் திருப்பலி வேலையில் குருவானவருக்கு உதவி செய்வதற்காக இச்சபையில் சேர்க்கப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட நேர அட்டவணைப் படி தினப் பூசையிலும் ஞாயிறுப் பூசைகளிலும்பாதிரியாரைப் போலவே நீண்ட தொங்கலாடைகளை அணிந்துகொண்டு பங்குபற்றினோம். ஞாயிறுப் பூசைக்கு சற்றுப் 'பெரிய' சிறுவர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.


தினமும் கடமை தரப்பட்ட மூன்று சிறுவர்களும் பூசை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஆலயத்திற்கு சென்று பூசைக்கான ஆயத்த வேலைகளை செய்வோம். சிலவேளைகளில் காலை ஆறுமணிக்கு ஆரம்பிக்கும் பூசைக்கு ஐந்து மணிக்கே தனியே புறப்பட வேண்டியிருக்கும். அப்படி ஒருமுறை அதிகாலை இருளில் நான் ஆலயத்துக்கு செல்லும்போது வீதியில் படுத்திருந்த நாயை மிதித்து அது சீறிப் பாய உயிரைக் கையில் பிடித்தபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடியது ஞாபகம் வருகிறது.


நான் அச்சபையில் சேர்ந்து முப்பத்தாறு தடவைகள் பூசையில் பணியாற்றியிருக்கிறேன். அதை நான் எண்ணியதற்கான காரணத்தை சொன்னால் உங்களுக்கு சற்று நம்பக் கடினமாக இருக்கும். முன்றாம் ஆண்டு படிக்கும் போதே எனக்கு எதிர்காலம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன. அதிகம் யோசிப்பேன். அப்போதே அம்மா வாசிக்கும் நிறைய கதைப் புத்தகங்களை படித்ததாலோ என்னவோ பெரியவனானதும் நான் எப்படி வாழ்வேன், கதைகளில் நடக்கும் சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடக்குமா என சிந்திப்பேன். ஆனால் உறுதியாக நான் எதிர்காலத்தில் பணக்காரனாக புகழ் பெற்று வாழ்வேன் என்றுதான் நினைத்திருந்தேன். சிலவேளைகளில் இது கூட எல்லோரும் சின்ன வயதில் ஆசைப்படும் விடயமாக இருக்கலாம். ஆனால் புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கை வரலாற்றினை பாடப் புத்தகங்களில் படிக்கும் போது அவர்கள் புகழ் பெறும் முன் அவர்களது சிறுவயதில் நடந்த சிறு விடயங்களைக் கூட விபரித்து எழுதியிருப்பார்கள்.அந்த மகான் இத்தனையாம் ஆண்டு இன்ன திகதியில் இன்னாருக்கு மகனாக அவதரித்தார்...சின்ன வயதில் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றன என்றெல்லாம் விபரித்திருப்பார்கள். அப்படியென்றால் நான் பெரியனானதும் அதுவும் பெரிய ஆளானதும் சின்ன வயதிலே நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்பார்கள் அல்லவா...?! அதற்காகவே சற்று மித மிஞ்சிய தன்னம்பிக்கையுடன் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்க முயற்சித்தேன்.


பீற்றர் பாதர் ஒரு வினோதமான மனிதர். எப்போது சிரிப்பார், எப்போது கொதிப்பார் என்றே சொல்ல முடியாது. அவருக்கு ஹிஸ்டீரியா நோய்தான் இருந்திருக்க வேண்டும். முதன்முதலாக ஞாயிறு பூசையில் பீடபணியாளராக களமிறக்கி விடப்பட்டபோது வழமையாக நான் பணியாற்றும் தினப் பூசைகளை விட வித்தியாசமான சடங்குகளைக் கொண்டிருந்ததால் பூசை வேளையில் ஏதோ தவறு செய்துவிட்டேன். அப்போதே பாதரின் முகம் அஷ்ட கோணலாவதை கவனித்தேன். உள்ளுர நடுக்கத்துடன் பூசை கழிந்தது. பூசையின் கடைசிப் பாடல் பாடப்பட பாதரும் நாங்களும் கோயிலின் பின் அறைக்குள் நுழைந்தோம். அவ்வளவுதான் அடுத்த கணம் பாதர் காத்திருந்ததுபோல வேகமாக வந்து 'கொடக்'கென்று தலையில் கொட்டினார்...அப்பா... இப்போதும் வலிக்கிறது!

ஆனால் அவரே பின்பு என்னைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்பது போல மென்மையாக பேசியபோது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அவர் என் பெயர் என்னவென்று கேட்டார். 'வசந்தசீலன்' என்றதும் "என்ன பெயர் இது? வசந்தன் கேள்விப்பட்டிருக்கிறேன். சீலன் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன வசந்தசீலன்! வித்தியாசமான கலவையாய் இருக்கு. எனிவே, நைஸ் நேம் " என்றார். அவர் பேசிய ஆங்கிலம் புரியாவிட்டாலும் ஏதோ நைஸ் என்று நல்லதாகத்தான் பாராட்டுகிறார் என்று சந்தோசமாயிருந்தது.நான் கோபம் எதுவுமில்லாமல் புன்னகைப்பதைப் பார்த்த பாதர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த வார்த்தைகளிக் கூறினார். "எனக்கு பெரியவர்களை விட உங்களைப் போல சிறுவர்களைத்தான் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் தான் யார் உங்களுக்கு எந்தத் தீமை செய்தாலும் உடனடியாகவே அதனை மறந்து பழைய மாதிரியே பழகுவீர்கள். அந்த மன்னிக்கின்ற குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார். அவர் சொன்னது சரிதான். நாம் சிறுவர்களாய் இருக்கும்போது பெரியவர்களோ அல்லது நண்பர்களோ நம்மோடு எப்படிக் கோபித்தாலும் சண்டை பிடித்தாலும் அடுத்த நாளே மறந்து மன்னித்து பழையபடி சேர்ந்து விடுகிறோம். ஆனால் பெரியவர்களாக வளர வளர இந்த மன்னிக்கும் குணம் அருகி மன்னிப்பவன் ஏமாளி என்பது போன்ற ஒரு மாயைக்குள் சிக்கிவிடுகிறோம். அதையே நினைத்து நினைத்து பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து நமக்கு நாமே மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.


ஆனால் பாதரின் ஹிஸ்டீரியா குணத்திற்கு சிறந்த உதாரணமாக ஊரார் ஆடிக்கடி பேசிக் கொள்ளும் ஒரு சம்பவம் உண்டு. சில சிறுவர்கள்  ஏதோ ஆலய வேலையாக பாதரை சந்திக்கச் சென்றிருந்தார்கள். அது பாதர் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் நேரம். எனவே அவர்கள் அவர் தூங்கும் அறைக்கு வெளியே வரவேற்பறையில் சத்தம் போடாமல் அமர்ந்து காத்திருந்தார்கள். அப்போது ஒரு பிச்சைக்காரி அங்கே வந்தாள். பாதரை விசாரித்தாள். அவர்கள் நிலைமையைச் சொல்லி தூங்குபவரை எழுப்ப முடியாது. போய்விட்டு பிறகு வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனுசி கேட்கவில்லை. அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று நினைத்து விட்டாளோ என்னவோ பிடிவாதமாக பாதரை கூப்பிடும்படி கேட்டுக் கொண்டே நின்றாள். இந்தத் தகராறு சப்தத்தில் பாதர் விழித்து விட்டார். வேலைக்காரனைக் கூப்பிட்டு என்னவென்று கேட்டார். அவன் விடயத்தை சொல்ல " ஒன்றும் கிடையாது . போகச் சொல்லு!" என்றார் தூக்கம் கலைந்த கோபத்தில். அவனும் வந்து சொல்ல அப்போதும் அவள் " சோறாவது போடுங்க சுவாமி!"என்று உரத்துக் கத்தினாள். அவ்வளவுதான். பாதருக்கு வந்ததே கோபம். "சோறா வேண்டும் இரு, வருகிறேன்" என்றபடி சமையலறைக்குள் போய் அடுப்பில் இருந்த சுடுதண்ணிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து அவள் முகத்திலே வீசிவிட்டார். எல்லோரும் அப்படியே விக்கித்துப் போய்விட்டோம்.


பொதுவாக சினிமாக்களிலும் நம் மனங்களிலும் பாதிரிமார்கள் என்றாலே கையில் பைபிளுடன் சாந்தமான முகத்துடன் பின்னணியில் தேவாலயம் தெரிய ஆலய மணி ஒலிக்கும்படியாகத்தான் கற்பனை தோன்றும். ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்களின் கோபதாபங்கள், நேசபாசங்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை நான் இத்தால் புரிந்துகொண்டேன்.


ஆனால் மேற்படி சம்பவத்தை வைத்துக் கொண்டு அவர் கஞ்சன் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். அவரும் தாராளமாக தானம் செய்துதான் இருக்கிறார். மனிதர்கள் தங்கள் சமுதாயத்தில் எந்த முகமூடியை அணிந்துகொண்டு நடமாடினாலும் தனிமனித அடிப்படை உணர்ச்சிகளை கட்டுப் படுத்துவது மிகக் கடினம்தான்.


பாடசாலையில் முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நண்பகல் இரண்டு மணியுடன் பாடசாலை முடிந்துவிடும். நான் அவ்வகுப்புகளில் படிக்கும்போது எனக்கு பாடசாலை முடிந்தபின்பும் அண்ணாக்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்து 'அதெல்லாம் பெரிய வகுப்புகள், பெரிய படிப்பு' என்று எண்ணிக் கொள்வேன். அதனால் முன்றாம் ஆண்டில் முதலாம் நாள் இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று பின் திரும்பவும் பாடசாலை செல்ல வேண்டும் என்று சொல்லி என்னை அண்ணா கூட்டிச் சென்றபோது முதன் முதலாக நான் ஒரு படி நிலை உயர்ந்தது போலவும் மறுபடியும் புதிதாக பாடசாலை செல்வது போலவும் உணர்ந்தேன். அந்த நாளும் என் மனதில் பசுமையாக நிற்கின்றது.

இத்தனை படிப்பவர்களுக்கு இதெல்லாம் முக்கியமான சம்பவங்களாக படாமல் இருக்கலாம். ஆனால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? மிகச் சிறுவயதில் நடந்த சில அற்ப சம்பவங்கள் கூட வாழ்க்கையின் அரைவாசியைக் கடந்தபின் நினைத்து பார்க்கும்போது நெஞ்சில் ஒரு பரவசம் பரவுகிறது. நான் ஏற்கனவே கூறியது போல நான் சிறுவயதில் நம்பியதைப் போல நான் 'பெரிய ஆளாக' வரமுடியாமற் போனாலும் அதன் ஞாபக அலைகள் தரும் சுக உணர்வை நான் இழக்க விரும்பவில்லை. அதனால் இனிவரும் முப்பது வருடங்களில் நான் அவற்றை மறந்துவிடக்கூடாது என்பதனாலேயே இப்பதிவுகள் இடம்பெறுகின்றன. அவை மூன்றாம் நபரான உங்களுக்கு சுவாரசியப்படாவிட்டால் தாராளமாக அவற்றை தாண்டிச் செல்லலாம். நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஆதாரமே நமது வாழ்வின் கடந்த கால நினைவலைகள்தானே...!


அப்புறம் எங்கள் ஊரின் சிறப்பு பெற்ற குளியல்தலமான பள்ளமடுக் குளத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அது ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி அமைந்திருக்கிறது. அதன் பக்கத்திலேயே குடி தண்ணீர்க் கிணறு ஒன்றும் இருக்கிறது. ஊர் மக்களின் தாகத்தை தீர்க்கும் ஒரே அமுத ஊற்று அதுதான். சைக்கிள்களின் பின் காரியரில் இரு குடங்களைக் கட்டக் கூடியவாறாக  இரு பக்கமும் அரை வட்டமாக வெட்டப்பட்ட பலகை ஒன்று இருக்கும். அதில் நீர் நிரப்பப்பட்ட குடங்களுடன் சைக்கிள்கள் ஊருக்குள் நுழைவதும் வெளியேறுவதும் வாடிக்கை காலைக்காட்சி. அக்குளத்தில் அப்பாவின் முதுகில் ஏறியபடி நீண்டதூரம்(?) நீந்தியது ஞாபகமிருக்கிறது. குளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே படித்துறைகள் உள்ளன. அப் படிகளில் நின்று குளத்திற்குள் பாய்வதும் குளத்தின் நடுவே உள்ள மரம் வரை நீந்தி அதன் கிளைகளில் ஏறி பின் குதிப்பதும் அப்போது அதி சாகச வீரங்கள்.


ஊரிலிருந்து அக்குளத்திற்கு போகும் வழியில் தரவை எனப்படும் பரந்த வெட்டவெளி ஒன்று வரும். சில காலங்களில் காற்று அதிகமாக வீசினால் அதனுடாக யாரும் பிரயாணிக்க முடியாமல் போகும். சைக்கிளை எதிர்க் காற்றிற்கு மிதிக்க முடியாது. அத்துடன் கடுங்காற்றினால் மேலெழுந்து வேகமாக வரும் மணல் துகள்கள் கால்களில் முட்களைப் போல குத்திச் செல்லும். இயற்கையுடன் சில சமயங்களில் வேறு வழியில்லாமால் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்று இதனால் உணர்ந்து கொண்டேன்.


எங்களையும் வாழவிடுங்கள்.


எங்கள் ஊரின் 'ராசுவைப்' பற்றி சொல்லவேண்டும். எங்களுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார். ரோசாலி என்பவரின் மகன். வயது முப்பது இருக்கும். அவர் ஒரு மன நோயாளி. ஆனால் அது பேச்சில் அவ்வளவாக தெரியாது. ஒரு வித அதி மேதாவித்தனம் தென்படும். உலக விடயங்களைப் பற்றி எல்லாம் பேசுவார். ஆனால் அவருக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு வரும். அதனால் எங்களுக்கு அவர் அருகில் இருந்து பேசுவதற்கே பயமாக இருக்கும்.

எங்கள் வீட்டுக்கு வந்து வேப்ப மரத்தின் கீழ் தேடித்தேடி வேப்பம் விதைகளைத் சேகரிப்பார். சிப்பிகள், வெற்றுத் தீப்பெட்டிகள் என எங்களுக்கு போட்டியாக நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தார்.



அந்நேரத்தில் 'எங்களையும் வாழவிடுங்கள்' என்ற பெயரில் விலங்குகள் நடித்திருந்த படம் ஒன்று வெளியாகியிருந்தது. மனிதர்கள் விலங்குகளை பிடித்து அவற்றைத் துன்பப் படுத்தி பிழைப்பு நடத்துவதையும் பின் விலங்குகள் ஒன்று சேர்ந்து போராடி இறுதியில் சுதந்திரம் பெற்று காட்டுக்கு திரும்புவதாக கதை செல்லும்.அந்தப் படத்தை பற்றி அவர் மிக விருப்பத்துடன் விலாவாரியாக பேசுவார். அந்த விலங்குகளைப் போலத்தான் அவரும் 
சாதாரண மனிதர்களிடையே வாழ்ந்தார்.  

ஒரு நாள் இரவு ரோசாலி அக்கா தன கோழியைக் காணவில்லை என  லாம்பைப் பிடித்தபடி தேடினார். அது எனக்கு இன்னும் மறக்காமல் இருக்கிறது என்றால் அதற்கு அடுத்த நாள் காலையில்தான் ராசு அண்ணன் ஆற்றில் குளிக்கும்போது வலிப்பு வந்து தண்ணீருக்குள் விழுந்து மூச்சுத் திணறி இறந்து போனார்.


நான் இப்போது இக்காலப்பகுதியில் எனக்கும் என் நண்பனுக்கும் இருந்த ஒரு பழக்கத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அந்தப் பழக்கத்தைப் பற்றி நான் பிற் காலத்தில் யோசித்துப் பார்க்கும் போது அது எனக்கு வாழ்க்கையின் மிகப் பெரும் தத்துவங்களில் ஒன்றைக் கற்பித்தது.


நான் மூன்றாமாண்டில் படிக்கும் போது என் எதிர் வீட்டு நண்பன் ரஜினியும் நானும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக சப்பாத்துக்களை கழற்றி வைத்து விட வேண்டும். சப்பாத்துக்களைக் கழற்றாமல் வேறு வேலை எதுவும் செய்யக்கூடாது. முக்கியமாக யாருடனும் எதுவும் பேசக்கூடாது. தவறினால் அடுத்த நாள் மற்றவருக்கு சொல்ல வேண்டும். எவ்வளவு வார்த்தைகள் பேசினோமோ அவ்வளவு குட்டுகள் மற்றவரிடம் வாங்கவேண்டும். இப்படி ஒரு 'த்ரிலான' யோசனையை சொன்னது சத்தியமாக நான்தான்!


அந்த யோசனையை கொஞ்ச நாள் செயற்படுத்தி மாறி மாறி கொஞ்சக் குட்டுகள் வாங்கிக் கொண்டதும் ஞாபகமிருக்கிறது. மனிதனுக்கு சும்மா ஒரே மாதிரியாக இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். அது சந்தோசமான தருணங்களாக இருந்தால் கூட...! சில சம்பிரதாயங்களை சடங்குகளை தவறாமல் கடைப் பிடிப்பதில் அவனுக்கு உள்ளுர ஒரு சந்தோசம் இருக்கிறது. அது இக்காலத்திற்கு பொருத்தமானதா அல்லது தேவையானதா என்று கூட பார்ப்பதில்லை...


மூன்றாமாண்டில் இன்னொரு சம்பவம். பாடசாலை மண்டபத்தில் ஏதோ ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்தது. நான் அருகில் இருந்த நண்பனுடன் பேசிக் கொண்டிருக்க ஆசிரியை கண்டுவிட்டார். என்னைக் கூப்பிட்டார். அடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அதை விடக் கொடுமையாக முற்றத்து மணலில் முழந்தாளில் இருக்கும்படி கூறிவிட்டார். நாங்கள் கிறிஸ்தவர்கள். தேவாலயத்தில் நீண்ட நேரம் முழந்தாளில் இருந்து பழக்கம் இருக்கிறது. ஆனால் நேரமோ நடுப் பகல். மணல் கொதித்துக் கொண்டிருந்தது. போய் முழங்தாற்படியிட்டேன். நேரம் போகிறது. போகிறது. ஆசிரியை என்னை மறந்தே போய்விட்டார். எனக்கோ அந்த நெருப்பு மணலில் தொடர்ந்து இருக்க முடியாமல் போனது. அதுவரையில் நான் ஆசிரியர், பெற்றோர் போன்ற 'பெரியோரின்' உத்தரவை மீறி பழக்கமேயில்லை. ஆனால் சூழ்நிலை அதை மீறச் செய்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எழுந்து மறுபடி உள்ளே சென்றேன். ஆசிரியரும் என்னைக் கவனிக்கவில்லை. சாதாரணமாய் முடித்துவிட்டது அச்சம்பவம். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசிப்பேன். நான் செய்த சிறு தவறுக்கு ஆசிரியரின் இத்தண்டனை பெரியது. என்னை நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டது அவரது இன்னொரு தவறு. அதனாலேயே நீதி என்று எனக்கு சொல்லப் பட்டத்தையும் மீறும் துணிவு வந்தது. ஒரு தவறுதானே இன்னொரு தவறின் கருவறை.

வேறொரு நாள் பள்ளமடு குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு போகாமல் நானும் என் நண்பன் ஒருவனும் என் சித்தப்பா வீட்டிற்கு வந்தோம். சித்தப்பா தன் வீட்டில் 'மினி' எனப்பட்ட சினிமா கொட்டகையை நடத்தி வந்தார். பெரிய டிவி மற்றும் டெக்கில் படம் காட்டினார். உள்ளே நுழைய ஐந்து ரூபாய். ஆனால் சிலவேளைகளில் என்னை சும்மா விட்டுவிடுவார். ஆனால் அன்று நான் அதிக தடவைகள் ஏற்கனவே பார்த்திருந்ததாலோ அல்லது என்ன காரணமோ உள்ளே விடாமல் வீட்டுக்கு போகச் சொன்னார். தடுத்தால்தானே இன்னும் ஆர்வம் வரும். வெளியே வந்து கொட்டகையின் மறு பக்கத்திற்கு வந்தோம். கொட்டகையின் அப்பக்கத்தில் சுவரின் ஒரு கல் பெயர்ந்து சதுரமாய் ஓட்டை ஒன்று இருந்தது. அதனுடாக பார்த்தால் டிவி தெரிந்தது. என் நண்பன் முண்டியடித்துக் கொண்டு முதலில் முகத்தை நுழைத்துப் பார்த்தான். நான் அவனைக் கெஞ்சிக் கேட்டு விலக்கி விட்டு என் முகத்தை நுழைத்தேன். கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்.


"டேய்,டேய், விடுறா நானும் பாக்கிறேன்!"


அவன் கத்த, சரி பாவம் என்று விடுவோம் என்று முகத்தை வெளியே எடுக்க முயற்சித்தால் முடியவில்லை. சதுரத்திற்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. அதை எடுக்கப் பட்ட பாடு! அந்த நேரம் மனதில் தோன்றிய பயங்கர உணர்ச்சிகள்! அப்பா, சும்மா சொல்லக் கூடாது. பானைக்குள் தலை விட்டு மாட்டிக் கொண்ட கன்றின் தலையை வெட்டி எடுத்தது போலத்தான் எடுக்க வேண்டி வருமோ என்று கூட நடுக்கம் வந்தது. ஒருவாறாக பெரும் பாடுபட்டு எடுத்து விட்டேன். சாதாரணமாய் எடுத்திருந்தால் சாதாரணமாய் வந்திருக்கும். பதறிய காரியம் சிதறிப் போகும் என்ற பழமொழியை அனுபவித்த நாள் அது!


என் அம்மாவின் தங்கை (சித்தி ஆனால் சந்திரா அன்ரி என்று அழைப்பேன்)எங்கள் வீட்டிலிருந்து இரு வீதிகள் தள்ளி தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்தார். சின்னையா ஒரு மீனவர். சில சமயங்களில் அவரது தோணியில் நானும் அவரது மகனும் (என் ஒன்று விட்ட தம்பி ஞானராஜ்) கடலில் செல்வோம். ஆற்றிற்கு அப்பால் இருக்கும் 'கண்ணாக்' காட்டில் விறகு எடுக்க சின்னயாவின் குடும்பமே போகும். ஒரு தடவை நானும் போனேன். திரும்பி வரும்போது தோணி தடுமாறி பாதி கவிழ்ந்து ஆற்றில் விறகுகள் மிதந்தது என் ஞாபகத்தில் மிதக்கிறது.


ஒருநாள் அன்ரி வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தரவையில் ( ஒரு புல் முளைக்காத தரை) நானும் என் தம்பியும் இன்னும் சில சிறுவர்களும் கால்பந்து விளையாடினோம். அதில் என் தம்பி எதோ தவறு செய்ய மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நானும் அதனை ஆமோதிக்க தம்பிக்கு கோபம் வந்துவிட்டது. வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் (என்அன்ரி) நான் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று முறையிட்டான்.


"ஏன்டா?' என்றார் அன்ரி.


"அவன் உண்மையிலேயே பிழை விட்டான்" என்றேன்.


"அதுக்கு? என்னவென்றாலும் அவன் உண்ட தம்பியல்லவா?"


எனக்கு அக்கணம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் நான் செய்தது சரியென்றே அப்போதும் உறுதியாய் இருந்தேன். தம்பியாய்  இருந்தாலும் தவறு தவறுதானே என்ற நக்கீர எண்ணம் எனக்கு சற்று அதிகம் இருந்ததாலேயே நான் பிற்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.


என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவம் 1989 இல் நடந்தது. என் ஊரிலிருந்து சுமார் 40 மைல் தள்ளி பூநகரி நகர் இருக்கிறது. அதன் அருகில் கடற்கரையை ஒட்டி பள்ளிக்குடா எனும் மீனவ கிராமம் இருக்கிறது. அங்கே என் அம்மாவின் அண்ணாவான சற்குணம் மாமா, மாமி, அவர்களின் பிள்ளைகள் வசித்தார்கள். மகன்களின் பெயர்கள் என்னைக் கவர்ந்தவை. சூரியன், சந்திரன், இந்திரன் (!) மற்றும் இரண்டு மகள்கள். மகன்கள் எல்லோரும் அப்போதே இருபது வயதிற்கு மேற்பட்ட வாலிபர்கள். மாமா கடற் தொழிலாளி. மகன்களுக்கு படிப்பு வராது என்று அவரே முடிவு செய்து தனக்கு உதவியாக வைத்துக் கொண்டார் . மாமா ஊரில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார் . அந்த ஊரில் முதன் முதலாக குடியேறியவர் அவர்தான் என்று கூட சொல்வார்கள் . தொழில் நன்றாக நடக்க ஓரளவு செல்வந்தராகவே இருந்தார் . அவரது தங்கையான என் அம்மாவுக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார் . ஊராருக்கும் நிறைய உதவுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . அவர் கடற்கரையோரமாக தனக்கு விருப்பமான அந்தோனியாருக்கு ஒரு சிறு கோவில் கூட கட்டியிருந்தார் . அதன் வருடாந்த விழா சிறப்பாக நடைபெறும் . மாமா 'நைன்டி' பைக்கில் வரும்போது பார்க்க கம்பீரமாக இருக்கும் .

நான் பள்ளிக்குடாவில்தான் முதன் முதலாக அலையடிக்கும் கடலைப் பார்த்தேன் . ஏதாவது விசேசம் என்றால் நாங்கள் விடத்தல் தீவிலிருந்து அங்கு குடும்பமாக போவோம் . மாமாவின் முத்த மகளின் பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக நடந்தது . நாங்கள் எல்லோரும் போயிருந்தோம் . ஊரே அன்று அங்குதான் மதியச் சாப்பாடு சாப்பிட்டது. அளவுக்கதிகமாக செய்யப்பட்ட பலகாரங்கள் அடுத்த நாட்களில் குழி தோண்டி புதைக்கப்பட்டன .


அவ்விழாவுக்கு பிறகு இன்னொருதடவை ஏப்ரல் மாத பாடசாலை லீவுக்கு நான் மட்டும் அங்கே போயிருந்தேன் . எனக்கு அப்போது அம்மா அப்பாவை விட்டு பிரிந்திருப்பது மற்றப் பிள்ளைகளுக்குப் போல் கடினமாக இருக்கவில்லை . யாரோ ஒரு மாமாவுடன் அங்கு வந்தேன் . நான் தனியே ‘பெரிய மனுசனைப் போல ’ அங்கு வந்ததை சொல்லி எல்லோரும் வியந்தார்கள் . மாமா மகன்களுடன் அவர்களது தோப்புக்களில் சுற்றி நாவல் பழங்கள்  சாப்பிட்டது

இது இப்படியிருக்க , மாமாவும் மகன்களும் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் நான் கண் விழிக்க முன்பே கடலுக்கு புறப்பட்டு சென்றுவிடுவார்கள் . விடிந்து பார்த்தால் மாமி, மகள்களைத் தவிர யாரும் இருக்க மாட்டார்கள் . பின்னேரம் அவர்கள் வரும் வரை வெறுமனே கடற்கரையில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்க்க வேண்டி இருந்தது . அந்த ஊரில் இருந்த சிறுவர்களுடன் நட்புக் கொள்ளவும் எனக்கு தெரியவில்லை . அதனால் தீர்மானித்தேன் . நாளைக்கு நான் அவர்களுடன் கடலுக்குப் போகவேண்டும் .


அவர்கள் பின்னேரம் வந்தவுடன் மாமாவிடம் தயங்கித் தயங்கி என் கோரிக்கையை சமர்ப்பித்தேன்.


“என்னது? கடலுக்கு வரப்போறியா? நீ வந்து என்ன செய்யப் போகிறாய்?”


"நானும் சும்மா வாறன் . இங்க தனியா இருக்க அலுப்பா இருக்கு .”


“சரி , எங்களுக்கென்ன . வாரண்ட வா . ஆனா விடிய நாலு மணிக்கு எழும்ப வேணும் . திரும்பி வர பின்னேரம் ஆகும். இடையில வீட்டுக்குப் போகப்போகிறேன் என்று அழக்கூடாது சரியா?”

நான் மகிழ்ச்சியுடன் தலையாட்டினேன் .


அடுத்த நாள் காலை அவர்களுக்கு முன்பே நான் எழுந்து தயாராகி விட்டேன் . அந்த அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டு கடல் தண்ணீரில் இறங்கி படகில் ஏறினோம். படங்கை (பாய்மரம்)விரித்துக் கொண்டு படகு எங்கோ விரைந்தது .


மாமா முதல் நாள் போட்டு வைத்திருந்த வலைகள் இருக்குமிடத்தை அடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது . மாமாக்கள் (நான் மாமாவின் மகன்களையும் மாமா என்றுதான் அழைப்பேன்!) முதல் நாள் நட்டிருந்த வலைச்செடியில் பூத்திருந்த மீன் பூக்களைப் பறித்து படகில் போட்டார்கள் . தண்ணீருக்குள் அவர்கள் இலகுவாக குதித்து குதித்து மீண்டும் படகில் ஏறியதைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது .

“நானும் தண்ணீரில் நீந்தப்போகிறேன் ” என்றேன் எனக்கு குளத்தில் நீந்திப் பழக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் .


அவர்கள் திடுக்கிட்டார்கள் . பிறகு சிரித்தார்கள் .


“நீந்தப் போறியா? இதன் ஆழம் தெரியுமா ?”


“என்ன ஆழம், நீங்க எல்லாம் இறங்குறீங்க .”


“சரி, அப்ப இறங்கு” என்னைப் பிடித்து கடலுக்குள் இறக்கி விட்டார்கள் . நான் தண்ணீருக்குள் அமிழ்ந்தேன். கீழே போகிறேன். போகிறேன்.  எங்கே தரை? தரையையே காணவில்லையே ? திடீரென என் கையை எதுவோ பற்றியது . பயந்து உதறுவதற்குள் அது என்னை மேலே இழுத்தது . அது மாமாவின் கை .


“பார்த்தாயா எவ்வளவு ஆழம் என்று ? இன்னும் நீந்தப் போகிறாயா?”


நான் தெப்பலாய் நனைந்த ஆடைகளுடன் குளிரும் பயமும் கலந்த நடுக்கத்துடன் வேண்டாமென தலையாட்டினேன் .


நேரம் செல்ல செல்ல எனக்கு பசிக்க ஆரம்பித்தது .


சொன்னேன் .


“என்ன இப்பவே பசிக்குதா ? இப்ப ஒன்பது மணிதானே ?”


அவர்கள் வழமையாக காலைச் சாப்பாடு சாப்பிடமாட்டார்களாம் . வேலை எல்லாம் முடிய ஒரு மணிக்குத்தான் சாப்பிடுவார்களாம் .


“ஐயோ! ஒரு மணிக்கா ? எனக்கு இப்பவே சரியா பசிக்குது !”


“சரி சாப்பிடு . ஆனா மதியம் கேட்கக்கூடாது , சரியா ?”


தண்ணீருக்குள் முழ்கி எழுந்து வந்ததாலோ அல்லது என்ன காரணமோ அன்றைக்கு மிகவும் பசித்தது . ‘அப்பாடா’ என்றபடி சாப்பாட்டைத் திறந்தால் அது பழைய சோறு! அதுவும் சோறு என்றால் சோறு மட்டும்தான் . அதற்குள் தண்ணீர் ஊற்றி ஒரு சக்கரைக்கட்டியை ‘சைட்டிஷ்’ஆக கடித்துக் கொண்டு சாப்பிட வேண்டியதுதான் . ஆனால் அது அன்றைக்கு எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமா?


சற்று நேரத்திலேயே மறுபடியும் எனக்கு போரடிக்க ஆரம்பித்தது . பார்த்தேன் வெகு தூரத்தில் ஒரு கோடாக கடற்கரை தெரிந்தது . அதற்கு அப்பால் காடாகத் தெரிந்தது .


“என்னை அந்தக் கடற்கரையில் இறக்கிவிடுங்க . நான் அங்க விளையாடிக் கொண்டு நிக்கிறன் .”


“டேய் , அங்க யாரும் இல்லடா . அது காடு .”


“பரவாயில்ல . நீங்க இறக்கிவிடுங்க .”


அவர்கள் தங்களுக்கென்ன என்று படகை அதனை நோக்கிச் செலுத்தினார்கள் . வர வர அதன் விஸ்தீரணம் புரிந்தது . அழகான தென்னம் சோலைகள் நிறைந்த கடல் மணல் பிரதேசம் .


நான் இறங்கி நடந்தேன் . மாமாக்கள் திரும்பிப் போனார்கள் .

கொஞ்ச நேரம் சென்றதும்தான் அந்தத் தனிமையின் தீவிரம் எனக்குப் புரிந்தது . மாமாக்களின் படகை தூரத்தில் புள்ளியாகக் கூடக் காணோம் . பூமிப்பந்தின் மறுபக்கத்தில் அவர்கள் விழுந்து விட்டது போல தோன்றியது . கடலலையின் சப்தமும் தென்னை மரச்சோலையின் ‘ஹோ’வென்ற இரைச்சலும் ஒரு திகில் படத்தின் பின்னணி வாசித்தன . மருந்துக்குக் கூட எந்தவொரு உயிரினத்தையும் அங்கு காணவில்லை . ஆனால் உயிரில்லாதவை பல அங்கு இருந்தன என்பது கொஞ்ச தூரம் உள்ளே நடந்ததும் புரிந்தது .


நான் இறங்கிய கடற்கரையின் அருகில் ஒரு ஊர் இருந்திருக்கிறது . ஆனால் எல்லோரும் இடம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும் . நான் நின்ற இடம் அந்த ஊரின் இடுகாடு . நிறைய சிலுவைகளை தலையணைகளாய்  வைத்துக் கொண்டு பல மண் மேடுகளின் கீழ் வாழ்ந்து களைத்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் . எனக்குள் 'அதிரனளின்' வேகமாக சுரந்தது . விரைந்து மறுபடி கடற்கரைக்கு வந்தேன் . எனக்கு ஏதேனும் ஆபத்து வந்து நான் எவ்வளவுதான் சத்தமிட்டாலும் யாரும் வரமாட்டார்கள் . நான் தனியே தன்னந்தனியே …என்ற நிலைமையில் இருந்தது அப்போதுதான் .


கடற்கரைகளில் காலையில் தண்ணீர் வற்றி பின்னேரத்தில் ஊற்றெடுக்கும் . அதனால் அவை பின்னேரங்களில் தண்ணீர் தரையை நோக்கி முன்னேறும் தூரம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் . அதனால் அலை தொடும் தூரத்திற்கு அப்பால் ஒரு தடியை நட்டு வைப்போம் அல்லது ஏதாவது எழுதிவைப்போம் . நேரம் ஆக ஆக அலை முன்னேறி வந்து அத்தடியை தொடுவதையும் எழுத்துக்களை அழிப்பதனை ரசிப்பதும் என் பொழுதுபோக்கு .


இப்போதும் அது போலவே அலை தொடும் மட்டத்திலிருந்து சற்றே தூரத்தில் என் பெயரையும் வகுப்பையும் எழுதினேன் . ‘வசந்தசீலன் .ஆண்டு 5.’ (அப்போதெல்லாம் நமது முகவரி பாடசாலைதானே!) சற்று நேரத்தில் அலை வந்து அதனை அழிக்க இன்னும் கொஞ்ச தூரத்தில் எழுதினேன் . இன்னும் நேரம் ஆக அதனையும் அலை முன்னேறி வந்து அழித்தது . அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது . இன்னும் மிக அதிக தூரத்தில் எழுதி வைக்கலாம் . நாளைக்கும் சிலவேளைகளில் மாமா கூட்டிக் கொண்டு வந்தால் அது அழிந்திருக்கிறதா என்று பாக்கலாம் என நினைத்தேன் . அப்படியே எழுதியும் வைத்தேன் .


மதியம் ஒரு மணியளவில் மாமாவின் படகு அங்கிருந்து என்னை ‘மீட்க’ விரைந்து வந்தது . நான் ‘பயப்படாமல்’ நின்றதை எண்ணி அவர்கள் வியந்ததைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது!

அன்று நாங்கள் வீடு திரும்பியதுமே இலங்கைப் பிரச்சனையின் நேரடியான பாதிப்பை உணரும் முதலாவது சந்தர்ப்பம் கிடைத்தது. போர் விமானங்கள் பறந்து வந்து அயல் கிராமங்களில் குண்டுகள் போட ஆரம்பித்தன . அதன் வீச்சு அதிகமாக இருந்ததனால் பள்ளிக்குடாக் கிராமமும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்ற பயத்தில் அக்கிராமத்தவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம் பெயர ஆரம்பித்தார்கள் . பள்ளிக்குடாவிலிருந்து வடக்கே கடற்கரை நெடுக நடந்தால் -------தூரத்தில் ---------குடாக் கடல் குறுக்கிடும் . அதனைக் கடந்தால் யாழ் நகர் வந்துவிடும் . நாங்கள் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் காவிக் கொண்டு நடந்தோம் . நடந்தோம். நடந்துகொண்டே இருந்தோம் . சுமார் நாலு மணிக்கு ஆரம்பித்த இந்த நடை யாத்திரை ஆறு மணிக்கு எங்கே முடிந்தது தெரியுமா? நான் அன்று காலை கடலால் சென்று இடையில் இறங்கிய அதே இடுகாட்டிற்கு அருகில் முடிந்தது . அந்த இடுகாட்டுக்கு சற்றுத் தள்ளி ஒரு சிறு கிறிஸ்தவ ஆலயம் இருந்தது . அதற்குள் பெரிய ட்ரம்மில் தண்ணீர் இருந்தது . அங்கே மீனவர்கள் இடையில் வந்து ஆறிவிட்டுப் போவது வழமையாம் . அவர்களது தண்ணீர்தான் அது .


நான் ஓடிப் போய் காலையில் பெயரெழுதிய இடத்தைப் பார்த்தேன் . என் பெயர் அழியாமல் அப்படியே இருந்தது . அடுத்த நாள் சில வேளை பார்க்கலாம் என்று நினைத்ததை அன்று மாலையே இப்படி ஒரு சூழ்நிலையில் பார்க்குமாறு விதி மாற்றி விட்டதை எண்ணும் போது எதிர்பாராத சம்பவங்கள்தான் வாழ்க்கையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன என்று உணர்ந்தேன் . தூரத்தில் விமானங்கள் குண்டுகளை வெளிச்சப் பொறிகளாய் போட்டபடி செல்வதை பார்த்துக் கொண்டே செய்த அந்த இரவுப் பயணம் மறக்க முடியாதது .


விடிகிறவேளை நாங்கள் கிளாலியை அடைந்து விட்டோம் . அங்கிருந்து கடலில் ஒரு படகில் பிரயாணித்து பின் யாழ் நகரை அடைந்தோம் . அங்கு நாவாந்துறை எனும் ஒரு புறநகர் கிராமத்தில் என் அம்மம்மாவும் அவரின் கடைசி இரு மகன்களான உதயன் , செல்வராசா ஆகியோரும் இருந்தனர் . அங்கே சண்டை ஓயும்வரை என்னைத் தங்க விட்டு சற்குணம் மாமா குடும்பத்தினர் சூரியவெளி எனும் பக்கத்து கிராமத்தில் தங்கினர் . அக்கிராமம் சற்குணம் மாமா பள்ளிக்குடாவில் குடியேற முன் இருந்த இடமாம் . அந்த ஊருக்கே சற்குணம் மாமாதான் தன் மூத்த மகனின் பெயரையே ‘சூரிய வெளி’ என்று வைத்ததாகவும் சொன்னார்கள் .


நான் யாழ்ப்பாணத்திற்கு இதற்கு முன் ஒரு தடவை வந்திருக்கிறேன் . அதுவும் ஒரு சுவாரசியமான காரணமாகத்தான். எனக்கு அந்த வயதில் ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது . நாம் நமது கண்களுக்கு ஆணையிட்டால் அல்லது அவற்றை சற்று இடுக்கிக்கொண்டு பார்த்தால் காட்சி மங்கலாக தெரியும் . எல்லா மனிதர்களுக்கும் இது இயல்பு . அதை என் அப்பாவிடம் தற்செயலாக “பப்பா , கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தால் மங்கலாகத் தெரிகிறது ” என்றேன் . அப்பா அதனை முதலில் சாதரணமாக எடுத்தவர் பின் கொஞ்சம் யோசித்தார் . என் அப்பாவிற்கு நோய்கள் என்றால் பயம் . தன் மக்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் .

“டேய், நீ நினைத்துக் கொண்டு பாக்கும் போது மங்கலாக இருக்கிறதா அல்லது இடைக்கிடையில் மங்கலாகத் தெரிகிறதா?”என்று கேட்டார் . அவர் கேட்டவுடன் எனக்கே சந்தேகமாகிப் போய்விட்டது . இருந்தாலும் ,


“இல்லையப்பா , நான் நினைக்கும்போதுதான் …”என்று இழுக்க அப்பாவிற்கு மனம் ஆறவில்லை .


“எதற்கும் ஆஸ்பத்திரியில் காட்டிவிடுவோம்”என்றார் . அப்போது தொடங்கியது என் அதிஷ்டம்!


பக்கத்திலிருந்த பள்ளமடு ஆஸ்பத்திரியில் காட்டினோம் . மருந்துகள் தந்தார்கள் .ஒழுங்காகத்தான் குடித்தேன் . குணமாகவில்லை . கண் பார்வைக்கு நல்லது என்று சொல்லி அப்பா ஏதேதோ வைட்டமின் குளிசைகள் தந்தார் . போட்டேன் . குணமாகவில்லை . இருந்தால்தானே குணமாக !


இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மம்மா விடத்தல்தீவுக்கு வந்திருந்தார் . அம்மம்மா யாழ் வைத்தியசாலையில் கண்காணியாக வேலை செய்து கொண்டிருந்தார் . எனவே என்னை அவருடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது .


ஒரு உண்மையை இங்கு உங்களுக்கு உரைக்க வேண்டும் .எனக்கு பிரயாணம் என்றால் மெத்தப் பிடிக்கும் . என்னதான் எனக்கு வேலைகள் குவிந்திருந்தாலும் யாராவது எங்காவது போகலாமா என்று கூப்பிட்டால் உடனே புறப்பட்டு விடுவேன் . அதுவே என் பலவீனமாகவும் பலமாகவும் இருந்தது . பலவீனம் - அத்தியாவசிய வேலைகளை பின் போட்டு விடுவது மற்றும் பணச் செலவு . பலம் - நிறைய புதுப் புது அனுபவங்களை பெற்றுக் கொள்ளுவது . நான் விடயங்களை அனுபவங்களை பெறுவதற்கான தீவிர ஆர்வத்துடன் இருந்தேன் . அதனால் மற்ற விடயங்கள் எனக்கு பெரிதாகப் படவில்லை .

எனவே சந்தோசமாக அம்மம்மாவுடன் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டேன் . அந்தப் பிரயாணத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலையை பார்த்த பிரமிப்புக் காட்சிகள்தான் மனதில் நிற்கின்றன . பள்ளமடு ஆஷ்பத்திரியுடன் அதனை ஒப்பிடும்போது ஓலை வீட்டுக்கும் அரண்மனைக்குமான வித்தியாசம் தெரிந்தது . அம்மம்மாவின் பின்னால் அந்த ஆஸ்பத்திரியின் நீண்ட வராண்டாக்களில் ஓட்டமும் நடையுமாக சென்றேன் . அம்மம்மாவின் ‘செல்வாக்கில்’ தனிக் கவனிப்புடன் செக்கப்புகள் செய்யப்பட்டன . ஒரு சுவரில் எழுத்துக்களை பெரிதிலிருந்து சிறிதாக எழுதியிருந்த பலகை மாட்டப்பட்டிருந்தது. அதை வாசிக்கச் சொன்னார்கள் . பார்த்தேன் . கடைசி வரியிலிருந்த மிகச் சிறிய எழுத்துக்கள் கூட மிகத் தெளிவாகத் தெரிந்தன . எல்லாவற்றையும் வாசித்தால் ஒரு நோயும் இல்லை என்று சொல்லி மன்னாருக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்து கடைசி எழுத்துக்கள் மட்டும் வாசிக்க முடியவில்லை என்றேன் . நாசமாப்போச்சு, ‘சரக்கென்று’ ஊசி போட்டு நிறைய மாத்திரைகளும் தந்து அனுப்பினார்கள் . அவற்றில் மீனெண்ணை குளிசை என்ற மிகச்சிறிய கண்ணாடிப் பந்துகள் போன்ற குளிசைகளை நேரம் தவறாமல் சாப்பிட்டது ஞாபகமிருக்கிறது .


இம்முறை யாழ் வந்தபோது நன்றாக ஊர் சுற்ற முடிந்தது . உதயன் மாமாவும் செவராசா மாமாவும் தாங்கள் போகும் இடங்களுக்கெல்லாம் என்னையும் கூட்டிச் சென்றார்கள் . ஒரு வீட்டில் ஒரு பெண்மணி என் பெயரைக் கேட்டுவிட்டு “நல்ல சொக்கை இவனுக்கு!”என்று என் கன்னத்தைக் கிள்ளியது ஞாபகமிருக்கிறது .


அங்கேயிருந்து நாவாந்துறைக்கு திரும்பி வரும் போது இரவாகி விட்டது . எங்கிருந்தோ ‘ஊரு சனம் தூங்கிருச்சு, ஊதக் காற்றும் அடிச்சிருச்சு…’ என்ற ஜானகியின் பாடல் காற்றில் மிதந்து வந்தது . என்னவோ தெரியவில்லை . அந்த பாடல் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது . இப்போது அதனைக் கேட்டாலும் சிறு வயதிற்கே சென்று அந்த இடத்தில் இருப்பது போலவே ஓர் உணர்வு தோன்றும் .


நான் அங்கே சென்ற அதே ஆண்டில்தான் திலீபன் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் . அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள பொது மக்களுக்கும் அழைப்பு விடப் பட்டிருந்தது . எனவே ஒவ்வொரு ஊருக்கும் பேருந்துகள் வந்து சென்றன . நான் போகவில்லை . போயிருந்தால் நானும் அந்த புகழ் பெற்ற வரலாற்று நிகழ்வைப் பார்த்திருப்பேன் .


செல்வராசா மாமா ஐஸ் க்ரீம் தயாரிக்கும் ஒரு இடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார் . ஏனெனில் அவர் அப்போது தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் விற்கும் தொழில்தான் செய்து கொண்டிருந்தார் . சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால் வயது அந்தஸ்து பாராமல் எல்லோரும் ஆமென தலையாட்டக்கூடிய ஒரே உணவான ஐஸ் கிரீம் எப்படி உருவாகிறது என்பதை கண்கள் விரியப் பார்த்தேன் . எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பிடுங்க என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவே நான்கைந்து ஐஸ் கிரீம் கோன்களை ருசிக்க ருசிக்க சாப்பிட்டேன் .

நாவாந்துறையில் சிறுவர்களுக்கான வாடகைச் சைக்கிள்கள் கடையில் இருந்தன . ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன் . மற்றவர்கள் ஓடுவதைப் பார்த்து மாமாவிடம் காசு கேட்டு வாங்கி எடுத்து நாவாந்துறை வீதிகளில் ஓடினேன் . அப்போது கிடைத்த சந்தோசம் விமானத்தில் முதன் முதலாக பறக்கும் போதும் கிடைக்காது .


அம்மம்மா ஒரு குடியேற்றத் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில்தான் இருந்தார் . எனவே அயலிலுள்ள வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாக எங்கள் வீடு போலவே இருக்கும் . எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும் . மாமாவின் டிஜிட்டல் வோச்சில் நம்பர்கள் மாறுவதை எண்ணிக் கொண்டே வீடு வாசற்படியில் அமர்ந்திருப்பதுதான் அங்கே என் பொழுது போக்கு . ‘நான் வீட்டிற்கு போகப் போகிறேன் ’ என்று ஏன் நான் அடம்பிடித்து அழவில்லை என இப்போது ஆச்சரியமாக இருக்கிறது .


சண்டைகள் ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பஸ்ஸில் விடத்தல் தீவிற்கு திரும்பினேன் . ஒரு முறை பள்ளமடு குளத்தில் குளிப்பதற்காக நானும் குணமண்ணாவும் என் ஒன்றுவிட்ட தம்பி ஞான ராஜும் சைக்கிளில் புறப்பட்டோம் . தம்பி முன்னாலும் நன் ‘பெரியவன்’ என்பதால் முதல் தடவையாக பின்னாலும் ஏறிக் கொண்டோம் . ஒரு வளைவில் திரும்பியபோது என் கால் சில்லுக்குள் சிக்கிக்கொண்டது . “அம்மா , ஐயோ …!” என்று நான் கத்த, அண்ணா


நிறுத்தி இறங்கிப் பார்த்த போது பின் பாதத்தில் ஒரு துண்டுப் பகுதி அப்படியே வெட்டப்பட்டு காணாமல் போயிருந்தது . இரத்தம் குபு குபுவென புறப்பட ஆரம்பித்தது . “ஆ …ஆ …” நான் வலியில் அரற்ற இப்போது அண்ணாவின் சைக்கிள் என்னை முன்னால் ஏற்றிக் கொண்டு குளத்தையும் தாண்டி வேகமாகப் பறந்தது . ஆஸ்பத்திரியில் எனக்கு மருந்து போட்டு ஊசியும் குத்தி அனுப்பினார்கள். இந்த இரண்டிலும் அதிக வலி தரக்கூடியது காயத்திற்கு மருந்து போடுவதுதான். அது ஒரு காயம்; அதைத் தொட்டால் வலிக்கும் என்ற எண்ணம் சற்றும் கூட இல்லாமல் இந்த இரக்கம் கெட்ட நர்சுகள் எப்படி அலட்சியமாக அதனைத் தேய்ப்பார்கள், தெரியுமா? பின்பு அக்காயத்திற்கு இரண்டு மூன்று தடவை மருந்து கட்டப்போனபோது முதலில் காயத்திற்கு மருந்து போட்டுவிட்டுத்தான் பின்புதான் ஒப்பீட்டளவில் வலி குறைவான ஊசி போடுவதற்கு போவேன். எனக்கு முதலில் துன்பத்தை அனுபத்து முடித்துவிட வேண்டும். அப்போதுதான் மிச்சமாக இருக்கும் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.


இனி என்னைப் பாதித்த மேலும் சில மரணங்களைப் பற்றி கூறப் போகிறேன்.


முதலாவது என் அப்பம்மா. எனக்கு அப்பம்மா என்றதும் ஞாபகம் வருவது அவரது மரண வீடு மட்டுமே. அது என் மனதில் ஆழமாக பதிந்ததற்கு காரணம் இருக்கிறது. நான் முதன் முதலாக முழுமையாக கலந்துகொண்டது அப்போதுதான். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் வந்தது போல எனக்கு இந்த வாழ்வின் இறுதிப் பயங்கர விதி அப்பம்மாவின் அடக்க நேரத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஒரு மனிதரை ஒரு சடப் பொருளைப் போல மதித்து வெள்ளைச் சேலையால் உடல் முழுதும் மறைத்து கட்டி சவப் பெட்டிக்குள் வைத்து அதனைக் குழிக்குள் இறக்கியபோது என் அடி வயிற்றில் ஏதோ செய்தது. முக்கியமாக முகத்தை மூடிக் கட்டியபோது எனக்கே மூச்சுத் திணறியது.சிலவேளை அவருக்கு மறுபடியும் உயிர் அல்லது சுயநினைவு வந்தால் எப்படி அவ்வளவு கட்டுகளையும் அவிழ்த்து எறிந்து சவபெட்டியை உடைத்து வெளியே வருவாரெனக் கவலைப்பட்டேன். எனக்கு அப்போது வாழ்வு முடிவதை விட அதன் இறுதிகட்டச் சடங்குகள் பெரும் பயத்தை ஏற்படுத்தின.

இரண்டாவது என் நண்பன் ஒருவன். அவன் பெயர் கூட மறந்துவிட்டது. நானும் அவனும் இன்னொருவனும் அடுத்தநாள் கோயில் பூசையில் உதவியாளர்களாக நேர அட்டவணையில் குறிக்கப்பட்டிருந்தது. எனவே முதல் நாள் அவனை சந்தித்து அதனைப் பற்றி பேசியிருந்தேன். அடுத்தநாள் பின்னேரம் படங்களில் வருவதைப் போல வானம் இருட்டி கடும் மழை பெய்தது. மழை விட்டதும் என் வீட்டினுள் நுழைந்த இன்னொரு நண்பன் அவனின் மரணச் செய்தியை அறிவித்தான். இருவரும் அவன் வீட்டை நோக்கி ஓடினோம் . அவன் விறாந்தையில் கிடத்தப்பட்டிருந்தான். எல்லோரும் 'கோ'வென கதறி அழுது கொண்டிருந்தார்கள். அவனது அப்பா அவனுக்கு அருகில் இருந்த கதவில் சாய்ந்து நின்றபடி லாம்பு வெளிச்சத்தில் அவன் முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் நீர் தேங்கியிருந்தது. அவ்வளவு அழுகைச் சத்தத்தையும் விட அவரின் அந்த சிந்தாத கண்ணீர்த் தேக்கம் உறவு இழப்பின் தாக்கத்தை என்னுள் உறைக்க வைத்தது.


இன்னுமொரு மரணம் மனித ஆசைகளின் வீச்சைக் காட்டியது.யாரோ ஒருவர் எங்கள் ஊரில் இறந்து விட்டார். அவரை புதைப்பதற்கு எடுத்துச் செல்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு முன்னால் வரும்போது அம்மா அந்த விடயத்தைச் சொன்னார். வழமையாக புதைப்பதற்காக ஊர் வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்படும் எந்த சவப்பெட்டியும் மூடித்தான் இருக்கும். ஆனால் இவரது பெட்டியோ அவரது முழு உடலும் தெரியும்வண்ணம் திறந்திருந்தது.ஏனெனில் இறப்பதற்கு முன்பு அவர் அப்படி ஆசைப்பட்டாராம்.தன் இறுதி ஊர்வலத்தில் தன்னை எல்லோரும் பார்க்க வேண்டுமென்றாராம்.சற்றே ஆடியபடி சென்ற அவரது முகமின்னும் என் மனக் கண்களில் ஆடுகிறது. அவர் இப்போது வானத்தில் இருந்தபடி தன் ஆசை நிறைவேறுவதைப் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டிருப்பார் என அப்போது நினைத்துக் கொண்டேன். அடப்பாவி மனுசா! இருக்கிற நேரம் எல்லா ஆசையும் பட்டுவிட்டு தின்று குடித்து ஆடிவிட்டு அடங்கவேண்டியதுதானே?!


அடுத்து நான் சந்தித்தது ஒரு கொலை.


ஒரு நாள் எங்கள் வீட்டில் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். ஆளுக்காள் பேயறைந்த முகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அரைகுறையாய் விளங்கியதில் மூன்று மாதத்திற்கு முன்னால் ஒரு போராளிக் குழுவினால் ஒரு குற்றம் சாட்டப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டிருந்த எங்கள் பெரியய்யாவை மறுபடியும் ஊருக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. யாரோ ஒரு பெரியவர் ஊர் பஸ் ஸ்டாண்டை நோக்கி விரைய நானும் பின்னால் ஓடினேன். ஆனால் அரைவாசியில் அவர் என்னைக் கண்டுபிடித்து வீட்டுக்கு திரும்பிச் செல் என துரத்தினார். நானும் திரும்பினேன். ஆனால் பலர் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினார்கள். சற்று நேரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டன. பின் கதை தெளிவாக சொல்லப்பட்டது. பெரியய்யா ஒரு துரோகி என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுவதற்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த போஸ்ட் போக்ஸில் கட்டப்பட்டிருந்தார். போராளிக் குழுவில் இருந்த அவரது உறவினன் ஒருவன் அவரைச் சுடுவதற்கு ஆயத்தமாக இருந்தான். சனங்கள் எல்லாம் ஆசையாய் பார்த்திருக்க, அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அவர் ஒன்றும் சொல்லாமல் கிறிஸ்தவ செபங்களைச் உரக்கச் சொல்ல ஆரம்பித்தார். வெடிகள் தீர்க்கப்பட்டன. வீட்டுக்குள் கொண்டு வந்து கிடத்திய பின்பும் அவரது மண்டையோட்டிலிருந்து ரத்தம் வந்து கொண்டேயிருந்தது. முதன் முதலாக ரத்தம் நிலத்தில் சிந்தாமல் இருப்பதற்காக கீழே ஒரு கோப்பை வைக்கப்பட்டதை கண்டேன்.


ஏற்கனவே மரணங்களில் அனுபவங்கள் இருந்ததினால் பெரியய்யா இனி வரமாட்டார் எனப் புரிந்தது. அதனை வெளி வாசலில் நின்றபடி என் நண்பனிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. யார் குற்றவாளி, யாரில் தவறு என நான் ஆராயப்போவதில்லை. போர் என்றால் அதுதான். அப்படித்தான். அது இரு முனையிலும் கூர் கொண்ட கத்தி. அதற்கு அதுதான் தெரியும். அதனை விட்டு விடுங்கள். ஆனால் இச்சம்பவத்தில் என்னை உறுத்திய விடயங்களே வேறு. வன்முறை மனித மனங்களில் ஊறிப்போன ஒன்றா? அடி மனதின் ஆசைகளில் ஒன்றா? மனிதனின் பிறப்பியல்பா? சுடப்பட்டவர் ஏதாவது தவறு செய்திருக்கலாம். ஆனால் அவர் தனது கொள்கையில் உறுதியாய் இருந்தார். சாகும்போது கூட தன்னில் குற்றமில்லை என்றுதான் நினைத்திருக்கிறார். ஏனெனில் ஏதோ மகான் சாவது போலே மக்களால் தான் கருதப்பட வேண்டும் என்பதற்காக தன் மரண நேரத்திலும் பக்திமான் போல செபங்களை உரக்கச் செபித்தார். மறுபக்கத்தில் சுட்டவனுன் தன் கொள்கையில் உறுதியாய் இருந்திருக்கிறான். தான் சார்ந்திருந்த குழுவின் கொள்கைக்காக உறவுகளைக்கூட இந்தளவுக்கு துச்சமாய் மதிக்கிறேன் என நிருபிப்பதற்காக தன் உறவினரையே அவன் சுட்டான். கொள்கை மயக்கத்திலிருந்த இந்த இருவரின் செயல்களை விட்டுவிடுவோம். ஒரு உயிர் துடிதுடித்து இறப்பதை வேடிக்கை பார்த்த அந்த மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கதைகளிலும் சினிமாக்களிலும் கேட்க மற்றும் பார்க்கக் கூடிய மரணங்களை அதாவது வன்முறையை நேரில் பார்ப்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு ஆசை இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் திரண்டு ஓடி வந்திருக்குமா?

எனக்கு நேர் மூத்த இரு அண்ணாக்களான தவம் மற்றும் சாந்தன் ஆகியோர் ஐந்தாம் ஆண்டு வரைதான் ஊரில் படித்தனர். ஆறாம் ஆண்டிலிருந்து அவர்கள் ஒருவர் பின் ஒருவராக 'மேற்படிப்புக்காக' மன்னாருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் புனித டிலாசால் மாணவர் விடுதியில் தங்கியபடி அருகில் இருந்த புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையில் படித்தனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவார்கள். ஆனால் என் முறை வந்தபோது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதைச் சொல்வதற்கு முன் என் ஐந்தாம் வகுப்பைப் பற்றி சொல்லவேண்டும்.


எல்லோருக்கும் ஐந்தாம் வகுப்பில் வரும் அந்த 'சோதனை' எனக்கும் வந்தது. 'ஸ்கொலசிப்' எனப்படும் புலமைப் பரிசில் பரிட்சை. எந்தப் புண்ணியவான் கண்டுபிடித்தானோ? எங்கள் ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் வெகு கவனமாய் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு தவணை முடிந்து விடுமுறை விடும் தினங்களில் ஊரில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெற்றோர்கள் நிற்பார்கள். பாடசாலையிலிருந்து வரும் ஒவ்வொரு பிள்ளையினதும் 'ரிப்போட்டிலும்' பரீட்சை புள்ளிகள் மற்றும் வகுப்பில் அப்பிள்ளை எத்தனையாவது 'பிள்ளை' என்பவற்றை ஆராய்வார்கள். பாராட்டுவார்கள். திட்டுவார்கள். வீதியால் போகும் யாரோவெல்லாம் 'ரிப்போட்டை' வாங்கிப் பார்த்துவிட்டு திட்டிவிட்டு போவார்கள். என்ன காரணத்தாலோ என் அண்ணன்கள் அளவுக்கு எனக்கு படிப்பு ஏறவில்லை. அந்த ஸ்கொலசிப் பரீட்சை எழுதியது கூட எனக்கு ஞாபகம் இல்லை(அவ்வளவு அக்கறை!). ஆனால் நான் அதில் பெயிலானதும் எல்லோரும் என்னிடம் ஞான சீலனின் (அப்பா!)குடும்பத்தில் இப்படி ஒரு நிலையா என்று 'உச்' கொட்டியது நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் வழமையாக வகுப்பில் பத்திற்குள் வந்து விடுவேன். ஆனால் அது யாரிடமும் எடுபடாது. (நான் ஒரே ஒரு தடவை மூன்றாமாண்டில் முன்றாம் தவணையில் இரண்டாவது பிள்ளையாக வந்திருக்கிறேன். அதைத்தவிர வாழ்க்கையில் முதல் முன்றுக்குள் வந்ததேயில்லை.) என் அண்ணாக்கள் எப்போதும் முதலாம் பிள்ளையாக வரும்போது நான் நாலாம் பிள்ளை என்றால் எடுபடாதுதானே?


என் குடும்பத்திலேயே ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் ஐந்தாவதாகிய நான் மட்டுமே பெயிலானேன் (என் அருமை தங்கச்சி இந்த சாதனையையும் பின்பு முறியடித்தது வேறு விடயம்!). ஆனால் என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தராய் இருந்ததினால் புலமைப் பரிசில் பணம் எதுவும் கிடைப்பதில்லை.

நான் ஐந்தாம் ஆண்டு பாஸாகியதும் குடும்பப் பாரம்பரியப்படி என்னை மட்டுமே மன்னாருக்கு அனுப்பாமல் என் குடும்பமே அங்கு 'இடம்பெயரத்' தீர்மானித்தது. என் அப்பா மாந்தையில் ஒரு விவசாயப் பரிசோதகராக வேலை செய்தார். மன்னாரில் அவருக்கு ஒரு அரச விடுதி கிடைத்தது. எனவே அவர் மன்னாரிலேயே நிரந்தரமாக தங்கத் தீர்மானித்தார். எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலாக வீடு மாறியது அப்போதுதான். ஆனால் எனக்கு ஊரைவிட்டுப் போகிறோம் என்று கவலைப்பட்டதாய் ஞாபகம் இல்லை. கவலைப்பட்டிருந்தால் நிச்சயம் ஞாபகம் இருந்திருக்கும்.


அந்த விடுதி 'அரச சடங்குகள்' முடித்து எங்களுக்கு கிடைக்கும் வரை தற்காலிகமாக ஒரு மாதம் உப்புக்குளத்தில் எங்களுரிலிருந்து ஏற்கனவே 'இடம்பெயர்ந்து' அங்கு வீடு கட்டியிருந்த புஸ்பமக்கா வீட்டில் தங்கினோம். அங்குதான் முதன்முதலாக பல் துலக்குவதற்கு பல் பொடியைத் தவிர பற்பசை மற்றும் தூரிகை ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன்!


என் மன்னார் வாழ்க்கையை ஆரம்பிக்க முன் மன்னாரை பற்றிச் சொல்லவேண்டும். மன்னார் மிக பழமையான நகரம். அதன் பழங்கால வரலாறு, அரசர்களின் சாதனைகள் மற்றும் சறுக்கல்கள், பாரம்பரியம், புவியியல் அமைவிடம் ஆகிவற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை. வேண்டுமென்றால் நேரே போங்கள் விக்கிபீடியா. கொம். ஒன்றே ஒன்று சொல்லலாம். வெயிலுக்கு பேர் போன இடம். ஆனால் மன்னார் எனக்குப் பிடித்தமான நகரம். நான் பிறந்த ஊரின் நகரம் என்பதால் அல்ல. அது ஒரு நடுத்தர நகரம். அதில் போக்குவரத்து நெரிசல் அதிகமில்லை. அளவான வாகனங்கள். பொது வைத்தியசாலையில் ஜனங்கள் நிரம்பி வழிவதில்லை. அளவான நோயாளிகள். அளவான வைத்தியர்கள்(!) தேவைக்கேற்ற அல்லது சற்றே அதிகமான பாடசாலைகள். பல்லின மக்கள். மிக அரிதாக நடக்கும் சமய மோதல்கள். குறைவான காணி விலைகள் என அமைதியாக வாழ்வதற்கு உகந்த இடம்.

உப்புக்குளத்தில் ஓரளவு வசதியான மூன்று அறைகள், விறாந்தை, சமையலறை, அளவான வீடு. வீட்டின் முன் வாசலைத் திறந்தால் ஒரு குளம் (ஊரின் பெயர் உப்புக்குளம் என்றால் இப்படியா?!). அருகில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பாடசாலை. அங்கிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் நான் படிக்கப் போகும் பாடசாலை. புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி. முதல் நாள் பாடசாலைக்கு அங்கேயும் அப்பாதான் என்னை அழைத்துச் சென்றார்.


நான் படித்த பாடசாலைகளிலேயே மிகப் பெரியது அதுதான். நூற்று நாற்பது வருடங்கள் பழமை வாய்ந்தது. இலங்கையின் புகழ் பெற்ற பாடசாலைகளில் அதுவும் ஒன்று. அங்கு படித்தவர்களுக்கு மற்றப் பாடசாலைகளில் படித்தவர்களைவிட கூடுதல் மரியாதை இருந்தது உண்மை. நான் சேரும்போது யூட் மாஸ்டர் அதிபராக இருந்தார். அவர் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோராக உள்ளே அழைத்து 'நேர்முகம்' கண்டுகொண்டிருந்தார். அங்கு பேசியவை ஞாபகமில்லை. என் அண்ணாக்கள் அங்கே ஏற்கனவே படித்ததாலும் அதுவும் நன்றாவே படித்ததாலும் நானும் நன்றாகவே படிப்பேன் என்று நம்பி என்னை சேர்த்திருக்க வேண்டும். பாவம்!


மன்னாரில் நான் அதிக நேரம் செலவிட்ட இடம் பொது நூலகம். அது கட்டிட அளவில் சிறியதாக இருந்தாலும் புத்தகங்களின் எண்ணிக்கையில் பெரியதாக இருந்தது.


ஒரு நாள் சாந்தன் உன்னை ஒரு வித்தியாசமான இடத்திற்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லிக் கூட்டிப் போன இடம்தான் அது. உண்மையிலேயே நூலகம் என்பது ஒரு வித்தியாசமான இடம்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகத்திற்கு சமம். அவ்வாறான பலப்பல உலகங்களை உள்ளடக்கிய அண்டவெளிதான் நூலகம். அங்கு நாம் அறியும் விடயங்கள் அறியும் கதைகள் எல்லாம் விநோதமானவைகள்;ஆழ்ந்து அனுபவிக்க வேண்டியவை.

எனக்கென்ன அப்போது ஆச்சரியும் என்றால் இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு புத்தகங்களையும் மக்களுக்கு இலவசமாக வாசிக்கக் கொடுக்கிறது என்பதுதான். அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சேவைகளில் இதுவும் ஒன்று. ஒரு கட்டிடம் கட்டி கதிரை மேசை போட்டு இலவசமாக புத்தகம், செய்தித்தாள்களை வழங்கி வாசித்துவிட்டுப் போ என்கிறது. இந்த மாதிரியான ஐடியாவை  கொண்டுவந்த மக்களுக்கான நூலகம் எனும் எண்ணக்கருவைக் கொண்டு வந்த அந்தக் கால அந்த எவரோ ஒரு மனிதருக்கு நன்றி.


அது ஒரு பழமையான கட்டிடம். அதன் அலங்கார வளைவுகள் பழைய கால ஸ்டைலில் இருக்கும். முதன் முதலாக அந்த செய்திதாள்கள் பகுதிக்குள் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு சொல்ல முடியாதது. அதுவரைக்கும் மன்னாரில் அம்மா எங்கிருந்தாவது கொண்டுவரும் ஒரு சில கதைப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் தவிர வேறொன்றும் அறியேன். நீண்ட மேசைகளில் மின்விசிறிகளின் கீழ் அமர்ந்து பலர் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரைக்கும் மின்விசிறிக் காற்றை நான் அனுபவித்ததில்லை.


நேராக போய் எடுத்த புத்தகம் அம்புலிமாமா. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதில் முதலாவதாக படித்த கதை என்னுள் நன்றாக பதிந்துவிட்டது. அதில் ஒரு மனிதன் ஏதோ ஒரு மந்திரத்தால் சிறிய ஒரு மனிதனாக மாறிவிடுவான். அவனுக்கு திடீரென எல்லாமே பிரமாண்டமாய் தெரியும். உண்மையில் நானும் அந்த நிலையில்தான் இருந்தேன்.


அம்புலிமாமா கதைகளில் வரும் பெயர்கள் எனக்குப் பிடிக்கும். மணிபுரம் எனும் நாட்டில் மணிச்செல்வன் எனும் ஒரு வணிகனுக்கு மணிமேகலை எனும் ஒரு மகள் இருந்தாள் என்றவாறாக கதை போகும். அந்தக் கதைகளில் ஒரு சஸ்பென்சை வைத்து முடிவில் அதை சொல்லி கதையின் 'நீதியும்'  கூறப்படும். அதிலும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதைகள் சிறுவர்களிடத்தில் இன்னும் பிரபலம். ஆனால் நிறையத் தடவைகள் வாசித்ததனாலோ என்னவோ கதை அரைவாசியிலேயே முடிவு என்னவாக இருக்கும் என ஊகித்துவிடுவேன்.


மன்னாரில் நாங்கள் இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. அப்பா, அம்மா, மகன், மகள் என அளவான குடும்பம். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து போவார்கள். ஆனால் நாங்கள் ஒருநாள் கூட அவர்கள் வீட்டிற்கு சென்றதில்லை.

விடத்தல்தீவில் இருக்கும்போதே மம்மி எங்களை பிற வீடுகளுக்கு செல்ல விடமாட்டார். " 


"ஆற்ற  வீட்டையும் போய் அவங்களுக்கு   கரைச்சல் குடுக்கக் கூடாது. அவங்க வீட்டில சாப்பிடக் கூடாது." என்ற மம்மியின் குரல் இன்றும் எனக்கு கேட்கிறது. சுற்றியிருந்த குடும்பங்களின் அத்தனை பிள்ளைகளும் எங்கள்
வீட்டிற்கு உரிமையாய்   வந்து போவார்கள். ஆனால்  நாங்கள் போனதேயில்லை. அதிலும் ஆம்ஸ்ராங் அண்ணா ( 1969 
 இல் பிறந்தவராம்!) எங்கள் வீட்டு குசினிக்குள் புகுந்து சாப்பிட்டுப் போகும் அளவுக்கு அவரது நெருக்கம் இருக்கும்.

இதில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது ஓகே. ஆனால் இதனால் எங்களின் சமூகமயமாக்கல் வெகுவாக பாதிக்கப்பட்டதை எங்கள் பெற்றோர் உணரவில்லை. கிட்டத்தட்ட எல்லா வெளிவேலைகளையும் மம்மியே செய்துவிடுவார். பக்கத்துக் கடைக்குப் போதல், அல்லது பக்கத்து வீட்டிற்கு அப்பம் கொண்டு போய்க் கொடுத்தல் 
போன்ற ஒரு சில வேலைகளையே நான் செய்வேன். இதனால் ஊரில் '
ஞானசீலன்ர  மக்கள் எண்டால் அவ்வளவு அருமையான மக்கள். யாருடைய கரைச்சலுக்கும் போகாதுகள்' என்ற நல்ல பெயர் நிலவியது. நல்ல பெயர் வாங்கியவர்கள் அதனால் எவ்வளவு
கஸ்ரப்படுவார்கள் என்று அவர்களைக்  கேட்டால்தான்  தெரியும்.


ஒரு தந்திரம் தெரியாது. வீட்டில் விசேட வைபவங்கள் இடம்பெறாததால் விருந்தினர்களை  எப்படி வரவேற்று உபசரிப்பது, எப்படி பேசுவது பழகுவது போன்ற அடிப்படை சமூகமயமாக்கல் தகமைகளை இழந்தேன். நல்ல பிள்ளையாக இருக்க  மற்றவர்களை நேரடியாக எதிர்க்கும் வீரத்தை இழந்தேன். இது என் பரம்பரை அலகினாலும்  வந்திருக்கலாம். என் அப்பா மிகவும் சாதுவானவர்.


ஒரு தடவை  என்னை  விட ஓரிரு வயது குறைந்த சிறுவனொருவன் விளையாட்டுத்
தகராறினால்  நான் எதிர்த்துப் பேச என் அருகே வந்து என் கைப் பெரு விரலை  கையின் பின்புறமாக அழுத்திவிட்டான். இரண்டு நாளைக்குப் பிறகு அந்த வலி போய்விட்டாலும் அவனை ஏன் நான் திருப்பி அடிக்கவில்லை; நான் ஒரு
கோழையா  என்ற வேதனை கடுமையாக இருந்தது. இப்போதும் அது சில நேரங்களில் வலிக்கும்.


அந்நேரத்தில் மன்னார் ஸ்டேடியத்தில் ஒரு இசை விழா இடம்பெற்றது. மிகவும் கோலாகலமாக  ஜனநெரிசலுடன் நடந்தது. அது விடுதலைபுலிகளின் நிகழ்ச்சி. வழியெல்லாம் இயக்க உறுப்பினர்கள் ஆயுதத்துடன் காவல் நின்றார்கள். தேனிசை செல்லப்பா என்ற பிரபல பாடகர் அங்கு பாடினார். அவரைப் புகழ்ந்து பேசியவர்கள் அவரது பெயரை வைத்து வார்த்தை விளையாடினார்கள். செல் வருகிறது அப்பா என்றும் இங்கிருந்து கெதியாகச் செல்லப்பா என்றும் பொருள் என்றார்கள். அதுதான் நான் முதலில் பாரதத் இயக்க விழா என்று  நினைக்கிறேன்.


அப்புறம் ஒரு மழை நேரம் மறக்க முடியாதது. அன்று மிகவும் கடுமையாக மழை பெய்தது. ஒரே நாளிலேயே வீட்டின் முன்னாள் இருந்த குளம் நிரம்பிவிட்டது. மழை விட்டதும்  நானும்  தங்கச்சியும் அங்கு போய்  பேப்பரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென குளத்தின் மறுகரை வழியே ஆமிக்காரர்கள் ஆயுதங்களுடன் ஓடி வருவதைக் கண்டோம். ஒரு கணம் மூச்சு நின்றுவிட்டது.
அவர்கள் எங்களை சுடுவதற்காக ஓடிவருவதைப் போல இருந்தது. இருவரும் விழுந்தடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினோம்.
எங்களைத் துரத்திக் கொண்டு வீட்டுக்குள் வருவார்கள் என சினிமாத்தனமாக எண்ணினேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இலங்கையில்
என் இளமைப் பருவம் முழுவதும் எந்த நிமிடமும் எந்த அசம்பாவிதமும் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் கழிந்தது என்றால் அது மிகையல்ல.


பின்பு இராணுவத்திற்கும் இயக்கத்திற்கும் சண்டை மூண்டது.  நாங்கள் மன்னார் போய் மூன்று மாதங்களுக்குள்ளாகவே அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் போய்விட்டது. மன்னார் தீவிலிருந்த  மக்கள் இலங்கைத் தீவின் பெருநிலப் பரப்புக்கு இடம்பெயரத் தீர்மானித்தார்கள்.
அதற்காக மன்னார்த் தீவின் கடற்கரையில் உள்ள பள்ளிமுனையில் நாங்கள்  கூட்டம் கூட்டமாக காத்திருந்தோம். இருந்த படகுகளில் மீனவர்கள் மக்களை ஏற்றி இறக்கினார்கள்.
எங்கள் குடும்பமும் பிரயாணித்தது. அது ஒரு பத்து கிலோமீட்டர் இருக்கலாம். ஒரு கட்டத்தில் படகு பயணிக்க முடியாத அளவு
குறைந்த கடல் மட்டம் வந்ததும் இறங்கி கரை வரை நடந்தோம்.  அது மாதோட்டம் எனப் புகழ் பெற்ற மாந்தை எனும் ஊர். நாங்களும் இன்னொரு குடும்பமும் ஒரு மரத்தின் கீழ் சென்று இளைப்பாறினோம்.


சற்று நேரத்தின் பின் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் வந்து "வாங்க" என்று அழைத்தார். அவர் எங்களுடன் இருந்த யாரோ ஒருவருக்கு தெரிந்தவர் என நினைத்து போனோம். ஆனால் அழைத்தவரின் வீட்டில் வந்த அகதிகள் அனைவருக்கும் சாப்பாடுகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.  அந்த வீட்டுக்காரர் அவ்வளவு பணக்காரர் இல்லை. மத்தியதர வர்க்கம்தான். இருந்தாலும் அவர்களது இரக்கம் ,  உபசரிக்கும் பண்பு சரியப்பட வைத்தது.


நாங்கள் மறுபடியும் எங்கள் ஊரைச் சென்றடைந்தோம். அங்கும் வெவ்வேறு 
ஊர்களிலிருந்து   இடம்பெயந்து வந்த மக்கள் ஊர் மக்கள் எல்லோரது வீடுகளிலும் தங்கி இருந்தார்கள். அப்படி ஒரு சமூகச் சூழல் அமைவது அரிது. எனக்கும் புதிது. ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் கலந்து வசித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
அந்த நேரத்தில் நான் 'புத்திசாலி' என்று நானே கர்வப்பட்டுக் கொண்ட சில சம்பங்கள் ஞாபம் வருகின்றன.
படித்துவிட்டு சிரிக்காதீர்கள். அப்போது நான் siruvan என்பதை மறக்காதீர்கள். 


ஒரு தடவை சிறுவர்களாகிய நாங்கள் வீட்டில் அமைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் சாப்பாட்டில் மரக்கறி இருக்குமோ இல்லையோ கடற்கரை கிராமம் என்பதால்
மீன் இருக்கும் ( மீனின் வால் துண்டுப் பகுதிக்கு போட்டி இருக்கும்). ஆனால் சிலருக்கு மீன் பிடிக்காது. சிறுவர்கள் மீன் சாப்பிடாமல் இருந்தால் அம்மாக்கள் திட்டுவார்கள். மற்ற பிள்ளைகள் பயந்து சாப்பிட்டு விடுவார்கள். நான் மீனின் ஒரு பக்கத்தை சாப்பிட்டுவிட்டு சாப்பிடாத பகுதியை மற்றவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்வேன். பின் அவர்களிடம் " பார்த்தீங்களா.நீங்கள் எல்லோரும் சாப்பிடு விட்டீங்க, நான் சாப்பிடேலா...நீங்க சரியான
பயந்தாங்கொள்ளிகள்.!" என்பேன். உடனே அவர்கள் அம்மாக்களிடம் முறையிட அவர்கள் 
வருவதற்குள் மீனை பிரட்டி போட்டுவிடுவேன். அதில் மீன் சதை இல்லாததால் அம்மாக்கள் திட்டாமல் போய்விடுவார்கள்.


இன்னொன்று எங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு.  அவ்விளையாட்டில் நான் மட்டும் பிடிபட மாட்டேன். ஏனென்றால் நான் ஒளிந்து கொள்ளும் இடம்
வீட்டுக்கு   வெளியே தனியாக இருந்த பாத்ரூம். அதுவும் கதவை திறந்தே வைத்திருப்பேன். அதனால் கண்டுபிடிப்பாளர் கதவை யாரும் திறந்து வைத்துக் கொண்டே யாரும் ஒளிந்திருக்க மாட்டார்கள் என எண்ணி எட்டிப் பார்க்காமலே போய் விடுவார்கள். ஒரு தடவை கூட பிடிபடாமல் அலுத்துப் போய் நானே போய் ரகசியத்தை உடைத்து புத்திசாலித்தனத்தை பறைசாற்றினேன். 

இன்னொரு புத்திசாலித்தனம் தெனாலிராமன் வகையை சேர்ந்தது. எனக்கு பெட் காசு கிடைக்கவில்லை.
நாங்கள்  ஒருநாள் பேசிக் கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு சுதாகரன் "எங்கட அப்பா ஒருநாளைக்கு பத்துகிலோ மீன் பிடிப்பார்" என்றார். "உங்கட அப்பாவால் அது முடியாது!" என்றேன்.
"ஏன்? sila நாட்களில் பதினைந்து கிலோகூட கொண்டு வருவார்"
  "முடியாது. உங்க அப்பாவால் பத்து கிலோ மீன் பிடிக்கவே முடியாது" என்றேன் அறுதியும் இறுதியுமாக. பெட் கட்டப்பட்டது.   அடுத்த நாள் அவனது அப்பா மீன் கொண்டு வரும்போது கடற்கரைக்கு வரச் சொன்னார்கள்.
"ஏன் நான் வரவேண்டும்? இப்போதே நிரூபிக்கிறேன். நாளைக்கு நீ உங்கட அப்பா கொண்டு வரும் மீனை சரியான தராசில் அளந்து பார். அது நிச்சயமாக பத்து கிலோவுக்கு ஒரு அம்பது கிராம் கூட அல்லது குறையத்தான் இருக்கும்.மிகச் சரியாக பத்து கிலோ இருக்கவே இருக்காது..."


எனக்கு பெட் காசு கிடைக்கவில்லை. அடிதான் கிடைத்தது.


பின்பு ஒரு நாள் நானும் சினையாவும் இன்னும் சிலரும் மன்னார்த் தீவு நோக்கி புறப்பட்டோம். நாங்கள் அவசரத்தில் ஓடி வந்ததால் நிறையப் பொருட்களை கொண்டுவர இயலவில்லை. அதிகாலையில் ரகசியமாக படகில் புறப்பட்டோம். மன்னார்த்தீவின் பெருநிலப் பரப்பை நோக்கிய பகுதி இருமுனைகளாக நீண்டிருக்கும். ஒரு முனையில் மன்னார் நகரம் அமைந்திருந்தது. மறு முனையில் யாருமில்லாத காடு. நாங்கள் அந்த காட்டை அடைந்து அங்கு சற்று இளைப்பாறினோம்.


ஒரு காட்டில் ஒரு மரத்தின் கீழ் படுக்கை எதுவுமில்லாமல் படுத்து  உறங்கியது அப்போதுதான் முதல் தடவை.அங்கே ennaik கடித்த எறும்பு கூட ஞாபகமிருக்கிறது. விடிந்தபின் naanum சினையாவும் மறுமுனையை அடைந்தோம். படகை நடுக்கடலில் விட்டுவிட்டு இடுப்பளவு ஆழத்தில் 
நடந்தே கரையை  அடைந்தோம்.


ஒரு நகரத்தை மனித நடமாட்டமே இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ஆங்கிலப் படத்தில் வைரசால் பாதிக்கப்பட்டு இரத்தக் காட்டேரியான மனிதர்களுக்கு பயந்து மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேறு ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். கதாநாயன் மட்டும் தனி ஆளாக அந்நகரத்தில் வசிப்பார். யாருமே இல்லாத வீதிகளில் அவர் மட்டும் காரில் செல்வது பார்க்க விநோதமாக இருக்கும். ஆனால் மன்னார் நகரமும் அப்படித்தான் இருந்தது. ஒரு காகம், நாய் கூட காணவில்லை. நான் சிறுவன் என்றதாலும் பக்கத்தில் சின்னையா வந்ததாலும் எனக்கு பயமிருக்கவில்லை, நாங்கள் நடந்து எங்கள் வீட்டை அடைந்தோம். வீடுக் கதவின் சாவியை ஏற்கனவே தொலைத்துவிட்டதனால் ஸ்டோர் ரூமின் பின்பக்க ஜன்னலை கதவாக்கவேண்டியதாயிற்று. அது மிகவும் சிறிய ஜன்னல், 
குறுக்கே கிடையாக ஒரு கம்பி இருக்கும். சின்னய்யா அந்த ஜன்னல் அருகில் ஏற்றிவிட்டார். எந்த ஜன்னல் என்னைப் போல ஒரு சிறுவன் கடினப்பட்டு நிலையக் கூடிய அளவே இருந்தது. முதலில் கால்களை உள்ளே நுழைத்து பின் உடம்பு பின் தலையென உட்செலுத்தி அறைக்குள் தொப்பென விழுந்தேன். அப்போது எனக்கு ஒரு சாதனை போல் தெரிந்தது.
சின்னையாவால் முடியாததை நான் செய்தது போல இருந்தது. முக்கியமான ஆவணங்கள், 
சான்றிதழ்களை  எடுத்துக் கொண்டு திரும்பினோம். வழியெல்லாம் சிறுவன்   ஒவ்வொரு சந்தியிலும் கவனமாக பார்த்தபடி வந்தார். யாருமில்லாத ஊரில்
எங்கள் இருவரையும் ஆமி கண்டிருந்தால் சுட்டிருக்கும் என விடத்தல்தீவுக்கு வந்தபின்தான் புரிந்தது.


Friday, August 13, 2010

இந்தியாவுக்கு ஒரு பயணம்

சில மாதங்கள் சென்றதும் மக்களில் பலர் இந்தியாவுக்கு போவதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பும் நிறையப் பேர் வேறு கலவர நேரங்களில் போயிருக்கிறார்கள். எனவே இம்முறையும் நிறையப்பேர் தலைமன்னார் கடலால் இந்தியாவுக்கு சென்றார்கள். எங்கள் வீடுகளிலும் இந்தப் பேச்சு அடிபட ஆரம்பித்தது. பெரியண்ணாவுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்ததனால் சற்றுத் தயக்கம் நிலவியது. இன்னும் இந்தியாவுக்கு சென்றால் படிப்பு குழம்பிவிடும் என்ற இன்னொரு குழப்பமும் காணப்பட்டது. இருந்தாலும் உயிர் பயத்திற்கு முன்னால் எல்லாம் தோற்றுப் போய் தமிழ் நாட்டை தஞ்சமடைவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தவமண்ணன் தன் நண்பர் ஒருவர் இந்தியாவுக்கு குடும்பத்துடன் செல்ல அவர்களுடன் இணைந்து அவரும் சென்றுவிட்டார். மீதமாக இருந்தது மம்மி, பப்பா, மூன்று அண்ணாமார், தங்கச்சி மற்றும் நான். ஏழு பேரும் செல்வதற்கு ஒருநாள் குறிக்கப்பட்டது. சிறுவர்களான எங்களுக்கெல்லாம் ஒரே குஷி. படங்களில் பார்த்த இந்தியாவை நேரில் பார்க்கப் போகிறோம் என்பதே த்ரில்லாக இருந்தது. வெகு  விரைவிலேயே அந்த நாளும் வந்தது.
அதற்கு முதல் நாள் முழுவதும் "நாளைக்கு இந்தியா...!  நாளைக்கு  இந்தியா...!"என்று ஒருவருக்கொருவர் சந்தோசமாக சொல்லிக் கொண்டு திரிந்தோம். அடுத்தநாள் எங்கள் ஊரிலிருந்து பொருட்களைத் தயார் பண்ணிக் கொண்டு புறப்பட்டுச் சென்றோம். அன்று மாலையே மன்னர் தீவின் நடுப்பகுதியில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் எருக்கலம்பிட்டியை சென்றடைந்தோம்.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மக்கள் வாழும் மிகப் பெரிய கிராமம் அல்லது சிறு நகரம்.அங்கே ஒருநாள் தங்கிவிட்டு அடுத்தநாள் இரவு நாங்கள் தலைமன்னார் கடற்கரைக்கு பிரயாணப்பட்டு சென்றோம்.

இரவு ஒன்பது மணியிருக்கலாம்.தலைமன்னாரிலிருந்து  ஒரு  படகில்  இந்தியாவை நோக்கி எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பிரயாணம் குளிர்காற்றுடன் கூடிய த்ரில்லுடன் ஆரம்பித்தது. எங்கள் படகில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் இருந்தன. குழந்தைகளும் பெரியவர்களுமாக பதினைந்து பேர் அளவில் இருந்தோம்.

அவ்வப்போது பெரியவர்கள் இந்த இரவு நேர விசா பெறாத பிரயாணத்தைப் பற்றி பதட்டமாக பேசியது என்னை ஒன்றும் பயமுறுத்தவில்லை. இப்படிப் போன சில படகுகளுக்கு ஏற்பட்ட கதிகளைப் பற்றி பேசினார்கள். படகு கவிழ்ந்து பத்துப் பேர் செத்துப் போனது, இரு நாட்டு கடற்படைகளின் துவக்குச் சூடுகள், இரவில் திசை புரியாமல் வேறெங்கோ சென்றுவிட்ட படகுகள் என கதைகள் விரிந்தன.

சற்று நேரத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக தலைமன்னார் கடற்கரை காணாமற் போனது. எல்லாத் திசையையும் எல்லா இடத்தையும் கருமை கலந்த கடலும் வானமும் நிரப்பிக் கொண்டன. அன்று ஒரு தேய்ந்த நிலவு இருந்திருக்க வேண்டும்.ஆனாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் பல இருள் உருவங்களே இருந்தன.

படகோட்டி பல எச்சரிக்கைகள் கொடுத்தவாறே வந்தான்.
"சிகரெட் பத்திராதிங்க. சின்ன வெளிச்சம் கூட கடல்ல எவ்வளவு தூரம் இருந்து பார்த்தாலும் தெரியும். நேவி பார்த்தால் அவ்வளவுதான்!" என்றான்.

மணித்தியாலங்களில் நீண்ட அப்பிரயாணத்தில் தூரத்தில் ஒரு நேவிக் கப்பலைக் கண்டது உண்மைதான். கடல் தண்ணி சில நேரங்களில் உள்ளே வந்து நனைக்க மம்மி ஒரு டின்னில் கொண்டு வந்த முட்டை மாவினை இடைக்கிடையில் அரைத்தபடி பிரயாணித்தோம்.

என் பிறந்த திகதி 1978 டிசம்பர் 13 . எனக்கு கிட்டத்தட்ட நான்கு வயதாகும்போது இலங்கையில் இனப்பிரச்சனை போர் வடிவில் ஆரம்பித்தது. அது 1983  ஜூலை. கொழும்பில் கலவரம் ஏற்பட்டு அது நாடு முழுவதும் பற்றிக் கொண்ட ஆண்டு. அதனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு சாதாரண சமுதாய வாழ்க்கையை நான் கண்டதில்லை. ஆமி, போலீஸ், செக்கிங், சூடு, சாவு இவையில்லாமல் ஒரு சமுதாயம் இருக்காது என்றே எண்ணினேன். எல்லா நாட்டிலும் ஆமிக்காரன் ரோந்து வருவான்; செக் பண்ணுவான் என்றே என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் நிறையப் புத்தகங்களை வாசிக்க வாசிக்க அப்படி இல்லாமலும் நாடுகள் இருக்கலாம் எனப் புரிந்து கொண்டேன். அப்படி ஒரு இடமாக இந்தியாவைக் கேள்விப்பட்டதனால் அங்கு செல்வது இன்னும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இடையில் ஒரு இடத்தில் ஆழம் குறைந்து படகு கரை தட்டியது.

"இதுதான் ராமர் அணை." என்றான் படகோட்டி. அங்கு தரை ஒன்றைக் காணவில்லை. ஆழம் குறைவான பிரதேசத்தை அப்படிச் சொன்னான். பின்பு அதை விட்டு தள்ளி பிரயாணித்தோம்.

பிரயாண நேரம் அதிகரிக்க அதிகரிக்க எல்லோரும் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். உண்மையில் படகோட்டி திசையை சற்று தவறத்தான் விட்டிருந்தான்.

"போய் விடுவோம், போய் விடுவோம்." என்று சொல்லிக் கொண்டே வந்தான். நாங்களும் நம்பிக்கையுடன்தான் இருந்தோம்.  (வேறு வழியும் இருக்கவில்லையே!). கடைசியில் கரையைக் கண்டு விட்டோம்.

"இந்தியா வந்திட்டுது! இந்தியாதான்."

சந்தோசமும் சந்தேகமும் கலந்த குரல்கள் . அப்போது விடிகாலை மூன்று மணியிருக்கும்.  மெது மெதுவாக கரையை நோக்கி பிரயாணித்தது படகு. கரையை நெருங்க நெருங்க கரையில் ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"அவன் ஒரு இந்தியாக்காரன்தான்" என்றான் சாந்தன் கிசுகிசுப்பாக.

முதன்முதலாக படத்தில் பார்த்த மனிதர்களை நேரில் பார்ப்பது த்ரில்லாக இருந்தது. படகு எங்களை இறக்கிவிட்டு திருப்பிச் சென்றுவிட்டது.

நாங்கள் அவனை விசாரித்தோம். அவன் ஒரு மீனவன். அது தனுஷ்கோடியிலிருந்து ஆறு மைல் தள்ளி இருக்கும் இடமாம். படகுக்காரன் குழப்பத்திலோ அல்லது தன் பாதுகாப்புக்காக இங்கே இறக்கிவிட்டு போய்விட்டான். தான் தனுஷ்கோடிக்கு அழைத்துச்  செல்வதாக அம்மனிதன் சொன்னான்.

பின்னிரவில் நட்சத்திரங்களின் துணையுடன் தனுஷ்கோடியை நோக்கிய எங்களின் யாத்திரை தொடங்கியது.  ஆளாளுக்கு ஒவ்வொரு பொதியை தூக்கிக் கொண்டு ஆறு மைல் நடந்தோம். ஆனால் பொதிப் பாரமோ  பிரயாணக் களைப்போ அல்லது தூக்கக் கலக்கமோ என்னை ஒன்றும் செய்யவில்லை. என் கனவுலகத்தில் வந்து இறங்கி விட்டேன். அது போதும்...

நாங்கள் தனுஷ்கோடியை அடைந்தபோது பொல பொலவென விடிந்துவிட்டிருந்தது. துனுஷ்கோடி ஒரு பழைய சுனாமியில் அழிந்த ஊர் எனவும் சத்ரியன் படத்தில் விஜய காந்த் க்ளைமாக்சில்  சண்டையிடும் இடிந்த வீடுகள் இருக்கும் இடம் அதுதான் எனவும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவ்விடத்தை நான் காணவில்லை.

அங்கிருந்த    ஒரு கிணற்றடியில் நாங்கள் குளித்துவிட்டு புறப்பட்டோம். அப்போது மூத்த அண்ணா 7500 பணத்தையும் ஒரு கடிகாரத்தையும் மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின் ஞாபகம் வந்து ஓடிப் போய் பார்த்த போது யாருக்கோ அன்று அதிஷ்டம் அடித்து விட்டிருந்தது. கவலையுடன் திரும்பிவந்தார். எங்களுடன் வந்த  ஞானேசர் குடும்பம் எங்களுக்கு அந்த  நிலையிலும் பணம் தந்து  உதவினார்கள்.  இதை என் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால்தான் அப்பணத்தின் அளவும் அச் சம்பவமும் என்னால் மறக்க முடியாமல் இருந்தது.

பின் ஒரு 'லாரியில்' (இந்தியன் லொறி என்பதால்!) ஏறிக் கொண்டோம். அந்த ஊர் போலீஸ்காரர்களின்  பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு பிரயாணப்பட்டு மண்டபம் முகாமை அடைந்தோம். அது இலங்கை அகதிகளை பெருமளவில் கொண்ட ஒரு அகதி முகாம்.  அதற்குள்  நாங்கள் நுழையும்போது வாசலில் காவலுக்கு நின்ற போலிஸ்காரரில் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

"தம்பி, எங்கேயிருந்து வரிங்க? யாழ்ப்பாணமா, கொழும்பா?"

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. கொழும்பிலிருந்து அகதிகள் படகில் வருவார்களா? சாதாரண மக்களுக்குத்தான் இலங்கையின் பிரதேச அமைவுகள், எங்கே மோதல்கள் நடக்கின்றன என்பது தெரியாது. ஒரு போலிஸ்காரருக்குமா? ஆனால் அது ஆச்சரியமில்லை என பிற்காலத்தில் மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை பார்த்தபோது புரிந்தது. அதில் மாங்குளத்தில் மலை இருப்பது போல ஒரு காட்சி வரும். ஒரு நிஜ உலகின் இடத்தை சினிமாவில் சொல்லும்போது அதனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலா சொல்வார்கள்? ஒரு புத்தகத்தையோ அல்லது கூகுலையோ தட்டியிருந்தால் ஒரு வினாடியில் தெரிந்திருக்கும். போகப் போக இந்திய மக்களின் மனதில் இலங்கையின் வரைபடம் எப்படியிருந்தது எனப் புரிந்தபோது மனனக் கல்விக்கும் பொது அறிவுக்குமான வித்தியாசம் புரிந்தது. சில வேளை அந்தப் போலிஸ்காரர் செய்திகளில் அதிகம் அறியப்பட்ட இந்த இரு நகரங்களின் பெயர்களை மட்டும் அறிந்தவராக இருந்திருக்கலாம்.

அந்த முகாமில் எங்கள் விபரங்கள் பதியப்பட்டன. அங்குதான் முதன்முதலாக சாப்பாட்டிற்காக நான் ஒரு தட்டுடன் வரிசையில் நின்றேன். பருப்பும் சோறும் மட்டுமே. அகதி வாழ்க்கையின் முதலாவது எண்ணக்கரு விதைக்கப்பட்டது.. ஓ! நாங்கள் இப்போது அகதிகள் அல்லவா?

அந்த  நேரங்களில்  எனக்கு ஒரு கனவு மறுபடி மறுபடி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. கடலுக்குள் நான் முழ்கி இருப்பேன். வெளியே வரலாம் என எத்தனிக்கும்போது யாரோ என்னை பின்னாலிருந்து தோளைப் பிடித்து அமுக்குவார்கள். நான் மூச்சுவிட முடியாமல் தவிப்பேன். முடிவில் ஒரு குண்டூசியால் முதுகில் குத்துவார்கள். நான் திடுக்கிட்டு விழிப்பதுடன் நிறைவடையும்.

அங்கு ஒரு நாள் இருந்திருப்போம். உடனடியாகவே நிலையான முகாம்களில் அனுமதிப்பதற்காக பேருந்துகள் தயாராகின. நாங்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுடன் ஏறியவுடன் அவை புறப்பட்டன. அவை ராமேஸ்வரத் தீவையும் இந்தியப் பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் பாம்பன் பாலத்தை கடந்து அவை சென்றன. ஆசியாவிலேயே மிகப் பெரிய பாலம் என்று சொன்னார்கள். சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமானது. அதற்கு சமாந்தரமாக ரயில்வே பாதைக்கான பாலமும் நீண்டு சென்றது பிரமிப்பை தந்தது.

இவ்வாறாக  இந்தியத்  தமிழ்   நாட்டுக்  கிராமங்களையும்  சில  நகரங்களையும்  கடந்து  எங்கள்  பஸ்  சென்றுகொண்டிருந்தது. ஓரிடத்தில்  பஸ்  நின்றபோது  யாரோ  சிலர்  சட  சடவென  ஏறினார்கள். அவர்கள்  இந்தியப்  பொதுமக்கள். எங்களிடமிருந்த  லக்ஸ்  போன்றவற்றிற்கு இலங்கைப்  பெறுமதியில்  அவற்றை  விட  மூன்று  நான்கு  மடங்கு  அதிக பணம்  அல்லது  கூடையில்  வைத்திருந்த  பழங்களைத்  தந்து  வாங்கிக்  கொண்டார்கள்.அவர்கள் ஏழைகள்தான். அவற்றைப்  பின் நல்ல  விலைக்கு  பணக்காரர்களுக்கு விற்பார்களாம். எனக்கு  அப்போதுதான்  நாம்  வேறு  ஒரு நாட்டில் இருக்கிறோம், அன்னியர்கள்  என்பது  உறைத்தது. பதினெட்டு கிலோமீட்டர்  தூரத்தில்  இவ்வளவு  வித்தியாசமா? பணப்  பெறுமதி, பொருட்களின்  விலைகள், கலாச்சாரம், மொழி  உச்சரிப்பு  என  எல்லாவற்றிலும்  பாக்கு  நீரிணை  வித்தியாசத்தை  ஏற்படுத்திவிட்டதே!

அவர்கள் தந்த  பழங்களை  ‘பேரிக்காய்’என்றார்கள். முதலில்  எனக்கு  அந்த  பேரே  பிடிக்கவில்லை.அது  அப்பிள்  பழம் போல  தோற்றமளித்து  .ஆனால் ருசியில்  வேறுமாதிரி  இருந்தது. எனக்கு ஏனோ  அந்தப்  பழம்  பிடிக்காமலே  போய்விட்டது.

கண்ணகியின்  தீயினால்  சுத்தமாக்கப்பட்டு  தமிழுக்கும்  தமிழ்  சினிமாவுக்கும்  பேர்   போன  மதுரை  மாநகருக்கு  அடுத்ததாக  அமைந்திருக்கும்  சிவகங்கைச்  சீமை மாவட்டத்தில்   நாங்கள்  குடியிருக்க  அனுமதிக்கப்பட்டோம். அந்த ஊரின்  பெயர்  முத்தனேந்தல்.அது  மதுரையிலிருந்து  முப்பத்தாறு  கிலோமீட்டர்  தூரத்திலும்  மானமதுரையிலிருந்து  பத்து   கிலோமீட்டர்  தூரத்திலும் இரண்டு நகரங்களையும்  இணைக்கும் பிஸியான  ஒரு  பெருந்தெருவுக்கு  அருகில்  அமைந்திருந்தது. ‘முத்தனேந்தல்’ என்ன ஒரு அழகான  பெயர். பொதுவாகவே  அரசப்பட்டி, அத்திப்பட்டி(!) என  தமிழக  கிராமப்  பெயர்கள்  எனக்குப்  பிடிக்கும்.

அக்கிராமத்தில்  பெருந்தெருவுக்கு  அண்மையில்  ஒரு பழமையான சத்திரம்  இருந்தது. அது  புனித  ஸ்தலங்களுக்கு  யாத்திரை செல்லும்  பக்தர்கள் தங்கிச்செல்வதற்காக  கட்டப்பட்டிருந்தது.அது  ஒரே  ஒரு  கட்டிடம்தான். ஆனால்  கட்டிடத்தின்  பரப்பே  …..அளவு  விஸ்தீரணம்  இருக்கும் . தமிழ்ப்படங்களில்  பழங்கால அல்லது  கிராமத்து வீடுகள் என்றால்  அதைப்  போல  ஒரு வீட்டைத்தான்  காடுவார்கள்.  அதன் கூரையை சற்றே இறங்கி நடுப்பகுதியில் இடைவெளி இருக்கும்.அதற்கு  நேரே தரையில் அதன்  அளவு  சதுரமாக  ஒரு பள்ளமான  இடமும் இருக்கும். அதனால்   மழையும்  வெயிலும்  காற்றும் தாராளமாக வீட்டினுள் நுழைந்தன.

எங்களுக்குத்  தேவையான சமையல்பொருட்கள்,உடைகள்  மற்றும்  இரு  கப்புக்  கோடுகள் போடப்பட்டிருக்கும். மோகன்  முதற்கொண்டு  காதற்  தோல்வியில்  சிக்குண்ட  தமிழ்  ஹீரோக்கள்  அதனைத்  தோளில் சுற்றிக்  கொண்டுதான்  இருமலுடன்  கூடிய  நல்ல  அழகான  சோகப்  பாடல்களை  எல்லாம்  பாடியிருக்கிறார்கள். மன்னிக்கவும். எனக்கு  தமிழகத்தை  எனக்குத்  தெரிந்த  தமிழ்ச்  சினிமா  மூலமாகத்தான்  அளவிட  முடிகிறது. ஏனெனில்  தமிழகத்தை  முதலில்  எமக்கு  அறிமுகப்படுத்தியது  அதுதானே!

அச்சத்திரத்தின்  நீண்ட  அறைகளும்  விறாந்தைகளும்  போர்வை  மற்றும்  சேலைச்  சுவர்களால்  தடுக்கப்பட்டு  சிறு  அறைகளாக  ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  வழங்கப்பட்டன. எட்டடிக்கு  எட்டடி  என்பார்கள். அங்கே  அவ்வளவுதான்  எங்கள்  மொத்த  வீடே. சமையலுக்கு  சத்திரத்தின்  பின்புற  முற்றம்  பயன்பட்டது.

எங்கள் முகாம் மற்றைய முகாம்களைப் போல  இறுக்கமான கட்டுப்பாடுகளைக்  கொண்டிருக்கவில்லை. ராமேஸ்வரம்  மண்டபம்  முகாமில்  வெளியே  செல்வதற்கு  கூட  கடினமான  பதிவு  நடைமுறைகள்  பின்பற்றப்படுகின்றன  எனக்  கேள்விப்பட்டோம். அப்பாடி! எங்களுக்கு  அப்படி  ஒன்றும்  இல்லை. எங்கள்  வீடு  போல அங்கு வசித்தோம். எங்கும்  போகலாம்.வரலாம்.

மாதாமாதம்  ‘சம்பளம்’ வழங்கப்பட்டன. ஒரு  குடும்பத்தில்  தலைவருக்கு  75 ரூபாவும்  அங்கத்தவர்களுக்கு  தலைக்கு  50 ரூபாவும்  தந்தார்கள். ரேசனில்  அகதிகளுக்கு  அரிசி  கிலோ  60 சதத்திற்கு  தந்தார்கள். வெளியில்  ஒரு  படி  7 ரூபா  விற்றதாக  ஞாபகம்.அதனால் நாங்கள்  அந்த  அரிசியை  வெளியில்  விற்று  கொஞ்ச  பணமும்  சம்பாதிக்க  முடிந்தது. அந்நேரத்தில்  இலங்கையில்  ஆகக்குறைந்த  பணமாக  50 சதமும்  25 சதமும்  கூட பாவித்தோம். ஆனால்  இந்தியாவில்  5 சதம்  10  சதத்திற்கு கூட பொருட்கள் இருத்தது ஆச்சரியமாக இருந்தது.

போன புதிதில் பப்பாவுடன் முத்தநேந்தலில் ஒரு தேநீர்க் கடையில் இட்லி சாப்பிட்டது மறக்க முடியாது. தட்டுக்கு  பதிலாக  வாழையிலை வைத்து  தண்ணீர் தெளித்தார்கள். அதற்கு  முன்பு  வாழையிலையில்  நான் சாப்பிட்டதில்லை. நான்  கிறிஸ்தவனாக  இருந்ததனால்  இலங்கையில் சைவர்களுக்கு  கிடைக்கும்  அந்த  வாய்ப்பும்  இல்லை. இட்லியை சுடச்சுடக் கொண்டு  வந்து வைத்தார்கள்.பூப்போல இட்லி  என ஏன் இந்திய எழுத்தாளர்கள்  எழுதுகிறார்கள்  என  அப்போது  கண்டுகொண்டேன். அத்துடன்  அந்த  மரக்கறிச்  சாம்பாரை மறக்கவே முடியாது.இட்லியையும் சாம்பாரையும் கலந்து குழைத்து சாப்பிட்டது இன்னும் சுவைக்கிறது.

முத்தனேந்தல் சற்றே பெரிய கிராமம். கல் வீடுகளும் மண் வீடுகளும் கலந்திருந்தன. அநேகமான அக்கிராம வீடுகளுக்கு முற்றம், வேலி இல்லாமல் இருந்தது ஆச்சரியாமாய் இருந்தது. கிராமத்திற்கு பின்புறமாக ரயில் பாதை செல்கிறது.  நெல் மற்றும் கரும்புத் தோட்டங்கள். அவற்றுக்கு காவலாக வயது போன கிழவர்கள். மிக ஆழமான பெரும் கிணறுகளிலிருந்து பம்புசெட் எனப்படும் ஜெனரேட்டர் மூலம் தொட்டிக்கு குழாய் ஊடாக தண்ணீர் பாயும். அதில்தான்'ஊருசனம்’குளிக்கும். அத்தண்ணீர் வயலுக்கு செல்லும்.இதெல்லாம் உங்களுக்கு விபரிக்கவே தேவையில்லை.எத்தனை படங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஊருக்கு வடக்காக பிரதான வீதியைக் கடந்து ஒரு குறுக்கு வீதியால் சென்றால் வைகை நதி வரும் என்றார்கள். தென்பொதிகை,வைகை நதி தினம் பாடும் தமிழ்ப் பாட்டை நேரிலேயே  கேட்டுவிடலாம் என்ற அவாவுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினோம். ஆனால் ‘வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்’தண்ணீருக்குப் பதிலாக வெறும் காத்து மட்டும்’ ஆடிக் கொண்டிருந்தது. மணலாறு ஓடிச் சென்றதை பற்றி கேட்டால் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் தண்ணீர் புரண்டோடும் என்றார்கள். அங்கு ஒரு பாலமும் இருந்தது. அதன் உயரத்திற்கு வரும் என்றார்கள்.

போன புதிதில் பள்ளிக்கூடம் போகவில்லை.எனவே ‘எங்களூரில்’புதிதாகத் திறந்த வாடகைச் சைக்கிள் கடையில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார்கள். முதல் நாள் முதலாளி எனக்கு வாடகைச் சைக்கிள் எடுப்பவர்களின் பெயர் விபரங்களைப் பதியவேண்டும் எவ்வளவு காசு வாங்க வேண்டும் என்று சொல்லித் தந்தார்.ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு ரூபாய் என்றார். சரியென்று தலையாட்டினேன்.மொத்தம் பதினைந்து சைக்கிள்கள் நின்றன.காலையில் சென்றதும் அவ்வளவு சைக்கிள்களையும் நன்றாகத் துடைக்க வேண்டும். பின்னேரம் மறுபடியும் பதினைந்தையும் துடைத்து கடைக்குள் அடுக்க வேண்டும். ஒரு நாலைந்து நாள் சென்றிருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் யாரோ ஒருத்தர் சைக்கிள் எடுத்துச் சென்றுவிட்டு ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்களுக்கு பின் ஒப்படைத்தார். நான் அவரிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டேன். பின்னேரம் முதலாளி பதிந்து வைத்திருந்த நேரத்தைப் பார்த்துவிட்டு,

“என்ன இது?ஒண்ணேகால் மணித்தியாலத்திற்கு ஒண்ணேகால் ரூபா வாங்க வேணாமா? ஒரு ரூபா மட்டும் வாங்கியிருக்க?”என்றார்.அப்போதுதான் என் அப்பாவி மூளைக்கு அது உறைத்தது.நான் விழித்துக் கொண்டு நின்றேன்.

“அடப்பாவி, என் பொழைப்பிலே  மண் அள்ளிப் போட்டுட்டியே!”என்றார். அதை அவர் சீரியசாகச் சொன்னாரா அல்லது சிறுவன் என்று சீண்டினார என்று தெரியவில்லை. பின் எனக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அடுத்த நாளிலிருந்து அந்தக் கடைப் பக்கமே போகவில்லை.
புகழ் வார்த்தைகள்  கூட மறந்து போகும். ஆனால் எப்படித்தான் இகழப்பட்ட வார்த்தைகள் மனதில் அழியாமல் நிற்கின்றனவோ தெரியவில்லை.eppothu யாரும் ஏதும் சொல்வார்கள்.நாம் அவமானத்தில் சுருங்கிப் போகலாம் எனக் காத்திருக்கிறது.

பின் நான் ஒரு கிலோமீட்டர் தள்ளி மெயின் ரோட்டுக்கு சற்று உள்ளே அமைந்திருந்த ஒரு ஊரின் பாடசாலையில் சேர்ந்தேன். இலங்கையில் ஆறாம் ஆண்டு படித்ததால் இந்தியாவில் அது ஐந்தாம் வகுப்புத்தான் பொருத்தமானது என்று யாரோ கணக்குச் சொல்ல தலைமையாசிரியர் (அதிபருக்கு இப்படி ஒரு சொல்லை முதலில் கேட்கும் போது விநோதமாய் இருந்தது) என்னை அதிலேயே சேர்த்துவிட்டார்.

அது சற்றுப் பின் தங்கிய பாடசாலை அல்லது பள்ளி என்பதால் இரண்டு சிறு கட்டிடங்களே இருந்தன. ஒவ்வொரு நாளும் சத்துணவும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு முட்டையும் வழங்கப்பட்டன.கிராமத்துப் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு வழியாக இருந்தது உண்மை. கிராமத்தவர்களையும் குறை சொல்ல முடியாது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். முதலில் வயிற்றுக்கு உணவு ஈய வேண்டும், பின்புதான் செவிக்குணவு என்பது தெரிந்ததுதானே? அடிப்படைத் தேவையை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத் தேவைகளுக்கு போவது முட்டாள்தனம். பசி காதை அடித்தால் எவனுக்கு  பாடம் கேட்கும்?

இங்கே ஒரு விஷயம்.இலங்கையில் இவ்வாறான நிலை இல்லை என்று அப்போது நினைத்திருந்தேன். சாப்பாட்டுக்காக பாடசாலை வருவது,சிறு வயதிலேயே படிப்பை விட்டு வேலைக்கு செல்வது என்பன இந்தியா போன்ற வறுமைப் பட்ட நாடுகளில்தான் நடக்கின்றன என எண்ணியிருந்தேன்.  ஏனெனில் அதுவரை நான் படித்த இரண்டு பாடசாலைகளிலும் அவ்வாறான நிலைமையைக் கண்டதில்லை. பிள்ளைகளின் படிப்பிற்காக எவ்வளவு பணத்தையும் உழைப்பையும் செலவிடத் தயாரான பெற்றோரை மட்டுமே பாத்திருந்தேன். உண்மையில் இலங்கையில் எழுத்தறிவு வீதம் ஆசிய நாடுகளிலேயே ஒப்பீட்டளவில் அதிகம் என்று படித்திருந்தேன். இருந்தாலும் பிற்காலத்தில் இலங்கையிலும் அவ்வாறான அவலம் உண்டு என அறிந்து கொண்டேன்.

இடைவேளை மணி தண்டவாளத்துண்டில் அடிக்கப்பட்டதும் ஓடிப்போய் தடுடன் வரிசையில் நிற்கையில் எனக்கு படங்களில் வருவது போல நமக்கும் நடக்கின்றதே என்று சிரிப்பாக இருக்கும். இலங்கையில் அந்த நேரம் இடைவேளையில் பிஸ்கட்,டீ போன்றவை வழங்கப்பட்டு அவற்றை சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் இப்படி மதியச் சாப்பாட்டிற்காக நின்றதில்லை.

நாங்கள் ‘சிலோனிலிருந்து வந்த பசங்கள்’என்பதனால் எங்கள் மீதான பார்வை மற்ற இந்தியச் சிறுவர்களிடம் சற்று மாறுபட்டே இருந்தது. இலங்கைப் பற்றி அங்கு நடப்பவை பற்றி சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமாய்க் கேள்வி கேட்பார்கள். நாங்களும் எங்களுக்குத் தெரிந்தைக் கூறுவோம்.எங்களில் சில குறும்புச் சிறுவர்கள் நன்றாக அளப்பார்கள்.அதையும் அவர்கள் கண்களை விரித்துக் கேட்பதை பார்த்து சிரிப்பாக இருக்கும். ஒரு சிறுவன், “எங்கட நாட்டில நாங்கள் மாடி வீட்டில இருந்தம்.கார் வச்சிருந்தம். எலாத்தையும் விட்டிட்டு வந்திட்டம்.குண்டு வீச்சில எல்லாம் அழிந்திட்டுதோ தெரியேல்ல” என்று அளந்ததுஞாபம் இருக்கிறது.அவன் சொன்னது பொய் என்றாலும் இலங்கையில் பல பேர் அவ்வாறான செல்வங்களையும் உயிர்களையும் இழந்து வந்தார்கள் என்ற பொது ரீதியில் அது உண்மை என்பதனால் விட்டுவிட்டேன்.

நான் அங்கு படித்து இப்போது சுமார் இருபது வருடங்கள் ஆகியும் எங்கள் வகுப்பாசிரியரின் முகம் மறக்கவில்லை. ஒரு தடவி என்னைக் கூப்பிட்டு இலங்கையைப் பற்றிய விடயங்களைக் கேட்டார்.இன்னொரு தடவை ஒரு காகிதத்தில் எவ்வாறு பலவிதமான உருவங்கள் செய்வது என படித்துக்கொண்டிருந்தோம். நான் இலங்கையில் ஒரே ஒரு உருவம் மட்டுமே எவ்வாறு செய்வதென நன்றாக கற்றிருந்தேன். அது படகு செய்வது. அதனை நான் என் நண்பர்களுக்கு செய்து காட்டியதும் அவர்கள் அதனை உடனடியாக ஆசிரியரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். அவர் என்னைக் கூப்பிட்டு அதனை எப்படி செய்வது என மற்றப் பிள்ளைகளுக்கு செய்து காட்டச் சொன்னார்.

அதுவரை வாழ்க்கையில் மேடையில்  பேசியதில்லை. ஒரு முப்பத்தைந்து பேருக்கு முன்னால் ஒரு ஆசிரியர் போல அதனை செய்து காட்டியது எனக்கே என்னில் பெருமையை ஏற்படுத்தியது. அதற்கு ஆசிரியர் மற்றவர்களை கைதட்ட வேறு சொன்னார்.நிச்சயமாக அதுதான் நான் வாங்கிய முதல் கைதட்டு என்று நினைக்கிறேன். சிறுவயதில் நமக்கு மற்றவர்களால் கிடைக்கும் பாராட்டும் அவமானமும் நமது எதிர்கால நடத்தைகளில் செலவாக்கைச் செலுத்தும் என்பதை சைக்கிள் கடையிலும் வகுப்பறையிலும் கற்றுக்கொண்டேன்.

அங்கே வகுப்பறையில் ஆசிரியருக்கு மட்டுமே மேசையும் கதிரையும் இருந்தன. மாணவர்கள் தரையில்தான் அமர்ந்து படித்தார்கள். முதலில் தரையில் அமர்வதா என கூச்சமாய் இருந்தது. ஆனால் போகப் போக அது தெரியவில்லை. அங்கு ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்ல எழும்பும்போதும் பயிற்சிகளைத் திருத்துவதற்காக அவர் அருகில் செல்லும்போதும் மாணவர்கள் கைகளைக் கட்டிக் கொள்வார்கள். அதாவது ஆசிரியருக்கு அருகில் நிற்கும் நேரமெல்லாம் கை கட்டிக் கொண்டுதான் நிற்பார்கள். இலங்கையில் அவ்வாறில்லை. முதலில் எல்லோரும் கை கட்டும்போது நாமும் கை கட்டவேண்டும் என்று செய்தேன். காலம் போகப் போக ஆசிரியர் அருகில் சென்றாலே கைகள் தானாக கட்டிக் கொள்ள ஆரம்பித்தன.

அங்கு அனேகமாக மனனக் கல்வியே பிரதானமாக இருந்தது. அடுத்த வருடம் ஆறாம் வகுப்புக்கு சென்றபோது நிறைய விடயங்களை பரிட்சைக்காக மனனம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு இயந்திரம் போல எல்லா விடயங்களையும் மனனம் செய்து ஆசிரியரிடமும் பரிட்சைத்தாளிடமும் 'ஒப்பித்தோம்'. அதில் பரீட்சைக்காக பக்கம் பக்கமாக பாடமாக்கிய விடயங்களில் 'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்' அப்படியே என் மனதில் நிற்கின்றன.

மனனக் கல்வியின் சில நன்மைகளின் ஒன்றாக அதிக விடயங்களை குறைந்த நேரத்தில் உள்வாங்கிக் கொள்ளுதல் என்பதை எடுத்துக் கொண்டாலும் அவற்றை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகம்தான்.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் "நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்...'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்'..'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்'...என படங்களில் வருவதுபோல அங்குமிங்கும் உலாவியபடி இழுத்து இழுத்து மனனம் செய்வது சிரிப்பாக இருக்கும். ஆனால் நானும் போகப் போக அவர்கள் போலவே மாறிவிட்டேன்.

அங்கு
இங்கு ஒரு விஷயம் சூழல் ஒரு மனிதனின் பழக்க வழக்கங்கள், மொழிநடை, எண்ணப்போக்கு என்பனவற்றில் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தும் என்பதை எனக்கு இந்த இந்தியப் பிரயாணம் கற்றுத் தந்தது.

போன புதிதில் ஊரில் இருந்த ஒரு பலசரக்கு கடைக்கு போனேன்.
"கச்சான் அல்வா தாங்க" என்றேன்.
"கச்சான் அல்வாவா?" என்றார் கடைக்காரர் ரிப்பீட்டாக.
"ஓம்! கச்சான் அல்வா"
"ஓம் கச்சான் அல்வாவா?"மறுபடியும் ரிப்பீட் பண்ணினார்.
அவருக்கு 'ஓம்' என்பதற்கு எங்கள் தமிழில் 'ஆம்' எனத் தெரிந்திருக்கவில்லை. 'கச்சான்' என்பதும் தெரியவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்ச் சினிமா மூலம் தமிழ்நாட்டு பேச்சு வழக்கு பரீட்சயமாய் இருந்தது. புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்தியர்களுக்கு அது முடியவில்லை.
"எதுன்னு காமி!" என்றார்.
எனக்கு அவர் 'காமி' என்று சொன்னது 'காட்டு' என்பதைத்தான் என்று உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவரது கைச் சைகை மூலம் புரிந்து கொண்டு வரிசையாய் இருந்த போத்தல்களில் ஒன்றைக்
 காட்டினேன்.
"ஓ! கடலை  அல்வாவா?" என்றார் கடைக்காரர் சிரிப்புடன்.
ஆரம்பத்தில் அவர்கள் பேச்சைக் கேட்டு நாங்களும் எங்களது  பேச்சைக் கேட்டு அவர்களும் சிரித்துக் கொள்வோம்.ஆனால் போகப் போக அவர்களின் பேச்சு வழக்கு மிக நன்றாகப் புரிந்ததுடன் என் பேச்சும் அவர்களது போலவே மாறிவிட்டது.

அங்கு சென்ற 90 காலப் பகுதியில்தான் தமிழில் மறு சீரமைப்பு எழுத்துக்கள் அறிமுகமாகின. னை, லை, ளை போன்ற புது எழுத்து வடிவங்கள் காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றை எமது வகுப்பாசிரியர் அறிமுகபடுத்தி  கற்பித்தார். 
    எங்கள் வகுப்பாசிரியை பாடசாலைக்கு சற்றுத் தள்ளி ஒரு கல்வீட்டில் குடியிருந்தார். ஏனைய குடிசை வீடுகளுடன் ஒப்பிடுகையில் அவர் வசதியானவர்தான். 
ஒரு விடுமுறைநாளில் நாங்கள் அவர் வீட்டிற்கு போயிருந்தோம். அப்போதுதான் வீட்டு விறாந்தையில் மாட்டியிருந்த போட்டோக்களில் அவரது கணவரைப் பார்த்தோம். அவர் ஒரு இந்தியப் படை ராணுவ வீரராம். லீவுக்குத்தான் வருவாராம். என் மனதில் அப்போது தவிர்க்க முடியாமல் தமிழ் சினிமாவில் காஷ்மீர் எல்லையிலிருந்து ஊர் திரும்பும் இர்ரானு வீரரின் காட்சிதான் விரிந்தது. என்னவோ தெரியவில்லை இவ்வளவு காலமாகியும் அந்த ஆசிரியரின் சிரித்த முகம் இன்றும் மனதில் மறையாமல் நிற்கிறது. 
என் பாடசாலையில் காலையில் இறை வணக்கம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்கள். திங்கட்கிழமை காலையில் கொடியேற்றி தேசிய கீதம் பாடுவார்கள். "ஜன கண அதி நாயக ஜெயகே பாரத பாக்ய விதாதா "என்று அக்கீதம் இன்னும்   மனதில் நிற்கிறது.  பொதுவாக இனிமையான பாடல்கள் என் மனதில் வரிக்குவரி பதிந்து விடுவது உண்மை. வரிசையில் நின்று மற்ற மாணவர்கள் பாடும்போது அவர்களுக்கு தேசிய உணர்ச்சி ஏற்பட்டதோ இல்லையோ எனக்கு நாமேன் இந்தப்பாட்டை பாடுகிறோம் என்றிருக்கும்.  நாங்கள் வேறு நாடல்லவா?

பொதுவாகவே இந்தியர்கள் தேசப் பற்றுமிக்கவர்கள். அவர்களை உசுப்பேற்றும் விடயங்களில் இதுவும் ஒன்று. பாரதமாதா, தேசியக்கொடி, தேசியகீதம் என்பவற்றிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையே வேறு. ஆனால் எனக்கு இவையெல்லாம் மிக சாதாரண விடயங்களாக தோன்றின. ஏனெனில் எனக்கு இலங்கைத் தேசிய கீதம், கொடி போன்றவையே சாதாரண விடயங்களாக தோன்றுகையில் இவை எம்மாத்திரம்?
ஒரு தமிழ் 'ஆசான்' எங்களுக்கு தமிழ் கற்பித்தது ஞாபகம் உள்ளது. நாங்கள் அவரை 'ஐயா' என்றுதான் அழைப்போம். அவர் ஒருநாள் பாரதிதாசன் கவிதை கற்பித்தார்.
'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...'

ஆஹா...எப்படி பாரதிதாசன் ரசித்து எழுதி இருக்கிறார்,  அந்தத் தமிழின்பத் தமிழ்...எவ்வளவு அழகான சொற்றொடர்" என்றெல்லாம் அவர் பாரதிதாசனை ரசித்து ரசித்து கற்பித்ததை நான் ரசித்தேன். ஆனால் அப்போதே எனக்கு தமிழைப் பற்றியும் நாட்டுப்  பற்றைப் பற்றியும் சில சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை பின்னாளில் பார்க்கலாம்.

நான் பாடசாலையில்  சேர்ந்த  பிறகு  மணிகண்டன் எனும் நண்பன் கிடைத்தான். அவன் தந்தை முத்தநேந்தலில் பலசரக்கு கடை வைத்திருந்தார். மாலையில் மணிகண்டன் தன் தந்தைக்கு உதவியாக பொட்டலம் கட்டுவான். அதாவது கடையில் வேலை பார்ப்பான். நானும் சில நாட்களில் நுழைந்துவிடுவேன். அரிசி, சீனி, மா சுருள் சுற்றிக் கொடுப்பதே பெரிய கலை போல பெருமிதமாக இருக்கும். கல்லாவில் அவனது அப்பா காசை வாங்கிக் கொள்வார். மாலை பாடசாலை முடிந்ததும் ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை சில நேரங்களில்  கடையில் நிற்க வேண்டி வரும்.அப்படி நின்றால் எவ்வளவு கூலி தெரியுமா? ஒரு பன்னும் ஒரு பட்டாணி கடலைப் பையும்! அவற்றை சந்தோசமாக வீட்டுக்கு கொண்டு போவேன்.

1991. வாழ்வில் இன்னொரு மறக்க முடியாத ஆண்டு. மே மாதம் 21 ஆம்  திகதி காலையில் நான் எழுந்து வீதிக்கு வந்தபோது முத்தனேந்தல் சந்தியின் கடைகள் யாவும் பூட்டப்பட்டிருந்தன. நடமாடிய மனிதர்களின் கண்களில் கலவரமும் கோபமும் கலந்து தெரிந்தன. சூழல் அசாதாரணமாய் இருந்தது. வீதியில் நின்ற ஒருவர் "தம்பி, உள்ளே போங்க, ரோட்ல நிற்க வேண்டாம்!" என்றார். இலங்கையில் இம்மாதிரியான தருணங்களில் பெரியோர்களின் சொற்கேட்பது அவசியம் என்பது அனுபவத்தில் உணர்ந்திருந்ததனால் மறுபடி சத்திரத்திற்கு உள் நுழைந்தேன். பின்புதான் தெரிந்தது. முதல் நாள் இரவு 10 :10 மணியளவில் இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று...

ராஜீவ் காந்தி கொலை இந்தியா முழூவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அச்சிறு கிராமத்தில் நிலவிய சூழலே தெளிவாக காட்டியது. ரோட்டின் குறுக்கே மரத்துண்டுகள் போடப்பட்டு போக்குவரத்தை சிலர் தடை செய்தார்கள். தூரப்பிரயாணம் செய்து வந்த சில வாகனங்கள் எங்கே திரும்பி போவது எனத் தெரியாமல் அங்கேயே ரோட்டோரமாக நின்று காத்திருந்தன. ' PRESS' என்று பொய்யாக காகிதம் ஒன்றை முன் கண்ணாடியில்  ஒட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சிலர் 'விசாரணை' செய்து கொண்டிருந்தார்கள். போலீசார் 'இதெல்லாம் சகஜம்' அல்லது நியாயம்தானே என்பது போல வாளாவிருந்ததையும் எங்கள் சத்திரத்து வாளாகச் சுவர் அருகில் நின்றுகொண்டு காணமுடிந்தது.

யாரோ சத்திரத்தின் மேல் கல் எறிந்தார்கள். இந்தியர்கள் கோபம் வந்ததால் உள்ளே நுழைந்து அரிவாளால் வெட்டினாலும் வெட்டுவார்கள் என்று யாரோ கதையைப் பரப்ப ஒரு நடுக்கம் சத்திரத்தினுள் பரவியது. போலிஸ்காரர்கள் இருவர் முதன் முறையாக காவலுக்கு போடப்பட்டார்கள்.

நாங்கள் அங்கு வந்து ஒரு வருடமாகியிருந்ததனால் ஊராருக்கும் எங்களுக்கும் ஒரு அந்நியோன்யமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதனால் எங்களுக்கு பயந்ததுபோல ஒன்றும் நிகழவில்லை. தமிழகத்தின் வேறு சில இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகக் கேள்வி.
ஒரே இரவில் எங்களுக்கும் இந்தியர்களுக்குமான உறவு தலை கீழாக மாறிப்போனது உண்மைதான். எவ்வளவுதான் இருந்தாலும் அவர்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரை அவர்களது நாட்டிலேயே வைத்து நாங்கள் கொடூரமாக கொன்றுவிட்டோம் என்ற கோபம் பின்னாளிலான  உறவின்போது தெரிந்தது. பாடசாலையில் ஒரு இந்தியச் சிறுவன் என்னிடம் "எங்க உப்பைச் சாப்பிட்டுவிட்டு எங்களுக்கே துரோகம் பண்ணிட்டீங்களேடா" என்று ஒரு தடவை சொன்னான். என் அம்மா இந்தியா வீடுகளுக்கு மாவரைக்க செல்லும்போது "ஏனம்மா எங்க நாட்டுத் தலைவரை கொன்னீங்க?" என்று அப்போதுதான் கொலை செய்துவிட்டு வந்தவரைக் கேட்பதுபோல கேட்டார்களாம். என்ன பதில் சொல்வது?

ஆனால்  ராஜீவ்  படுகொலை என்பது இந்தியர், இலங்கையர் எல்லோருக்குமே ஒரு சுவாரசியமான விவாதப் பொருளாகிப் போனது உண்மை. அது ஒரு த்ரில்லான  க்ரைம் ஸ்டோரி. நாவல்களை விட விஞ்சும் அளவில் இருந்தது. எவ்வளவோ பேர் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் இறந்து போகிறார்கள். ஆனால் அம்மரணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை. ஆனால் இம்மாதிரியான கொலைகள், கொலையாளிகளைக் கண்டுபிடித்தல் என்பவை சுவாரசியம்தான்.

இங்கு ஒரு விடயம். ராஜீவ் என்கிற தனிமனிதனுக்கும் தனு என்கின்ற தனி  மனுஷிக்கும் எவ்வித விரோதமுமில்லை. ஆனால் தாங்கள் சார்ந்திருந்த கொள்கை பற்றுக் காரணமாக ஒருவர் அடுத்தவரைக் கொல்லும் அளவுக்குக் கூட செல்லத் தயாராய் இருந்தார்கள். அத்துடன் இவ்விருவரின் செயற்பாடுகளால் இவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத பல பேர் இறந்து கூடப் போயிருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் கொள்கைப் பற்றுக்கள் தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத சிறப்பு ராஜீவ் காந்திக்கு உண்டு. அவரது கொலைச் சம்பவம் ஒவ்வொரு கட்டத்திலும் படம் பிடிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. கொலையாளிகள்  அவர் வரும் வரை காத்திருப்பதும் நெருங்குவதும் வெடிப்பது  அவர் இறந்து கிடப்பதுமான காட்சிகள் போட்டோக்களாக  கிடைத்திருக்கின்றன . அந்தப் படங்களையும் ராஜீவ் படுகொலை என்ற சொற்களையும் அடுத்து வந்த மாதங்களில் பத்திரிகைகளிலும் டிவியிலும் பார்த்து பார்த்து அலுத்தே போய்விட்டது. மோகனதாஸ் காந்திக்கு ஒரு கோட்சே போல ராஜீவ் காந்திக்கு ஒற்றைக்கண் சிவராசன். ஒற்றைக் கண் என்பது காரணப் பெயர்தான் என்றாலும் தமிழ்ச் சினிமா வில்லன்கள் பெயர் போல இருந்தது.

இந்த தற்கொலைப் படைப் பற்றி அதிகம் என்னை சிந்திக்க வைத்தது ராஜீவ் கொலைதான். எப்படித்தான் தாங்கள் சாகப் போகிறோம் என்று தெரிந்தே வந்து வெடிக்கிறார்களோ என்று வெகு ஆச்சரியமாய் இருக்கும். அவனவன் தன் உயிரைப் பாதுகாக்க அடுத்தவன் உயிரை எடுக்கும் உலகத்தில் அடுத்தவனுக்காக அல்லது கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய மனிதர்கள் இருப்பது என்பது அபூர்வம்தான். இவர்கள் தங்கள் சாவிற்காக புறப்படும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள்?இப்படையில் சேர்ந்தவர்களது உறவினர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

படுகொலைக்கும் கொலைக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண மனிதனின் அல்லது எண்ணிக்கை குறைவான மரணங்களை கொலை என்பார்கள். பிரபல்யமானவர்களினதும் அதிக எண்ணிக்கையிலான மரணங்களையும் படுகொலை என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஒருவனது உயிரை இன்னொருவன் எடுப்பது என்பதே எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அதில் சாதாரணன், பிரல்யமானவன் என்று பிரிப்பது எங்ஙனம் தகும்? அது எல்லா மனிதர்களும் சமம் என்ற மனித உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானது. எல்லோருக்கும் தெரிந்தவன்,அதிக எண்ணிக்கையினரால் மதிக்கப்படுபவன் என்பதால் மட்டும் அவனது உயிர் ஏனையவர்களின் உயிரை விட உயர்ந்ததாகிவிடாது.

நான் தீவிரமான வாகன விபத்துக்களை இந்தியாவில்தான் பார்த்தேன். எங்கள் சத்திரத்திலிருந்து அரைக் கிலோமீட்டர் தூரத்தில் இரவில் ஒரு கார் வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி தலை கீழாகி இருந்தது. விடியற்காலை நான் அங்கு சென்றபோது காரினுள்ளே ரத்தம் சிந்தியிருந்ததைக் காணமுடிந்தது. பின்னால் வேகமாக வந்த லாரிக்காரன் இடித்துவிட்டுப் போயிருப்பான் என்று சொன்னார்கள். அவ்வளவு மனித ரத்தத்தை ஒரே இடத்தில் பார்த்தது அப்போதுதான். ஒரு குடும்பத்தில் இருவர் பலியாகி ஒருவர் காயம் என்றார்கள். நமக்கு அது செய்தி. அக்குடும்பத்தினருக்கு அது என்றென்றும் மறக்க முடியாத வடு.

மற்றது ஒரு நாள் காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் ஒரு மணல் லாரி சரிந்திருந்தது. மணலை லாரியில் ஏற்றிவிட்டு அதன் மேல் அமர்ந்து வந்த கூலிக்காரர்கள் மணலோடும் உயிரோடும் சமாதியானார்கள். இதுவும்  இரவிலேயே நடந்ததினால் தீயணைப்புப்படை வரத் தாமதமாகியது. விடியற்காலை அவர்கள் வந்தபோது எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு உடலாக மணலுக்குள்ளிருந்து தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த உடலுக்கு காயம் படக் கூடாது என கவனமாக தோண்டினார்கள். அப்படியும் காயம்பட்டு ஒருவர் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தை பார்த்தேன். அதன் டிரைவரும் ஊர்ச்சனம் வந்தால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்திருந்ததனால் யாருக்கும் சொல்லாமலே ஓடிவிட்டான். என்ன கொடுமை பாருங்கள். அந்த லாரியில் அத்தனை பேரும் மடிந்ததற்கு நம் சமுதாயமும் காரணம் என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் உண்மை. மக்கள் அடிக்க மாட்டார்கள் என்றால் அவன் பக்கத்து வீடுகளிலிருந்த யாரையாவது உதவிக்கு அழைத்திருப்பான். தக்க நேரத்தில் உதவி கிடைத்து ஓரிருவராவது பிழைத்திருப்பர்கள்.

ஒரு விபத்தில் யார் மேல் தவறு எனத் தெரியாமலே அதன் டிரைவர்மீது உடனடியாகப் பழிபோடுவதும் அவனை அடிப்பதும் எவ்வளவு பெரிய தவறு. டிரைவரே தவறு செய்திருந்தாலும் அதனைத் தண்டிப்பதற்கு மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பின் போலீஸும் சட்டமும் எதற்கு? மனிதனுக்கு இன்னொரு மனிதனை அடிப்பதில் அதாவது வன்முறையில் ஈடுபடுவதில் ஒரு குருர திருப்தி இருக்கிறது. எல்லா நேரமும் அவன் அந்த ஆசையை தீர்க்க முடியாது. எனவே இப்படியான நேரங்களில் 'தர்ம அடி' என்ற பெயரில் அதனைத் தீர்த்துக் கொள்கிறான். தமிழ்நாட்டில் மட்டுமே இந்த 'தர்ம அடி' என்ற பதம் பாவிக்கப்படுவது வினோதம்தான்.

முத்தனேன்தலில் நான்தான் விடியற்காலையில் பால் வாங்கி வரச் செல்வேன். ஒரு செம்புடன் வீடுகளுக்குச் சென்று பால் கறந்துவிட்டார்களா எனக் கேட்டு வாங்கிவருவேன். கன்றுக் குட்டியைக் கட்டி வைத்துவிட்டு தாயிடம் பால் கறப்பதை பார்க்கும்போது கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் இறைச்சியையே சாப்பிடுகின்ற எனக்கு அது பெரிதாக உறுத்தவில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் சைவம், நீங்கள் அசைவம் என்று யாரும் சொல்லும்போது அது தவறில்லை என்றேபட்டது. புலி மானை அடித்துச் சாப்பிடுகிறது. மான் புல்லைக் கடித்துச் சாப்பிடுகிறது. மனிதன் விலங்கு,தாவர இரண்டையும் சாப்பிடுகிறான். அவன் அனைத்தும் உண்ணி. மச்0சம் சாப்பிடுவது தவறென்றால் புலியும் இருக்காது. மானும் இருக்காது.இயற்கை சமநிலை குழம்பிவிடும் என வாசித்திருந்தேன். நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது இயற்கையின் நியதி. இந்த சூழலில் வாழும் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ்கின்றன. 

அவ்வாறாக பாலுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்கள் போட்ட மற்றும் போட்டுக் கொண்டிருக்கின்ற கோலங்களை பார்த்து ரசித்தவாறே செல்வேன். செப்புப் பாத்திரங்களை துலக்கி பளபளப்பாக அடுக்கி வைப்பதில் தமிழ் நாட்டுப் பெண்களை மிஞ்ச முடியாது.

அங்கு நானும் அம்மாவும் காட்டுக்கு விறகு எடுக்கப் போவோம். காடு என்றால் அவை வெறும் முள்ளு மரங்கள்தான். 'பொற்காலம்' படத்தில் முரளி, மீனா விறகு எடுக்கும் அதே காடு.அது விறகு அல்ல. சுள்ளி என்பார்கள். அதில் நீட்டு நீட்டாய் முள்ளு இருக்கும்.கால்களில் அட்டை ஊரும். தட்டி விட்டால் எதுவுமே தெரியாதவர்போல சுருண்டுகொள்ளும். சுள்ளிகளை முறித்து அல்லது பொறுக்கிக் கொண்டு வீடு திரும்பும்போது குறைந்தபட்சம் இரண்டு முள்ளாவது குத்தியிருக்கும்.  

அங்கு வரும் தினபத்திரிகைகளை விடாமல் படித்துவிடுவேன். ஒரு பக்கத்தில் கவிதைகள் வரும். அப்போது எனக்கு கவிதைகள் வாசிப்பது பிடிக்கும். ஹைக்கூ போன்று வரும் கவிதைகளை நானும் எழுத முயற்சிப்பேன். ஒரு தடவி உண்ணாவிரதம் என்ற தலைப்பில்  எழுதினேன்.

"அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு வேண்டுமாம்...! "

 நான் அதுவரைக்கும் டிவி பார்த்ததில்லை. அதாவது டிவி திரையில் சினிமா பார்த்திருக்கிறேனே தவிர டிவி ஒளிபரப்பு நிலையங்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்ததில்லை. எங்கள் சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு சிறு வீட்டில் போலீஸ் ஸ்டேசன் இயங்கியது. அதன் ஒரு அறையின் வெளிப்புற கம்பியில்லா ஜன்னலுக்கு அருகில் கிராமப் பஞ்சாயத்தார் பொது டிவி ஒன்றை வைத்திருந்தார்கள். மக்கள் இரவில் வெளியே மணலில் அமர்ந்து பார்ப்பார்கள். மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும். இரவு பத்து மணிவரை பார்க்கலாம். சிறுவர்கள் நாங்கள் ஆறு மணி என்றால் அங்கே தவறாமல் ஆஜராகிவிடுவோம். ஆனால் இப்போதுபோல் எக்கச்சக்கமான சானல்களில் எத்தனைப் பார்ப்பதென்ற குழப்பமில்லை.  டிவி ரிமோட் வசதியுமில்லை. நாங்கள் அங்கே பார்ப்பது தூரதர்ஷன்  சனல் மட்டும்தான். அதில் பகல் முழுவதும் ஹிந்தி நிகழ்ச்சிகளையும் ஆறு தொடக்கம் பத்து மணிவரை மட்டுமே உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளையும் (பொதிகை) ஒளிபரப்புவார்கள்.

பொதிகை நிகழ்ச்சிகள் அவ்வளவு சுவாரசியமானவை இல்லை என்றாலும் எதைப் போட்டாலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். பெரியவர்கள் செய்தி பார்த்துவிட்டு போவார்கள். வார நாட்களில் ஏழு மணிக்கு ' வயலும் வாழ்வும்' என்ற விவசாய நிகழ்ச்சி இருக்கும். அதன் டைட்டில் போட ஆரம்பித்ததும் அதுவரை பார்த்துக் கொண்டிருந்த எல்லா விவசாயப் பெருமக்களும் எழுந்து வீட்டைப் பார்க்கச் செல்வது சிரிப்பாக இருக்கும்.

ஆனால் 'ஞாயிறு மாலை' என்பது ஊருக்கு விசேடமான நல்ல நேரம். ஏனெனில் ஒவ்வொரு ஞாயிறு மாலை ஆறு மணிக்குத்தான் ஏதாவது ஒரு தமிழ் படம் ஒளிபரப்புவார்கள். டிவியில் தமிழ்ப்படம் என்பதே அப்போது அது ஒன்றுதான். அந்நேரத்திற்கு மணல் முற்றம் முழுவதும் ஹவுஸ்புல்லாகிவிடும்.  

எனக்கு அப்போது டிவியில் வரும் விளம்பரங்கள் பிடிக்கும். ஒரு பொருளுக்கான விளம்பரம் எப்படி உருவாக்கப்படவேண்டும் என்பதில் இந்தியர்கள் தேறியவர்கள்.இலங்கையில் ஒரு பால்மா விளம்பரம் என்றால் ஒரு அம்மா அந்தப் பால்மாவைக் கரைத்து தன் பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் அதனைக் குடித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று தலையாட்டுவார்கள். உடனே ஒரு அசிரீரி குறிப்பிட்ட பால்மா சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என அறிவித்து முடிக்கும். 

ஆனால் இந்தியா விளம்பரங்கள் வித்தியாசமானவை. சொல்ல வேண்டிய விடயத்தை உடனே நேரடியாக கூறாமல் முதலில் அந்த விளம்பரத்தை எல்லோரும் கவனிக்கும் விதமாக  ஏதாவது ஒரு புதுமையான விடயம் காண்பிக்கப்படும். விளம்பர நேரத்தின் 75  வீதம் அதிலேயே கழிந்துவிட மீதி நேரத்தில் மட்டுமே பொருள் பற்றி பேசப்படும். அக்கவன ஈர்ப்பு காட்சிகள் சற்று  மிகைப்படுத்தலாக இருந்தாலும் அவை எல்லோர் மனதிலும் இலகுவாக பதிந்துவிடும். 

வழமையான அல்லது ஒழுங்கான ஆயிரம் விடயங்களைவிட மாறுபட்ட ஒரு சிறுவிடயம்  கவனத்தை ஈர்ப்பது இயல்பு. ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களில் ஒழுங்கு குலைந்த ஒரு புத்தகம் கவனத்தைக் கவரும்.  

இன்னும் ஒரு விதத்தில்  சொன்னால் நேரடியாக ஒரு விடயத்தை கூறுவதைவிட  சுற்றிவளைத்து பில்டப் பண்ணிக் கூறும்போது அதன் மதிப்பே தனிதான். உதாரணமாக பல சிறந்த விளம்பரங்களைக் கூறலாம். அக்காலத்தில் வந்த ஒரு விளம்பரத்தில் புயல் வீசி அடைமழை பெய்ய மக்கள் வெள்ளத்தில் அவதிப்படுவார்கள். அந்நேரத்தில் ஒருவர் ஒரு பைக்கில் அக்கடினமான இடங்களில் பிரயாணித்து மக்களைக் காப்பாற்றுவார். அதன் கடைசி காட்சி வரும்வரை  மக்களின் கவனம் வெள்ளம், மக்கள் காப்பாற்றப்படல் போன்ற கவன ஈர்ப்புக் காட்சிகளில் லயித்திருக்கும்.கடைசிக் காட்சியில்  அந்த பைக் என்ன வகை என்று காட்டப்பட  பின் அதற்கான விளம்பர வாசகத்துடன் முடிவடையும்.

ஒரு தடவை எங்களூரின் கரும்புத் தோட்டக்  காவலாளிக்  கிழவன்  இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்டு அவர் வீட்டிற்கு சென்றோம். வீட்டிற்கு வெளியே தாரை தப்பட்டைகள் முழங்க ஓரிடத்தில் சனம் குவிந்திருந்தது. பரவாயில்லை, கிழவன் செல்வாக்கான ஆள்தான் போலிருக்கிறது என்று நினைத்து எட்டிப்பார்த்தால் சினிமாவில் திருவிழாக் காட்சிகளில் நான் பார்த்த கரகாட்டக் கோஷ்டி ஒன்று நடுவில் நின்று ஆடிக் கொண்டிருந்தது. அதில் அரைகுறை ஆடைகளில் அவ்வளவு பேருக்கு நடுவில் ஆடிய பெண்களைப் பார்த்து எனக்கே வெட்கமாய் இருந்தது. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். கூலிக்கு மாரடிக்க வந்த கிழவிகள் எல்லாம் மனப்பாடமாய் இருந்த ஒப்பாரிப் பாடல்களை கூட்டமாக கட்டியணைத்து 'மூக்குச் சீறியவாறே' உரத்த குரலில் ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  

இந்தக் 'கூலிக்கு மாரடித்த்கால்' என்பதை நான் முதலில் கேள்விப்பட்டபோது ஏனிப்படி செய்கிறார்கள், இறந்தவரின் சொந்தக்காரருக்கு துக்கம் என்றால் அழுகை வராதா என எண்ணிக் கொண்டேன். ஆனால் எல்லோருக்கும் தங்கள் துக்கங்களின்போது அழுகை வராது. ஆனால் அழாவிட்டால் துக்கம் மனதில் தங்கி அதனைக் கடுமையாக பாதித்துவிடும் என சொல்கிறார்கள். எப்படி நம் துன்பங்களை மற்றவர்களிடம் வாய் வார்த்தையாக கூறினால் ஒரு ஆறுதல் கிடைக்கிறதோ அதுபோல கண்ணீருடன் துக்கமும் கரைந்து வெளியேறிவிடும் என எண்ணுகிறேன். அத்துடன் சொந்தக்காரர்கள் அழாவிட்டால் பார்க்கிறவர்கள் இறந்தவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?!

இன்னொரு விடயம் இந்தக் கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எப்படித்தான் யாரோ இறந்ததிற்கெல்லாம் அழுகை வருகிறது என்பதுதான். அழுகையை ஒரு தொழிலாக்கி காசு சம்பாதிக்கும் வினோதம் நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உண்டு.

ஒருவன் செத்தபின் அவன் 'மகராசா' ஆகிவிடுவான். அவனைப் பற்றிக் குறையே கூறமாட்டார்கள். சாவதற்கு முதல் நாள்கூட அவனை இழிவாக கதைத்தவர்கள் இன்று 'உண்மையிலேயே அவர் ஒரு நல்ல மனுஷன். யாருடைய பொல்லாப்புக்கும் போகமாட்டார்' என உண்மையை அவிழ்த்து விட்டுக்  கொண்டு நிற்பார்கள். 

வீட்டிற்குள் நுழைந்தால் சனங்களுக்கு நடுவில் நடுநாயகமாக  ஒரு கதிரையில் ஒருவர் வீற்றிருந்தார்.  தலையில் அடிபட்டு கட்டுப் போட்டது போல உச்சந்தலையிலிருந்து நாடிவரை வெள்ளைத்துணி சுற்றப் பட்டிருந்து . இரு மூக்குத் துவாரங்களும் பஞ்சினால் அடைக்கப்பட்டிருந்தது.  அவர்தான் நேரம் வந்து 'காலம்'  விட்டவராம்.இலங்கை மற்றும் இந்திதயத் தமிலருக்கிடையில் இறுதிச் சடங்கில் கூட வித்தியாசங்கள் இருந்தன. தலையைச் சுற்றி துணி கட்டுவது பிணத்தை அமரவைக்கும்போது வாய் திறந்தபடி கட்சி அளிக்காமல் இருக்கத்தான் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கள் நாட்டில் மூக்கில் பஞ்சு வைத்து நான் பார்த்ததில்லை. ஏதாவது சுகாதாறன காரணங்களாக இருக்கலாம். பாடை என்ற சொல் தமிழ்நாட்டில்  மட்டுமே உண்டு. 

இந்தியாவில் இருந்தபோது சில பிரபலங்களை நேரில் பார்க்க முடிந்தது. ஒரு தடவை தேர்தல் சமயத்தில் நடிகர் பாண்டியன் ஒவ்வொரு ஊராக காரில் திமுகவிற்காக வோட்ட்டுக் கேட்டு வந்தார்.  எங்கள் ஊரில் வந்து நின்றதும் சனம் மொய்த்துக் கொண்டது. அவர் வேறு வழியில்லாமல் காரின் மேலே ஏறி நின்று பேசினார். மக்கள் திமுகவிற்கு வோட்டுப் போடா வேண்டும் என்றும் அதற்கு சம்மதிக்காவிட்டால் தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும் சொன்னார். நான் அவரை அருகில் நின்று பார்த்தேன் நல்ல நிறம். படத்தில் பார்த்ததை விட மிக அழகாக இருந்தார். உண்மையில் அங்கிருந்து போகமாட்டார் என்பதற்காகவே மக்கள் வோட்டுப் போட சம்மதிக்க மாட்ட்டார்கள் என்று நினைத்தேன். நடிகர்கள் மீதான ஈர்ப்பே தனிதான். 

நடிகர்களை நடிகர்களாக பார்ப்பதைவிட அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களாகவே பார்க்கத் தோன்றுவதால் அவ்வாறான ஈர்ப்பு ஏற்படுகிறது என நினைக்கிறேன். அவர்களை திரையில் பிரம்மாண்டமாக பார்த்ததும் உளவியல் ரீதியாக அவர்கள் நம்மைவிட பெரியவர்கள் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி இருக்கலாம். இன்னும் வில்லன் நடிகர்களைவிட ஹீரோ மற்றும் காமெடி நடிகர்கள்மீது மக்கள் தனி அன்பு வைத்திருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அவர்கள் மக்களின் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். காமெடி நடிகர்கள் மக்களை சிரிக்க வைப்பதன் மூலம் கவலைகளை மறக்க வைக்கிறார்கள். மறுபக்கத்தில் சமுதாயத்தில் தங்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை சுயமாக தட்டிக் கேட்க முடியாமல் அதற்கு ஒரு 'மீட்பரை' எதிர்பார்க்கிறார்கள். அது நியத்தில் நிறைவேறாவிட்டாலும் சினிமாவில் அநியாயம் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து வந்து தட்டிக் கேட்பதனால் அந்த ஆதங்கம் பூர்த்தியாகிறது. naam மற்றவர் மீதுள்ள கோபத்தை நேரடியாக காட்ட முடியாவிட்டால் கையில் கிடைக்கும் பொருட்கள்மீது காட்டுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

அடுத்து நான் பார்த்தது மிஸ்டர் கருணாநிதி. சந்தேகம் வேண்டாம். அவரேதான். டாக்டர், கலைஞர், தமிழர்களின் உடன்பிறப்பு, இப்படி எத்தனையோ பட்டங்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அவர்கள்தான். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழகத்தின் பாதிக்கால சரித்திரம். தமிழக முதல்வர் என்றாலே எனக்கு அவர் முகம்தான் ஞாபகம் வரும். ஒன்றா இரண்டா ஐந்து தடவை அல்லவா முதல்வராக இருந்திருக்கிறார். எழுத்து வித்தகர். சிறு வயதில் அவரது அரச நாவல்கள் வாசித்திருக்கிறேன். இவருக்கும் வாலிக்கும் எங்கிருந்துதான் வார்த்தைகள் கிடைக்கின்றனவோ தெரியவில்லை. வாலியாவது  இருக்கிற வார்த்தைகளை வைத்து எதுகை மோனைகளில் விளையாடுவார். ஆனால் கலைஞர்  கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களுக்கேற்ப புதுப்புது  அழகுச் சொற்றொடர்களையே  உருவாகிவிடுவார். அவரைப் பற்றி பின்பு கட்டாயம் சொல்வேன்.

ஆனால் அது தேர்தல் நேரமல்ல. எதற்காகவோ எங்கள் ஊர் வழியாக வந்தார். அவர் அவ்வழியாக செல்லப்போகிறார் என காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது. வீதியின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நிறைந்திருந்தனர். நாங்கள் சிறுவர்கள் என்றதால் பெரியவர்கள் மறைத்துவிடுவார்கள் என்பதால் நீண்ட வரிசையின் தொடக்கத்தில் போய் நின்று கொண்டோம். படங்களில் வருவது போலவே ஏராளமான கார்கள் அணிவகுத்துச் செல்ல கடைசிக்கு முதலாவதில் அவர் வந்தார். எங்களைப்  பார்த்ததும் காருக்குள் இருந்தபடியே தன் வாழ்க்கையில் மிக அதிகமாக செய்த வேலையை மறுபடி ஒரு தடவை செய்தார். அதாவது கைகூப்பினார். முதலாவதாக நின்றபடியால் எங்களை மட்டுமே பார்த்து அவர் கை கூப்பியது போல பெருமையாக இருந்தது.

எனக்கு பிரயாணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவை நாங்கள் வேளாங்கன்னிக் கோவிலுக்கு சென்றோம். ஒரு 'பல்லவன்' சொகுசு பஸ்ஸில் இரவில் பிரயாணித்ததாக ஞாபகம்.  அந்த டிரைவர் மிக வேகமாக ஓட்டிக் கொண்டிருந்ததால் அப்பா பயத்தில் திட்டிக் கொண்டே வந்தார்.

நாகூர் தாண்டி வேளாங்கண்ணி வந்து இறங்கினோம். கோவிலை அடைவதற்கு சற்று தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஒரு திருப்பத்தில் நாலைந்து பிச்சைக்காரர்கள் தட்டுக்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டோம். "அம்மா, தாயே, பிச்சை போடுங்கம்மா..!" என்று கோரசாக பாடிக் கொண்டிருக்க மாதா கோவிலில் ஏழைகளுக்கு தானம் செய்வது புண்ணியம் என்று இருந்த சில்லறைகளை பிரிந்தது போட்டோம். அப்புறம்தான் பார்த்தால் அங்கிருந்து கோவிலை அடையும் வரையான சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு பிச்சைக்காரர்களை ஒரே இடத்தில் நான் கண்டதேயில்லை. கோவிலை அடையும் வரை அவர்களின் "அம்மா, தாயே..!" வரவேற்பையும் " வாங்கம்மா, வாங்கம்மா, மலிவு, மலிவு...!" என்ற கடைக்காரர்களின் உபசரிப்பையும் கேட்டவாறே நடந்தோம்.  

வேளாங்கன்னிக் கோவில் பெரிதாகவும் அழகாகவும் காட்சி அளித்தது. ஆனால் அதைவிட  அழகான பெரிய கோவில்கள் வேறு இடங்களில் இருந்தாலும் இதற்கு மட்டும் என்ன ஸ்பெசல் என்று அப்போது யோசித்தேன். அதற்கு அந்த மாத கடலில் யாரையோ காப்பாற்றி ஏதோ புதுமை செய்ததாக ஒரு கதை சொன்னார்கள். அந்தக் கதை முக்கியமல்ல. எல்லாப் புகழ் பெற்ற கோவில்களுக்கும் பின்னால் ஒரு பக்தி பரவசமூட்டக் கூடிய ஏதாவது ஒரு கதை இருந்தே ஆகும். அதற்கு எந்த மதக் கோவில் என்ற பேதமில்லை. எனக்கென்ன ஆச்சரியம் என்றால் குறிப்பிட்ட ஒரு மதத்தை 'சேர்ந்த' ஒரு கடவுள் இன்னொரு மதத்தவரின் கனவில் வருவதில்லை அல்லது அவரைக் காப்பதில்லை. கடவுளுக்கே இப்படி ஒரு பேதமா?

கோவிலின் பின்பக்கம் 'வழக்கம் போல' புனிதக் கிணறு இருந்தது. பலர் தங்கள் செப்புக் காசுகளை வலை போட்டு மூடியிருந்த அதனுள் போட்டு செபித்தார்கள்.  அதன் நீரை பக்தியோடு பருகினார்கள்.

இவ்வாறான ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடவுளின் அருள் கூடுதலாக கிடைக்கும் என்று கிறிஸ்தவர்கள் நம்பும் பைபிளின் புதிய ஏற்பாட்டில் இல்லை. இது இந்து மதத்திலிருந்து எடுக்கப்பட்ட மக்களுக்கு விருப்பமான ஒரு மரபு. குறிப்பிட்ட இடத்திற்கு முஸ்லிம்களைப் போல யாத்திரை செய்து அதன் மண்ணைக் கொண்டு வருவதும் சைவர்களைப் போல சிலைகளைக் கும்பிடுவதும் கிறிஸ்தவத்தில் இல்லை. முஸ்லிம்களுக்கு மக்கா யாத்திரை ஐந்து புனிதக் கடைமைகளில் ஒன்று. சைவர்கள் கல்லுக்கு அபிஷேகம் செய்து அதற்கு சக்தியை அளித்து அதனை வணங்குகிறார்கள். அவர்களின் மதத்தை நான் நம்பாவிட்டாலும் அதில் ஒரு வாத நேர்மை இருக்கிறது. கத்தோலிக்கர்கள் சிலையை ஒரு நாபகார்த்தச் சின்னமாக பாவிக்கின்றோம் அல்லது கோவில் அழகுக்காக பாவிக்கின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அதனைத் தொட்டு வணங்குவதும் இந்து மதத்தினர் தேரில் வைத்து சுற்றுவது போல அதனை வைத்து 'திருச் சொரூப பவனி' செய்வதும் தவறு என்றே அப்போது எனக்கு பட்டது.

நான் போனது திருவிழா நேரத்தில் அல்ல. ஆனால் எங்கள் ஊர் பிரபல கோவில் திருவிழாக் கூட்டங்களை  விட அதிகமான மக்கள் நெரிசல் இருந்தது. நல்ல வேளை திருவிழா நேரத்தில் வரவில்லைஎன்று எண்ணிக் கொண்டேன். கோவிலுக்கு அருகில் 
ஒரு அரும்பொருட்காட்சியகம் இருந்தது.அதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய மாதாவுக்கு  செலுத்திய காணிக்கைகளை காட்சிக்கு 
வைத்திருந்தார்கள். சும்மா இல்லை. செப்பு, வெள்ளி, தங்கம் உட்பட அனைத்தும் இருந்தன. கால், கை எனத் தங்களுக்கு எந்த நன்மை கிடைத்ததோ அதன் அடையாளத்தில் தங்கத்தால் கூட 
செய்து அளித்திருந்தார்கள். நிறைய தங்கம் வெள்ளியிலான குட்டி வேளாங்கண்ணிக்  கோவில்களும் இருந்தன.     யார் எதற்காக அளித்தார்கள் என்ற விபரமும் கீழே எழுதப்பட்டிருந்தன.

எப்போதும் உருவங்களைவிட அருவங்களில் மனிதர்களுக்கு நம்பிக்கை அதிகம். சக மனிதனை நம்புவதைவிட கண் முன் படாத கடவுளை நம்புவது அவனுக்கு எளிதாக இருக்கிறது. சக மனிதன் ஏமாற்றுவதைப் பார்த்திருப்பதனால் அவனை முழுமையாக நம்ப முடியாதுதான். ஆனால் 'முன்னப்பின்ன' பார்த்திராத கடவுளை எப்படி இப்படி முழுமையாக நம்புகிறார்கள்? தான் கடவுளை வேண்டி அது நடந்துவிட்டால் அவரின் கருணையை போற்றிப் புகழ்ந்து கோவிலே கட்டுகிறான். காசை இறைத்து காணிக்கை செலுத்துகிறான். நடக்காவிட்டால் அது தன தலைவிதி என்று இருந்துவிடுகிறான். கடவுளை அதிகமாக திட்டுவதில்லை. பயம்! காலம் காலமாக ஆண்டான் அடிமை சமுதாய முறைமையில் வாழ்ந்து வந்த பரம்பரை அலகு அவனை அப்படி செய்யவைக்கிறது. இப்போது பெயர் சற்று மாறியிருக்கிறது. ஆண்டவன் அடிமை! என்னைப் பொறுத்தவரையில் முடிவே இல்லாத சொத்துக்களை வைத்துக் கொண்டு நாம் நோன்பிருந்து செபித்து தவமிருந்து கேட்டால் எதோ பார்த்து தரும் அல்லது கிள்ளித் தரும் கடவுளின் எந்தப் பெரிய வரத்தையும் விட சக மனிதன் தான் உழைத்து  தரும் ஒரு சோற்றுப் பருக்கை வானமளவு பெரியது என்பேன்.  
 அங்கு வேறு விசேடங்கள் என்றால் கடற்கரையில் உலாவிய ஒரு ரூபாய்க்கு நம்மை ராஜவாக்கும் குதிரைகாரர்களும் நம்முடன் போட்டோ எடுப்பதற்காகவே நாள் முழுக்க ஸ்டுடியோக்களில்  கால் கடுக்க நிற்கும் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் அதாவது அவர்களின் ஓவியங்கள்!

பின்பு ஒரு தடவை எங்கள் சத்திரத்திற்கு உதயன் மாமா வந்தார். அவரும் அகதியாக கோயம்புத்தூரில் இருந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது நானும் அவருடன் வரப்போகிறேன் என்று சொல்லி அடம்பிடித்து அவருடன் கோயம்புத்தூருக்கு கிளம்பினேன். எங்களூரிலிருந்து அது ............கிலோமீட்டர் வரும். நீண்ட பிரயாணங்களில் கிடைக்கும் த்ரில்லே தனிதான். அந்நேரங்களில் நான் பஸ் சீட்டில் அமரமாட்டேன். டிரைவருக்குப் பின்னால் போய் நின்றுவிடுவேன். அவரது ஒவ்வொரு அசைவையும் அதற்கேற்ற பஸ்சின் அசைவையும் கவனிப்பேன். பஸ் டிரைவிங் எனக்கு எப்போதுமே அசகாய சூரத்தனம்தான். எப்படி பயமில்லாமல் இந்தப் பெரிய உருவத்தை ஓட்டிக் கொண்டு செல்கிறார்கள் என்று யோசிப்பேன். அக்சிலேடர், பிரேக், கிளைச் எனப் பலவற்றில் என மாறி மாறி அவரது கால்கள்  விளையாடுவதையும் கைகள் அனாயசமாக ஸ்டேரிங்கையும் கியரையும் சுழற்றி பஸ்ஸை ஒரு வளர்ப்பு பிராணி போல் திரும்ப வைப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

பிரயாணத்தில் கடந்து போகும் இடங்கள், கட்டிடங்கள், விதம் விதமான மனிதர்கள் என பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஆயிரம் விடயங்கள். உண்மையில் பிரயாணங்கள் என்பது நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம்.
நாம் ஒரு இடத்தை கற்பனை செய்து வைத்திருப்பதைவிட அவ்வூர் மக்களை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதைவிட அவை மிக வித்தியாசமாக இருப்பதை அங்கு சென்று பார்க்கும்போதுதான் 'கண்கூடாக' ariya முடியும்.

இந்தியாவில்தான் அவ்வளவு அழகான தார் ரோட்டுக்களை பார்த்தேன். நடுவில் விட்டு விட்டு போடப்பட்ட வெள்ளைக்கோடுகள், ஒவ்வொரு வளைவிலும் வளைவு வரப் போவதை சுட்டிக் காட்டுகின்ற மற்றும் இன்னபிற வீதி சமிக்கை போர்டுகள் என இலங்கையில் எங்களூரில் நான் பார்த்திராதவைகளை ரசித்தேன். அங்குதான் சிறு உடைசல்கூட இல்லாத வீதிகளை பார்த்தேன். அதுவரை ரோட் என்றாலே மனதில் சற்று உடைவுடன்தான் தோன்றும்.

பஸ் பிரயாணங்களில் சில நேரங்களில் நீண்ட பெரிய மேடுகளில் ஏறி இறங்கும்போது வயிற்றினுள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல இருக்கும். அந்தத் த்ரில் பிடிக்கும். 

நாங்கள் மதுரை டவுனூடாக செல்லும்போது ஓரிடத்தில் டிராபிக் ஜாமாக இருந்தது. ஒரு காரை சுற்றி நிறையக் கூட்டம் சேர்ந்திருந்தது. அதனால் கார் நகரமுடியாமல் திணற போலிஸ் உதவிக்கு வந்தார்கள். 

"அது ரஜனியாம்!" என்ற வார்த்தைகள் பேருந்தினுள்  இருந்த அனைவரது தலைகளையும் வெளியே நீட்ட வைத்தது. மூடப்பட்டிருந்த கார் கண்ணாடியால் யாராலும் அவரை பார்த்திருக்க முடியாது. ஆனால் அந்நேரம் ரஜனியின் காரைப் பார்த்ததற்கே பெருமைப்பட்டேன். 
சாதாரண மனிதனைவிட பிரபலத்திற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலே வித்தியாசம்தான். அவர் எங்கு போனாலும் அவராலேயே அவருக்கு அது ஏற்படும்.  

பின் நாங்கள் கோயம்புத்தூர் டவுனிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தள்ளியிருந்த மாமாவின் வீட்டை அடைந்தோம். அவர் முகாமில் இருக்கவில்லை. ஒரு மண் வீட்டில் அவரும் அவரது தம்பி செல்வராசாவும் அம்மம்மாவும் இருந்தார்கள். மண்வீடு, மண்பானை என நேரடியாக அனுபவித்தது அப்போதுதான்.
மாட்டுச் சாணத்தினால் பூசி மெழுகிய தரை. ஒரு விலங்கின் கழிவை புனிதமான சடங்குகளிற்கும்  வீடு கட்டுவதற்கும் மற்றும் இன்னபிற தேவைகளுக்கும் பாவிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

செல்வராசா மாமாவிற்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் மண்பானை எல்லாம்   போட்டு உடைப்பார். அம்மம்மா ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் போன பின்புதான் "இந்த நாசமறுப்பான் எப்பவும் இப்படித்தான். இவ்வளவு சட்டி பானைக்கும் காசுக்கு எங்கே போறது என்று தன் புலம்பலை ஆரம்பிப்பார். அம்மம்மா தன் புத்திரர்களை கடுமையாக கடிந்து நான் பார்த்ததேயில்லை. அவர் அம்மாதானே; அவர்களை அவர் தண்டிக்கலாம்தானே என்று அப்போது எண்ணுவேன். ஆனால் அதன் காரணம் பிற்காலத்தில்தான் புரிந்தது. அதனை பிற்காலத்திலேயே கூறுகிறேன்.

ஒருநாள் உதயன் மாமா தான் நெருக்கமாக பழகிய ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் குழந்தையில்லாத தம்பதியினர். உதயன் மாமாமீது ரொம்பப் பாசமாகவே இருந்தார்கள். மாமா அவர்களுடைய மரப் பட்டறையில்தான் வேலை செய்தார் என் நினைக்கிறேன். என்னையும் அவர்கள் நன்றாக வரவேற்று உபசரித்தார்கள். சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என அடம்பிடித்தார்கள். தமிழர்களின் கலாச்சாரத்தில் விருந்தினர் சாப்பாடு வேண்டாம் என்றால் அது வீட்டுக்காரரை மாபெரும் அவமானத்திற்கு உள்ளாக்கிவிடும் என்பது தங்களுக்கு தெரிந்ததே. எனவே சாப்பிட உட்கார்ந்தேன். வாழையிலையில் சப்பாத்தி வைத்தார்கள். அதனை பிய்த்து வாயில் வைத்ததுதான் தாமதம் வயிற்றுக்குள் கலவரம் மூண்டு நான் வெளியே ஓடி வந்து வாந்தி எடுத்தேன். அவர்கள் திகைத்துப் போனார்கள். 
அவர்களது தேசிய உணவை அந்நியன் நான் முதன்முதலாக சாப்பிடும்போது இப்படி நடந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? நான் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாக மாமா குறைபட்டுக் கொண்டார். அதன் பின் கொஞ்ச காலத்திற்கு சப்பாத்தியை நினைத்தாலே எனக்கு குமட்டிக் கொண்டுவரும். 

உதயன் மற்றும் செல்வராசா மாமாக்கள் மரப்பட்டறையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.அவர்கள் ஒரு கருவியால் மரக்கட்டையை தேய்க்கும்போது அதன் துகள்கள் கீழே விழுந்து படிப்படியாக அது பளபளப்பாக மாறும் அழகை ரசித்துக்கொண்டிருப்பேன். சில நேரங்களில் எனையும் உதவிக்கு அழைப்பார்கள். 

உதயன் மாமா அங்கிருப்பவர்களிடம் என்னை 'என்ர மருமகன்' என்று பெருமையாக அறிமுகப்படுத்துவார். ஆனால் நான் அப்போது யாரிடமும் கலகலப்பாக பேசமாட்டேன். சும்மா சிரித்து வைத்துவிட்டு அவர்கள் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டு 
இருப்பேன். எனக்கு சலிப்பு ஏற்பட்டாலும் வெட்டிற்கு போவதற்கு மாமாவை வற்புறுத்த மாட்டேன். பிடிக்காத இடத்திலும் பொறுமையாக காத்திருக்கும் நல்ல அல்லது முட்டாள்த்தனமான பழக்கத்தை கற்றுக் கொண்டது என் மாமாக்களிடம்தான்.

கோயம்புத்தூரில் ஒரு தடவை உதயன் மாமாவுடன் மாலைக்காட்சி சினிமாவுக்கு போயிருந்தேன்.அது முரளி நடித்த இயக்குனர் விக்ரமனின் முதல் படம். படப் பெயரே 'முதல் வசந்தம்'தான். நான்கு நண்பர்கள் வாடகை வீட்டில் வசிப்பார்கள். அவர்களுக்கு இசைத் திறமை இருந்தது. அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்பார்கள். அதே நேரத்தில் ஒரு பெண் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிவந்து அவர்களுடன் இணைந்து கொள்வாள். அவர்கள் அவளை ஆவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிப்பார்கள். இப்படத்தில் இரண்டு முக்கிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் (அதுவும் ஒரே கூரையின் கீழ்!). காதலை விட நட்பு பெரிது என்பது அடுத்தது. அதுவரை வந்த சினிமாக்களில் இந்த கருத்துக்களை வலியுறுத்தி எதுவும் வந்ததாய் ஞாபகமில்லை. தமிழ் சினிமாவில் 
'நான்கு நண்பர்கள்' கதைகளை தொடக்கி வைத்ததும் இதுதான் என  நினைக்கிறேன். ஆபாசமில்லாத பாடல் வரிகள் மற்றும் காட்சிகள், மற்றவர்களின் மனத்தைக் காயப்படுத்தாத நகைச்சுவை என விக்ரமன் என்கிற 'விக்ரமாதித்யன்' தன் தனி முயற்சியில் சற்றும் மனந்தளராமல் தொடங்கிய முதல் வசந்தம் இது. அதில் வரும் 'கெளரிக்கு திருமணம் நிச்சயமாச்சு' என்ற பாடலை இப்போது கேட்டாலும் இன்றும் அந்தத் தியேட்டரில் அமர்ந்திருப்பது போல மனதை அங்கெ இழுத்துச் செல்லும். 'என்றும் அன்புடன் விக்ரமன்' என்று கடைசியில் திரையில் விரிந்த எழுத்துக்கள் இன்னும் என் மனத்திரையில் அழியாமல் இருக்கின்றன. ஒரு படத்தில் இயக்குனரின் பங்கு மிக முக்கியமானது என அறிந்து கொண்ட முத்த நாள் அது. 

படம் முடிந்து வெளியே வரும்போது மாமா படம் பார்த்ததை தன் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றார். அவ்வளவு தைரியமான மாமாவே ஈன இவ்வளவு தூரம் மனைவிக்கு பயப்படுகிறார் என ஆச்சரியமாக இருந்தது. aththudan poi சொல்லும் திறமையும் எனக்கு இயல்பாகவே குறைவு என்பதால் உளறிவிடுவேனோ எனப் பயந்து கொண்டே வீடு திரும்பியது ஞாபகமிருக்கிறது. 

எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி சிறிய கடைக்காக கட்டப்பட்டு முன் கதவு மூடப்பட்டுக் கிடந்த ஒரு வீட்டிற்கு மாமா என்னைக் கூட்டிச் சென்றார். அதன் பின் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு பத்துப் பேர் குழுமி அமர்ந்திருந்தார்கள். 
அதில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போதே சீட்டு விளையாடத் தெரியும். ஊரில் என் நண்பர்களுடன் ஆடியிருக்கிறேன். ஆனால் இவர்கள் பணத்தை வைத்து ஆடினார்கள். போலிஸ் ரெய்டு வந்து பிடிக்கும் என்பதால் அப்பழைய கட்டிடத்திற்குள் இருந்தார்கள். மாமாவுக்கு அவர்கள் எல்லோரையும் தெரிந்திருந்தது. நடுவில் பண நோட்டுக்களும் சில்லறைகளும் பந்தயமாக வைக்கப்பட்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அதில் ஒருவர் ஐம்பது ரூபாவை என்னிடம் கொடுத்து 
"தம்பி, எல்லோருக்கும் டீயும் வடையும் வங்கிக் கொண்டு வா" என்றார். "யாரிடமும் எங்களுக்குத்தான் டீ என்று சொல்லிவிடாதே!"
ஒரு பெரிய பிளாஸ்க் தந்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது என்றாலும் அவற்றை வாங்கி வந்து கொடுத்தேன். இருபத்தைந்து ரூபா அளவில் மீதம் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தபோது "வேண்டாம் தம்பி, நீயே வச்சுக்க" என்றார். 
அங்கே உட்கார்ந்து டீயும் வடையும் சாப்பிட்டுக் கொண்டே யோசித்தேன்.தப்பான வேலையால் மட்டுமல்ல; அந்த வேலைக்கு உதவினால் கூட பணம் தாரளமாக வருகிறது. பின்னே, எனக்கு அதிகபட்சம் மாமா தருவது இருபத்தைந்து சதம்தான். அதுவும் எப்போதாவது ஒரு தடவைதான் தருவார். இது இருபத்தைந்து ரூபா...திடீரென பணக்காரனாகிவிட்டது போலத் தோன்றியது.

சில நாட்களின் பின் நானும் மாமாவும் திண்டுக்கல் சென்றோம். திண்டுக்கல் ஒரு மலை போலதொர்ரமளிக்கும் பெரிய குன்றுகளைக் கொண்ட பகுதி. முதன்முதலில் நான் அங்குதான் அவற்றைக் கண்டேன். சிறுவயதில் காலைக் காட்சியில் வழமையாக இரண்டு மலைகள் வரைந்து நடுவில் சூரியன் எழுவதுபோல வரைவேன். அதை அங்குதான் நேரில் பார்த்தேன். திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டு எனப்படும் ஊரில் அம்மாவின் தங்கைகளான 
மனியண்டியும் தேவியண்டியும் முகாமில் இருந்தார்கள். அந்த ஊருக்குள் நுழையும்போது படங்களில் பார்த்ததுபோல 'வத்தலக்குண்டு உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்றது ஒரு 'போர்டு'. 

உள்ளே நுழையும் முன் ஒரு தேநீர்க்கடையில் கோழி சோடா குடித்தோம். இலங்கையில் அப்படி ஒன்று இல்லை. சொடப்போத்தலின் வாய்ப்பகுதியின் உள்ளே காற்றுப் புகாதபடி ஒரு கோலிக்குண்டு (போளை) அடைக்கப்பட்டிருந்ததாக ஞாபகம். 

தகரம் மற்றும் சீற்ரால் ஆன நீளமாக உருவாக்கப்பட்டு அறைகளாக பிரிக்கப்பட்ட ஒரு தற்காலிக வசிப்பிடத்தில் அவர்கள் வசித்தனர்.  
முத்தநேன்தலில் நாங்கள் இருந்த விடுதி எவ்வளவோ தேவலாம் போல இருந்தது. 

ஒரு நாள் தேவிஆன்டி   எங்கேயோ போய்விட்டு வந்து தான் ஒரு சினிமா சூட்டிங் பார்த்ததாக கூறினார். 'என் ராசாவின் மனசிலே' பட சூட்டிங்கில் 'ராஜ்கிரண் மற்றும் பலரை' பார்த்ததாக கூறினார். அந்தப் பலரில் வடிவேலும் ஒருவர் என்பது பின்பு  தெரிந்தது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று அன்று முழுவதும் மனவருத்தப்பட்டேன். 

அங்கு சுள்ளி பொறுக்க எல்லோருடனும் போவதைத் தவிர வேறு எதுவும் சுவாரசியமாய் நடந்ததாக ஞாபகமில்லை.  
எனவே முத்தநேந்தலுக்கே மறுபடி போய்விடலாம்.

உதயன் மாமா என்னை மறுபடி ஊரில் விட்டுச் செல்வதற்காக மதுரைக்கு வந்தார். ஆனால் அங்கிருந்து முத்தநேந்தலுக்கு தனியே போய் விடுகிறாயா என்று கேட்டார்.முத்தனேந்தல் அங்கிருந்து முப்பத்தாறு மைல். எனக்கு தனியே பிரயாணித்த முன் அனுபவம் இருந்ததனால் சரியென தலையாட்டினேன். இருந்தாலும் அதை இப்போது நினைத்தால் கொஞ்சம் ஓவர் ரிஸ்க் எடுத்திருக்கிறோம் எனப் புரிகிறது. கொஞ்சமேன்றால் இந்தியாவின் காணாமற் போன சிறுவர்களின் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பேன்.
சரியாக முத்தநேன்தலில் பச்சை நிறுத்தி இறங்க வேண்டுமே எனப் பயந்து கொண்டே வந்தேன். ஒருவாறாக இறங்கிவிட்டேன். 

முத்தநேந்தலில் நானும் என் நண்பன் ஒருவனும் பொழுது போகவில்லை என்றால் மெய்ன் ரோட்டிற்கு அருகில்  பிரயாணிகள் அமர்வதற்காக பஞ்சாயத்தாரால் போடப்பட்டிருந்த ஒரு சீமெந்து இருக்கையில் அமர்ந்து கொள்வோம்.
நான் என் ஊர் ரோட்டுக்களில் இவ்வளவு வாகனங்களைப் பார்த்ததில்லை. இரண்டு பெரும் ஆளுக்கொரு வாகனத்தை தெரிவு செய்வோம். அதாவது எனக்கு பஸ் என்றால் அவனுக்கு லாரி. குறிப்பிட்ட நேரத்திற்குள் பஸ் அல்லது லாரியில் எது அவ்வீதியால் அதிகமாக செல்கிறது என எண்ணிக்கொண்டிருப்போம். ஒரு பஸ் அல்லது லாரி வர வர எண்ணிக்கை கூடிக் குறைய  எவ்வளவு சுவாரசியமாய் இருக்கும் தெரியுமா?

ஒருநாள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் கொஞ்சம் மூட்டை முடிச்சுக்களுடன் 
வந்து எங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கத் தொடங்கினார். சற்று நேரத்தில் பஸ் வந்தது.
நின்றது. அவர் அவசர அவசரமாக பஸ்ஸினுள் ஏறினார். 

"தம்பி, அந்தப் பைகளை எல்லாம் எடுத்துத் தா..."என்றார் அங்கிருந்தே.
இங்கு ஒரு விஷயம். இலங்கையில் முன்பின் தெரியாதவர் என்றால் அது சிறுவர்கள் என்றாலும் 'நீங்கள்' என்று மரியாதையாகத்தான் அழைப்போம். எனவே எனது கோணத்தில் அவர் மரியாதையில்லாமல் அழைத்தது மட்டுமல்லாமல் எதோ வேலைக்காரன் மாதிரி 
வேலை செய்யச் சொல்கிறாரே எனப்பட்டது. ஆனால் அந்த உதவி செய்வது பெரிய காரியமல்ல என்பதனால் இருவரும் இருந்த மூட்டை முடிச்சுக்களை பஸ்ஸினுள் ஏற்றினோம். பஸ் புறப்பட எத்தனிக்க,"தம்பி, இந்தா..." என அவர் என் கையில் ஏதோ வைத்து அழுத்தினார்.
பஸ் போனபின்தான் பார்த்தேன். அது ஒரு ரூபாய் நாணயம்! அடப்பாவமே...!அவர் எங்களை கூலிக்கு பொதி தூக்கும் சிறுவர்கள் என நினைத்துவிட்டார். இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போது எங்கள்  ஊருக்கு அருகில் இருக்கும் வைகை  ஆற்றுப் பாலத்தடி சம்பவங்கள்.அந்தப் பாலத்தில் வைத்துத்தான் என் நண்பன் ஒருவன் என் முன்பால் மிதப்பை வைத்து எனக்கு இலவசமாக பட்டமளித்தான். "போடா...நீ ஒரு பல்லன்" என்றான்.

அந்தப் பாலம் தொடங்கும் இடத்தில் உயரம் குறைவாக இருக்கும். அங்கிருந்து மணலில் குதித்து விளையாடுவோம்.அந்த உயரம் என் வயதிற்கு அதிகமுமில்லாமல் குறைவுமில்லாமல் இருந்ததனால் ஒவ்வொரு முறையும் பாயும் ஒரு 'த்ரில்' உடல் முழுவதும் பரவும். ஈர்ப்புச் சக்தியை வெல்லும் ஆசை எப்போதும் மனிதனின் அடி மன ஆசை என நினைக்கிறேன்.

அந்தப் பள்ளத்தின் கீழ்தான் என் நண்பன் பந்தயத்திற்காக யாருமில்லை என்ற தைரியத்தில் சேட், டவுசர் இரண்டையும் கழற்றினான். மற்றொருவன் அந்த உடுப்புக்களை பறித்துக் கொண்டு ஓட இவன்
நிரானமாக துரத்தியதை பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரித்ததும் நடந்தது. 

ஆனால் அப்பாலத்தை வாழ்க்கையில் மறக்க முடியாதவாறு என் வாழ்க்கையோடு விதி விளையாடிய சம்பவமும் நடந்தது. 

அப்போது ஆற்றில்  வெள்ளம் கரை புரண்டோடியது. எங்களுக்கு சந்தோசம் கரை புரண்டோடியது. வைகை செல்லும் நீரோட்டத்தில் மக்கள் கரைகளில் குளிக்க ஆரம்பித்தார்கள்.நாங்களும் களத்தில் இறங்கினோம். 
பல நண்பர்கள் கரையோரத்திலேயே பயத்துடன் குளிக்க எங்களில் சிலருக்கு கடலில் குளித்த அனுபவம் இருந்ததனால் தண்ணீரில் நன்றாக முன்னேறி நீந்தினோம். ஒரு இடத்தில் நீந்தி வந்த ஒருவர் தான் கடந்து வந்த இடத்தைக் காட்டி "அங்கே போக வேண்டாம்...சரியான ஆழம்...!"என்றார்.  ஆனாலும் பலர் அந்த இடத்தில் நீந்தினார்கள்.
ehDk; tpjp miof;f mq;NfNa gha;e;J ePe;jj; njhlq;fpNdd;. gpd; ePr;riy epWj;jp epd;W vt;tsT Mok; vd;W fhiy tpl;Lg; ghHj;Njd;. epyj;ijNa fhNzhk;! Mokwpahky; fhiy tpl;Ltpl;Nlhk; vd mg;NghJjhd; Ghpe;jJ! neQ;R glglf;f Muk;gpj;jJ. me;j mz;zh vd;idg; ghh;j;J 'Nla;> eP Vz;lh mq;Nf Nghdha;? rPf;fpuk; ,e;jg; gf;fk; th..." vd;whh;. mth; mg;gbr; nrhd;dJjhd; jhkjk; vdf;Fs; KOikahf tpahgpj;jJ. fhy; if vy;yhk; tpiwj;Jtpl;lJ போலிருந்தது. என்றாலும் பயப்படாதவன் போல காட்டிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தாவினேன். ஓரிடத்தில் மணல் கால்களில் தட்டுப்பட்டது. ஆனால் அது சரிவாக இருந்தபடியினால் நான் கால் வைத்ததும் sariya ஆரம்பித்தது. மூழ்க ஆரம்பித்தேன். உண்மையில் நான் இன்னும் கொஞ்சம் தாவியிருந்தால் இலகுவாக மேட்டுக்கு வந்திருப்பேன். ஆனால் இந்தப் பயம் இருக்கிறதே...அம்மாடி!
அந்தப் பயத்தை நினைத்தால்தான் இன்னும் பயமாக இருக்கிறது. அந்தக் கணத்தை இப்போது கற்பனை செய்தாலும் மூச்சுத் திணறும்.    
காலை வைக்க வைக்க மணல் இன்னும் சரிந்து என்னை இன்னும் உள்ளே இழுக்க ஆரம்பித்து.

"அண்ணா...! ennaip..." என் வாய் மட்டத்தை தண்ணீர் மூடிவிட கையால் மேல் நீர்பரப்பை அடித்தேன். நல்லவேளை, அந்த அண்ணன் பாய்ந்து வந்து என் கையைப் பிடித்து இழுத்து ஏற்றிவிட்டார். udane கரையேறினேன். வீட்டில் சொல்ல வேண்டாம் என avaraik கேட்டுக் கொண்டேன். இதுவரைக்கும் என் வீட்டாருக்கு தெரியாது. ஆறு வடிந்த பின் அந்த இடத்தை போய் பார்த்தேன். நான்கைந்து பெரியவர்களை மூழ்கடிக்கும் அளவு ஆழமான பள்ளமது. எனக்கு மெய் சிலிர்த்தது.
appothellaaam புகைப்படத்தின் மகத்துவம் அறியாமல் இருந்தேன். கமெரா போல கால இயந்திரம்எதுவுமில்லை. நான் சிறுவயதில் அனேகமாக போட்டோவே  எடுத்ததில்லை.  பொதுவாக என் வீட்டில் நான் பிறந்ததில் இருந்து எதுவித விசேட வைபவங்களும் இடம்பெறவில்லை. athanaal அதில் எடுக்கப்பட்டிருக்கக் கூடிய சிறுவயதுப் போட்டோக்களும் இல்லை.
நான் குழந்தையாக தவழுகையில்  (எங்கள் ஊரில் இதனை உடும்பு பிடிப்பது என்பார்கள்) ஒரு shrudiyoovil eduththa படம் irunthathu.அதில் அழகாக கொழு கொழுவென இருந்தேன்.அதுவும் அதன் முக்கியத்தை உணர்ந்து பத்திரப்படுத்துவதற்குள் கால 
ஓட்டத்தில்  காணாமல் போய்விட்டது.   என் வாழ்வின் மிகப் பெரிய துக்கங்களில் அதுவும் ஒன்று. மறுபடி குழந்தையாகி தவழ்ந்தா ஒரு போட்டோ எடுக்க முடியும்?  காலத்தைப் போல இரக்கமில்லாதவனை உலகில் காணமுடியாது. 

குணமண்ணா  ஒரு தடவை ஒரு கமெரா கிடைத்து தன நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கமெரா என்பது கிடைத்தற்கரிய பொருள். அது கிடைத்ததனால் குணமண்ணா  என்னையும் சாந்தனையும் தங்கச்சியையும் மொட்டிமாடிக்கு ஓடச் சொன்னார். 
அங்கு எங்கள் மூன்று பேரையும் ஒன்றாக நிற்க வைத்து படமெடுத்தார். அதுதான் இப்போது என் கைவசம் இருக்கும் என் மிக வயது குறைந்த பழைய போட்டோ. அதை பார்க்கும் போது மனிதனின் வளர்ச்சிப் பரிமாணங்களின் யதார்த்தம் உறைக்கும். இப்படியா நான் முன்பு இருந்தேன்?!
சில மாதங்களின் பின் எங்கள் பஞ்சாயத்து அலுவலகம் சிறிய போலீஸ் ஸ்டேசனாக மாறியது. டிவி மட்டும் அதே ஜன்னலுக்கு அருகில் இருந்து தரிசனம் தந்தது.
போலீஸ்காரர்களை வெகு அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சில நேரங்களில் எங்களை டீ வாங்கி வரச் சொல்வார்கள். அப்போது உள்ளே சாத்தியிருக்கும் நீளமான குழல் துப்பாக்கியை பார்ப்பேன்.இலங்கையில் a.k.47 போன்ற அதி நவீன ஆயுதங்களை கண்டிருந்தாலும் இதனைக் கண்டதில்லை.
இது போலிசாருக்காகவே உருவாக்கப்பட்டது போலும். பிற்காலத்தில் இலங்கை  போலிசும்  அதை வைத்திருக்கக் கண்டேன். அங்கே கைதிகளை
அடைத்து வைக்க ஒரு செல் மட்டுமே இருந்தது.

அங்கு நர்சரி பள்ளியில் சத்துணவு வழங்குவது வழமை. அந்தப் பாடசாலையில் சத்துணவு பற்றிய கணக்கு வழக்குகளை சரிபார்க்க வந்த பரிசோதகர் ஒருவர் கணக்கில் என்ன பிழை கண்டாரோ அவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். ஆசிரியையும் கொடுத்திருக்கிறார். அவர் போனவுடன் ஆசிரியை நேராக பக்கத்திலிருந்த இப் போலிஸ் ஸ்டேசனில் முறையிட்டு விட்டார். தமிழ் நாட்டு போலிஸ் அல்லவா? சும்மா விடுமா? உடனடியாக செயற்பட்டு மானாமதுரைக்கு பேருந்தில்  போய்க் கொண்டிருந்த  அந்த அதிகாரியை
மானாமதுரைக்கு போவதற்கு முன்பே இடைமறித்து கைது செய்தது.
செல்லில் அடைத்து வைத்திருந்த அவரை ஆசிரியை அடையாளம் காட்டவோ என்னவோ வெளியே இழுத்து வந்தனர். ஆம்! இழுத்துத்தான்! உள்பனியனும் ஜீன்சுமாக அவர் நின்றார். நிறைய அடி வாங்கிய அறிகுறிகள் உடலில் தெரிந்தன. மக்கள் எல்லோரும் குழுமி
நின்று பார்த்தோம். அப்படி ஒரு காட்சியை சினிமாவை அடுத்து நேரில் பார்ப்பது அப்போதுதான் என்பதனால்
எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது.

அந்த ஆசிரியை அவருக்கு அருகில் வந்து "ஆமா சார்...இவன்தான்!" என்றபடி அவரது முகத்தில் காறித் துப்பினார். அந்த எச்சில் அவரது முகத்தில் வழிந்தது. அதை துடைக்கக் கூட உணர்வில்லாமல் எங்கோ வெறித்தபடி நின்ற
அவரது கண்கள் என்னை என்னவோ செய்தது. ஜேசுநாதரை இப்படித்தான் இழுத்து வந்து கசையடி கொடுத்து அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள் என்று சிறுவயதிலிருந்தே
கேட்டு வளர்ந்ததனால் என்னவோ எனக்கு கைதிகள் என்றாலே இரக்கம் வந்துவிடும்.  அதிலும் இச்சந்தர்ப்பத்தில்
நாகரீகமில்லாமல் முகத்தில் உமிழும் தமிழ்நாட்டுப் பழக்கத்தை அடியோடு வெறுத்தேன். அவர் குற்றமே செய்திருந்தாலும்
அவரை அடித்து நிர்வாணப்படுத்த பொலிசாருக்கோ அல்லது காரித்துப்பி அவரை அவமானப்படுத்த அந்த ஆசிரியைக்கோ கடுகளவும் உரிமையில்லை. அத்துடன் லஞ்சம் வாங்குவது குற்றமென்றால் கொடுப்பதும் குர்ராம்தானே? ஆசிரியையும் பிடித்து அடித்தால் என்ன என்று தோன்றியது.
   
இன்னொரு நாள் எண்கள் ஊருக்கு ஒரு நாடகக் குழு வந்தது. அது 'அறிவொளி' இயக்கம்.
கல்வியின் மகத்துவத்தை கிராமங்கள்தோறும் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது.
அதைப்பற்றி பத்திரிகைகள் வாயிலாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவர்கள் நடுவீதியில் நின்று 'அன்பே சிவம்' படத்தில் வருவது போன்ற கூத்து நடத்தினார்கள். ஆனால்  அது சமூக நாடகம்தான்.  ஒருவர் இன்னொருவரிடம் வந்து "ஐயா, இந்த பஸ் எங்க  போகுது சொல்லுங்கையா?"
என்பார். அதற்கு அடுத்தவர் "ஏன் உங்களுக்கு கண் குருடா?"என்பார். அதற்கு அவர் " ஆமாய்யா, நான் ஒரு குருடந்தான்ய, அறிவுக் கண்ணில்லாத குருடன்யா..."என்பார். தொடர்ந்து பாடல் ஒலிக்கும்.

"கண்ணிருந்தும் குருடராகிப் போனோமே,
காதிருந்தும் செவிடராகிப் போனோமே,
வாயிருந்தும் ஊமையாகிப்  போனோமே,
inthak கல்வி எனும் அறிவொளி இல்லாததாலே..."

என அது தொடரும். உண்மையில் அறிவொளி இயக்கம் மிகத் திறனுடையதாக செயற்பட்டதை பின்பு கேள்விப்பட்டேன். இந்தியாவைப் போன்ற எழுத்தறிவு குறைந்த நாடுகளுக்கு இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டாயம் தேவை. அதற்கான மிக நேரடியான ஊடகமாக இக்கூத்து வடிவம் பயன்படுத்தப்பட்டமை சாலச் சிறந்ததாகும். அதுவும் இந்த அறிவொளி இயக்கத்தில் சம்பளமில்லாமல் பல தொண்டர்களே தங்கள் நேரம், பணம், சக்தி ஆகியவற்றை செலவழித்து சேவை  செய்தமை enakkuஆச்சரியமளித்தது.  
இன்னொரு நாள் இன்னொரு 'கூத்தாடிக் கூட்டம்' எங்கள் ஊருக்கு வந்தார்கள். ஆம்.அப்படித்தான் அவர்களை ஊரில் அழைத்தார்கள். நான் அவர்களது ஆட்டம் தொடங்கிய பின்புதான் சத்திரத்தை விட்டு வெளியே வந்து பார்த்தேன். பெரியவர்களும் சிறியவர்களுமாக ஐந்தாறு பேர். கலர்கலரான ஆடைகளுடன் டேப் ரேக்கொர்டரில் போட்ட பாடல்களுக்கு ஆடினார்கள். summaa sollak koodaathu. 
அச்சு அசலாக ஆடினார்கள். அதில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் என்னைக் கவந்தார்கள். அவர்கள் இதற்காகவே பிறந்து வளந்தவர்கள் போல ஆடினார்கள். பிறகுதான் தெரிந்தது. உன்மையிலேய பிறந்ததிலிருந்தே இதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். பிறந்ததிலிருந்தே ஸ்கூல் 
பக்கமே போனதில்லையாம்.அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்பா, அம்மா,மகன், மகள், மாமா என அத்தனை பேரும் ஒரே தொழிலாக அதுவும் ஊர் ஊராக (வீடே இல்லாமல்) இப்படி ஆடிப் பாடி பிழைக்கிறார்கள்.

  அவர்களது வீடு எது தெரியுமா? ஒரு குதிரை வண்டில். அவர்களது மொத்த சொத்தே அவ்வளவுதான் அந்த veeddil இருந்தபடிதான் அச்சிறுவன் தங்களைப் பற்றி
எனக்கு பேட்டி தந்தான்.எனக்கு என்னவோ அவனிடம் பேசுவதே பெருமையாக இருந்தது. இலங்கையர்கள் என்றதும் அவனும் ஆர்வமாக பேசினான்.
உலகம் பூராவும் திறமைசாலிகள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அதற்கு அதிஷ்டம் தேவை.அதிஷ்டம் எல்லோருக்கும் கிடைத்தால் அதன் பெயர் அதிஷ்டமல்ல.

இந்தியாவுக்கு வந்த அடுத்த நாளிலிருந்தே நாம் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற கேள்வி மனதில் எழுந்து கொண்டேயிருந்தது உண்மைதான்.
நாட்கள் மாதங்களாகி வருடமாகியும் இன்னும் நாங்கள் இந்தியாவில்தானே இருக்கிறோம். என் நாம் இன்னும் திரும்பிப் போகவில்லை; ஒரு வேலை திரும்பி போகவே மாட்டோமோ என்றெல்லாம் சிந்தனை ஓடும். அப்போது நாங்கள் கிட்டத்தட்ட கைதிகள் போலத்தான் இருந்தோம். அரசாங்கத்தின் கைகளில்தான் எல்லாம் இருந்தன. அவர்கள் அனுப்பினால்தான் உண்டு.

பாப்பாவுக்கு சிவகங்கையில் வேலை கிடைத்திருந்தது. அவருக்கு வேலையும் இந்தியாவும் பிடித்துக் கொண்டதோ என்னவோ இலங்கைக்கு திரும்புவதில் அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மூத்த அண்ணாவோ திரும்புவதற்கு துடித்துக் கொண்டிருந்தார். enkalin padippu kulampukirathu.
இலங்கைக்குப் போனால் செட்டிலாகலாம்; இந்தியா சரிப்படாது என்றெல்லாம் பாப்பாவுடன் வாதிடுவார்.         

நாங்கள் இந்தியாவுக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும். திடீரென ஒரு நாள் இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

உடனடியாக periyannan எங்கள் குடும்பத்தின் பெயரை பதிந்தார். மறுபடி இலங்கைக்கு திரும்புவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு பிரயாணங்கள் pidikkum என்பதனால் பிரிவுகளை கணக்கெடுப்பதில்லை.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் நாங்கள் மீண்டும் மூட்டை முடிச்சுடன் தயாரானோம். நாங்களும் இன்னும் சில குடும்பங்களும் laarikalil ஏறிக்கொண்டோம்.
எங்களை வழியனுப்புவதற்காக சத்திரத்து சனங்கள்  வெளியே நின்றார்கள். புறப்பட முன் நான் என் நண்பன் ஒருவனுக்கு என்னிடமிருந்த 50 பைசாவை நினைவுப்நாங்கள் raameshvaraththilirunthu kappalil pokap pokirom enak ku santhosam thaankavillai. aanaal athu naan ninaiththa alavukku piramaaandamaaka irukkavillai.
 பரிசாகக் கொடுத்தேன்.


ehq;fs; uhNk];tuj;jpypUe;J fg;gypy; Nghfg; Nghfpd;Nwhk; vd;W Nfs;tpg;gl;L vdf;F re;Njhrk; jhq;ftpy;iy. Mdhy; mJ ehd; epidj;jsT gpukhz;lkhf ,Uf;ftpy;iy. MdhYk; %d;W jl;Lf;fisf; nfhz;l fg;gy; jhd; jkpo;ehL KOtJk; ,Ue;jJ. jpUk;gp Nghtjw;F gjpe;j midj;J mfjpfisAk; Vw;wpf; nfhz;L fg;gy; Gwg;gl;lJ. ehq;fs; te;j gaq;fuj;ijAk; NghFk; uhahq;fj;ijAk; vz;zp rpupj;Jf; nfhz;Nld;. te;jhiu thoitf;Fk; jkpo;ehL vq;fis thoitg;gjpy; jtwtpy;iy vd;gJ cz;ikjhd;. Vw;fdNt rdj;njhif mjpfupg;ghy; Vo;ikapy; thLk; jkpo;ehl;bd; rdj;njhifapy; ehq;fSk; jpBnud xU mjpfupg;igf; fhl;bdhy; vg;gb ,Uf;Fk;. mJTk; tpUe;jhopfshf! ,e;jpah;fs; czh;r;rp trkhdth;fs;. md;NghL cgrupg;ghh;fs; my;yJ mupthisj; Jhf;Fthh;fs;. ve;j czh;r;rpahdhYk; cr;r gl;rk; ntspg;gLj;Jthh;fs;. mth;fSlhd rkhh; ,uz;L tUl tho;f;if vd; ghh;itfis tprhyg;gLj;jpaJ.
,e;jpah ,yq;iff;F ntspehL vd;whYk; mij ntspehL vd;W ehq;fs; nrhy;tjpy;iy. Vnddpy; ntspehL vd;whNy thdk; njhpAk; khspiffSk;12 mLf;fpitf;fg;gl;l jPg;ngl;bfs; Nghy efUk; fhh;fSk; b]; G]; vd;w Mq;fpyk; NgRk; nts;is kdpjh;fSNk kdjpy; tUtjhy;> fpl;lj;jl;l vq;fs; ehl;ilg; NghyNt ,Ue;j ,e;jpahit ntspehL vd kdJ Vw;f kWf;fpd;wJ. Rk;kh N[hf;fhf ehq;fSk; ntspehL NghNdhk; vd;W nrhy;ypf; nfhz;Nlhk;. me;j fg;gypy; Vwp uhNk];tuj;jpypUe;J jiykd;dhiu te;jile;Njhk;. mq;Nf vy;NyhUf;Fk; ghZk; gUg;Gf; fwpAk; toq;fg;gl;lJ. mtw;iw ey;y grpahy; Urpj;Jr; rhg;gpl;lJ QhgfkpUf;fpd;wJ. gpd; xUthwhf kd;dhhpypUe;j vq;fs; tPl;il te;jile;Njhk;. ,e;jpahtpypUe;J jpUk;gpaJk; ehd; vl;lhk; Mz;by; ,uz;lhk; jtizapy; ghlrhiyf;Fr; Nrh;e;Njd;. Mdhy; ,e;jpahtpw;F Ngha;te;j Mz;Lf; Fog;gj;jpy; xd;gjhk; Mz;L gbf;f Ntz;ba ehd; vl;lhk; Mz;by; ,uz;lhk; jtizapy; ghlrhiyf;Fr; NruNtz;bajhapw;W. mjdhy; vd;dld; rpWtajpypUe;J gbj;j vd; ez;gh;fis ,oe;Njd;. mdhy; GJ ez;gh;fs; epiwag;Ngh; fpilj;jdh;.
ehq;fs; Kd;gpUe;j gioa Fthl;l]pNyNa jq;fpNdhk;. ,e;jpahtpw;Fg; Ngha; te;jJk; VNjh xU tifapy; ehd; tFg;gpypUe;j kw;wth;fistpl nghpatd; vd;w czh;T te;jJ. Mdhy; ,e;jpahtpw;g; Ngha; te;jJ ngUik kl;Lky;yhky; rpy Neuq;fspy; mJ NfypAk; nra;ag;gl;lJ.
rpyh; ehq;fnsy;yhk; ,q;Nf ,Ue;jk; jhNd> nrj;jh Ngha;tpl;Nlhk;? vd;whh;fs;. mjw;f ehq;fs; ,e;jpahitg; ghh;g;gjw;F ,ijtpl;lhy; kypthf xU re;jh;g;gk; fpilf;Fkh? ePq;fs; mjid ,oe;J tpl;Bh;fs; vd thjpl;Nlhk;. cz;ikapy; ,e;jpahitg; ghh;f;f Ntz;Lk; vd;w MtYk; mfjpfshf gilnaLj;j fhuzq;fspy; xd;W vd;why mij ahuk; gWf;f KbahJ.
,d;ndhd;W vq;fs; khwpg;Nghd Ngr;R nkhop ehd; ,yq;if te;jhYk;  mJ rhpahf gjpyopf;fhky; nyhwpia yhhp vd;Nwd;> xgPir MgP]; vd;Nwd;> ,J Nfypf;F cs;shdJ. gpd; Nghfg; Nghf mJ gioa FUbf;fj; jpUk;gpaJ.
ghlrhiyapy; Mrpupaiuj; rhh; vd;W miof;fj;jhd; tha; te;jJ. fug;gl;L Nrh; vd;Ngd;. mtUf;F mUfpy; NghdTlNdNa iffs; gof;f Njhrj;jpy; fl;bf;nfhs;Sk;. ey;y Ntis mjid ahUk; ftdpf;ftpy;iy. cz;ikapy; MrpupaUf;F mUfpy; epw;Fk;NghJ if fl;lhky; epw;gJ VNjh jtW nra;tJ Nghy mg;NghJ Njhd;wpaJ. gpd;G mJTk; khwpg; NghdJ.

vl;lhk; Mz;by; vdf;F tujuh[d;> nwhf;rd; vd ,Uth; ez;gh;fshdhh;fs;. ,UtUNk jho;TghL fpuhkj;ijr; Nrh;e;jth;fs;.
tujuh[d; xy;ypaha; ,Ug;ghd;. nwhf;rd; eLj;juk;. ,Uspy; MW fpNyhkPw;wh; njhiytpypUe;J jq;fs; CupypUe;J irf;fps; ,y;yhJ nry;fpd;wdh; vd;gJ Mr;rupag;gl itj;jJ. fpuhk ghlrhiyfspd; Jujplk; vd;dntd;why; mq;Nf Mrpupah;fk Nghfj; jahuhthh;fs;> mjdhy; gps;isfSk; Nghfj; jahuhthh;fs;. trjpfisj; NjLtJ kdpj ,ay;G vd;gjhy; ey;y fy;tp fpilf;Fk; vd;w ek;gpf;ifapy; jq;fs; ed;whf gbf;ff; $ba gps;isfspy; Vd; ,e;j rpd;dg; gs;spf;$lj;jpy; gbf;f itj;J mth;fs; gbg;ig tPzhf;f Ntz;Lk;> vd ngw;Nwhh; vz;Zfpwhh;fs;. ,jdhy; fpuhkj;J ghlrhiyfspd; tsh;r;rp ntFthfg; ghjpf;fg;gLfpd;wJ. fpuhkq;fspypUe;J efuj;Jf;F te;J ghh;j;jth;fs; NtiyAk; efuj;jpNyNa fpilf;f mq;NfNa jq;fptpLfpd;whh;fs;. fpuhkk; NtW topapy;yhky; njhlh;e;Jk; mq;NfNa ,Uf;fpd;wJ.
mJNghf tujdk;> nwhf;rDk; Fzj;jpy; NtWgl;lth;fs;. tujd; nfhQ;rk; nkd;ikahdtd;> nwhf;rd; nfhQ;rk; Kuld;. xNu Ch; vd;gjhy; ez;gh;fsha; ,Ue;jhh;fs; vd epidf;fpd;Nwd;.Vnddpy; gpd;dhspy; tujd; nwhf;rDld; rz;il gpbj;Jf;nfhz;L xd;gjhk; Mz;bypUe;J gjpndhuhk; Mz;Ltiu mtDld; Ngrhky; ,Ue;jhd;. tujDld; nwhf;rd; NgRtjpy;iy vd;w xNu fhuzj;jpw;fhfNt ehDk; mtDld; Ngrtij epWj;jptpl;Nld;. ,jw;F vd;d cstpay; fhuzk; ,Uf;f KbAk; vd ,d;Wk; Ghpatpy;iy. rpyNtis vdf;F nwhf;rdpd; el;igtpl tujdpd; el;G gpbj;jjhf ,Ue;jpUf;f Ntz;Lk;. mjhtJ mtdJ md;ghd Nghf;F gpbj;jpUf;fyhk;.
nwhf;rd; ey;ytd;jhd; vd;whYk; mtDila rw;Nw myl;rpag;Nghf;Fk; rw;Nwwf;Fiwa cs;s jw;ngUikf;FzKk; mtdpy; vdf;Fg; gpbf;fhjitjhd;. kw;wth;fis kl;le;jl;bg; NgRgth;fis vdf;Fg; gpbg;gNjapy;iy.
Mdhy; mth;fs; ,Utupd; vjph;fhyk; ehd; epidj;jjpw;F vjph;khwhf ,Ue;jJ. ,ij vOJk; Neuk; nwhf;rd; ghjpupahh; mfptpl;lhd; my;yJ Mfptpl;lhh;. tujd; ghjphpahh; mtjw;F KOikahf Kaw;rpj;Jf;nfhz;L ,Uf;fpd;whh;. ehd; mbf;fb tujDld; ciuahl jho;Tghl;bw;Fr; nry;Ntd;. ehd; mbf;fb tujdpd; Cuhd jho;Tghl;bw;Fr; nry;Ntd;. jho;TghL rpwpa XusTf;F mofpa fpuhkk;. flYk; fly;rhh;e;j kzYk; njd;id kuq;fSk; mjd; kf;fspd; tpj;jpahrkhd Ngr;Rtof;Fk; vdf;Fg; gpbf;Fk;. ehd; ,Ue;j cg;Gf;Fsj;jpypUe;J jho;TghL Rkhh; vl;Lf; fpNyhkPw;wh; tUk;. Rkhh; ,uz;L fpNyhkPw;wh; ele;J te;J g]; vLj;J mq;F nrd;Nwd;.
Kjd; Kjyhf ehd; jho;Tghl;bw;fg; NghdJ QhgfkpUf;fpd;wJ. g];]py; epd;W ,wq;fp ehd; tujdpd; tPl;bw;F mq;F epd;wth;fsplk; top Nfl;Nld;. mq;F vy;NyhUf;Fk; tujdpd; tPL njhpe;jpUe;jJ. fpuhkj;jpy; trpf;Fk; rpWtdpd; ngah;$l kw;wth;fSf;F njhpe;jpUf;fpd;wJ. efuj;jpw;fk; fpuhkj;jpw;fk; mJjhd; tpj;jpahrk;. gf;fj;J tPl;by; gj;J tUlkhf tho;e;jhYk; fzgjpah? mg;gb xUtiu vq;fSf;Fj; njhpahNj vd;gh;fs; efu thrpfs; kw;wth;fspd; tplaq;fspy; %f;if Eisf;f$lhJ vd;whPjpapy; ,J rhp vdg;gl;lhYk;> rpy czh;Tt+h;tkhd cwtj; Njitfis gy Neuq;fspy; G+h;j;jp nra;a,ayhky; Ngha;tpLfpd;wJ. tujdpd; tPl;by; mk;kh >mg;gh> mz;zh vd FLk;gnk tuNtw;fpd;wJ. ehd; jdpNa xU rKjha mq;fj;jpduhf kjpf;fg;gl;lJ mJjhd; Kjy; jilt. vl;lhk; Mz;L gbf;ifapy; mJ xU tpj;jpahrkhd mDgtk;. tujd; gpd; vd;idflw;fiuf;F $l;br; nrd;whd;. miyghAk; fliyg; ghh;j;Njhk;. gs;spf;Flhtpy; ghh;j;jgpd; ,q;Fjhd; me;j miyghAk; fliy kWgbAk; ghh;j;Njd;. ehd; mq;fpUe;J jpUk;gk; NghJ tpiy cah;e;j fUthlfisg; ghh;ry; gz;zpj; je;jdh;. gzk; thq;f kWj;J tpl;ldh;. fpuhkq;fspy; md;gpdhy; ,g;gbAk; elf;Fkh?! vd vd;idNa Nfl;Lf; nfhz;Nld;. gpd; xt;nthU KiwAk; tUk;NghJk; fUthL> ,why;> gdq;fha; gpdhl;L Nghd;wtw;iwj; je;JtpLthh;fs;. Mdhy; ehd; mq;F NghFk; NghJ VjhtJ thq;fpg; Nghf Ntz;Lk; vd;w r%fkakhf;fy; vdf;F ntFfhykha; ,y;iy.
rpi Neuq;fspy;fs; nwhf;rd; tPl;bw;Fg; NghNtd;. mNj ftdpg;G> cgruiz.
,dp me;j ghlrhiyapd; kwf;f Kbahj Mrpupah;. mjhtJ vd; Qhgf rf;jpapd; msTf;Fl;gl;l tifapy; nrhy;yptpLfpd;Nwd;.

ehd; Mwhk; Mz;by; rp tFg;gpy; Nrh;f;fg;gl;ljhy; VO> vl;L vd cah;e;jhYk; rp kl;Lk; tpl;Lg; Nghftpy;iy. rpy ghlrhiyfisg; Nghy gbg;Gj; juj;ij itj;Jg vq;fis; gpupf;ftpy;iy. vd;Wjhd; ghlrhiy.. ntFfhyk; epidj;jpUe;Njd;. Mdhy; mJ jtW vd;W ,g;NghJ gLfpd;wJ.

 தவணைப் பரீட்சைகள் எல்லா ஊருக்கும் பொதுவாக நடக்கும். ஆனால் ஒரே நேர அட்டவணைப்படி நடப்பதில்லை. ஒருதடவை ஒரு மாணவன் அடுத்த நாள் நடக்கப் போகும் பரீட்சை பேப்பரை முதல் நாள்  இன்னொரு பாடசாலையிலிருந்து கொண்டு வந்து அதன் விடைகளைத் தேடிக் கொண்டிருந்ததான்.